Thursday, July 7, 2022

797. நண்பனின் கோபம்!

"உங்கிட்ட எவ்வளவோ நல்ல விஷயம் இருக்கு. ஆனா ஒரே ஒரு வேண்டாத விஷயமும் இருக்கு!" என்று நாகராஜனுக்கு நெருங்கியவர்கள் சிலர் அவனிடம் பலமுறை கூறி இருக்கிறார்கள்.

அவர்கள் குறிப்பிட்டது முரளியிடம் அவனுக்கு இருந்த நட்பைப் பற்றி.

அவன் மனைவி கமலா கூடக் கேட்டாள். "உங்களுக்கு இப்படிப்பட்ட சிநேகம் தேவைதானா?"

"ஏன் எல்லாரும் இப்படிச் சொல்றீங்கன்னே தெரியல! அவனுக்கு நான் ஏதோ ஒரு உதவி செஞ்சேன். அதுலேந்து அவன் எங்கிட்ட நட்பா இருக்கான். நானும் பதிலுக்குஅவனோட நட்பா இருக்கேன். இதில என்ன தப்பு?" என்றான் நாகராஜன் சற்று கோபத்துடன்.

"அவர் தன்னை ஒரு பெரிய புத்திசாலின்னு நினைச்சுக்கிட்டு உங்களுக்கு நிறைய யோசனை சொல்றாரு. நீங்களும் அவர் பேச்சைக் கேட்டு சில காரியங்கள்ள இறங்கறீங்க. அதெல்லாம் தோல்வியிலதானே முடியுது?"

"முரளிக்கு சொந்தத் தொழில் செய்யணும்னு ஆர்வம் உண்டு. அவன் வேலையில இருந்தாலும் சைடில ஏதாவது சின்னதா தொழில் செஞ்சுக்கிட்டிருப்பான். சில முயற்சிகள்ள என்னையும் சேந்துக்க சொல்வான்.  அவன் சொன்னதுக்காக சில தொழில்கள்ள ஈடுபட்டு கொஞ்சம் நஷ்டம் ஏற்பட்டிருக்குங்கறது உண்மைதான். அதுக்காக அவனை எப்படிக் குத்தம் சொல்ல முடியும்?"

"சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க! காளான் வளக்கறதிலேந்து, ஈமுக் கோழிப் பண்ணையில முதலீடு செய்யற வரைக்கும் என்ன விளம்பரம் வந்தாலும் அத்தனையிலேயும் முதலீடு பண்ணலாம்னு உங்களுக்கு அவரு யோசனை சொல்லி இருக்காரு. எத்தனையோ வியாபார விளம்பரம் வரும். அத்தனையையும் நம்பறாருன்னா, அவரு யோசிக்கிறதே இல்லேன்னுதானே அர்த்தம்? நல்ல வேளை எல்லாத்திலேய்ம் முதலீடு பண்ண அவர்கிட்ட பணம் இல்ல. நீங்களும் சிலதிலதான் முதலீடு பண்ணினீங்க. எல்லாமே நஷ்டம்தான். எத்தனை பணம் போயிருக்கும்னு நினைச்சுப் பாத்தீங்களா? ஏதோ நீங்க நிறைய சம்பாதிக்கிறீங்க. அதனால அந்த இழப்பெல்லாம் உங்களுக்குப் பெரிசாத் தோணல" என்றாள் கமலா.

நாகராஜன் பதில் சொல்லவில்லை.

முரளியின் ஆலோசனைகளைக் கேட்பது தனக்கு இழப்புகளைத்தான் ஏற்படுத்தும் என்பதை நாகராஜனே காலப்போக்கில் உணர ஆரம்பித்து அவன் ஆலோசனைகளைப் புறக்கணிக்க ஆரம்பித்தான்.

"பெரிய பண்ணை வச்சிருக்காங்க. ஒரு லட்சம் முதலீடு செஞ்சா மாசா மாசம் பத்தாயிரம் ரூபா வருமானம் வரும்னு உத்தரவாதம் கொடுக்கறாங்க. சின்ன முதலீடு, பெரிய லாபம்!" என்றான் முரளி.

"அவ்வளவு பெரிய பண்ணை வச்சிருக்கறவங்க எதுக்கு மத்தவங்களை முதலீடு செய்யச் சொல்றாங்க? அவங்களுக்கு அத்தனை வருமானம் வருமா, சொன்னபடி பத்தாயிரம் ரூபா கொடுக்க முடியுமா இதெல்லாம் எப்படித் தெரியும்?" என்றான் நாகராஜன்.

"வீடியோ போட்டிருக்காங்க பாரு. 100 ஏக்கர் பண்ணை. தென்னை, வாழை, காய்கறிகள், பழங்கள்னு நிறைய பயிர்கள் இருக்கு. தினமும் வியாபாரம் நடக்கும், லட்சக்கணக்கில ரொக்கமாவே வருமானம் வரும். சொன்னபடி நிச்சயமாக் கொடுத்துடுவாங்க. எங்கிட்ட ஒரு லட்ச ரூபா இல்ல. இருந்தா நானே முதலீடு பண்ணிடுவேன். நீ அம்பதாயிரம் கொடுத்தா ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு லட்சம் முதலீடு பண்ணலாம்!" என்றான் முரளி.

"என்னை விடுப்பா! நான் இனிமேயும் நஷ்டப்படத் தயாராயில்ல!" என்றான் நாகராஜன்.

"இனிமேயும்னா? என்னால ஏற்கெனவே உனக்கு நிறைய நஷ்டம் ஆயிட்ட மாதிரி பேசற!" என்றான் முரளி சற்றுக் கோபத்துடன்.

"இல்லையா பின்னே?"

"உன்னோட நன்மைக்காக சில பிசினஸ் ஐடியாக்களை அப்பப்பு உங்கிட்ட சொல்லி இருக்கேன். பிசினஸ்னா ரிஸ்க் இருக்கத்தான் செய்யும். நான் ஏதோ உனக்குக் கெடுதல் செஞ்சுட்ட மாதிரி பேசற! உன்னோட நட்பு வச்சுக்கிட்டதே தப்பு!" என்று சொன்னபடியே கோபமாக எழுந்து வெளியேறினான் முரளி.

உள்ளிருந்து அவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த கமலா வெளியே வந்து, "கோவிச்சுக்கிட்டுப் போறாரே! மறுபடி வருவாரா, இல்ல, ஒரேயடியா நட்பை முறிச்சுப்பாரா?" என்றாள்.

"ஒருவேளை அவன் அப்படி செஞ்சா, அவன் மூலமா முதல் தடவையா லாபம் வந்ததா நினைச்சுக்க வேண்டியதுதான்!" என்றான் நாகராஜன் சிரித்தபடியே.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 80
நட்பாராய்தல் 

குறள் 797:

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.

பொருள்: 
ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவருடன் செய்து கொண்ட நட்பைக் கைவிடுதலாகும்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...