Monday, July 11, 2022

608. ஏன் இந்த நிலை?

"ஏண்டா, செல்வம் என்டர்பிரைசஸ் கொடுக்க வேண்டிய பணத்தை வசூல் பண்ணச் சொன்னேனே,வசூல் பண்ணினியா இல்லையா?" என்றான் கோபாலசாமி.

"இல்லீங்க! தினம் போய் கேட்டுக்கிட்டுத்தான் இருக்கேன். அவரு நாளைக்கு நாளைக்குன்னு இழுத்தடிச்சுக்கிட்டே இருக்காரு!" என்றான் வேல்முருகன்.

"நீ ஒரு சோம்பேறியாச்சே! அவங்க சொன்ன நேரத்துக்குப் போயிருக்க மாட்டே! சம்பளம் கொடுக்க இன்னும் நாலு நாள்தான் இருக்கு. அதுக்குள்ள நீ அந்தப் பணத்தை வசூலிக்கலேன்னா உனக்கு இந்த மாசம் சம்பளம் கிடையாது!"

முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டு முதலாளியின் அறையிலிருந்து வெளியே வந்த வேல்முருகனைப் பச்சாதாபத்துடன் பார்த்தார் அக்கவுன்டன்ட் குணசீலன்.

சற்று நேரத்தில் வேல்முருகன் வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் வசூலிக்க வெளியே கிளம்பி விட்டான்.

வேல்முருகன் வெளியே சென்றதும், "பாவம்! பெரிய இடத்துப் பிள்ளை! இவன்கிட்ட அடிமைப் பொழைப்பு பொழைக்கணும்னு அவனுக்குத் தலையெழுத்து!" என்றார் குணசீலன் தன் அருகிலிருந்த ஊழியன் சபாபதியிடம்.

"பெரிய இடத்துப் பிள்ளையா?" என்றான் சபாபதி வியப்புடன்.

"ஆமாம். வேல்முருகனோட அப்பா அவங்க ஊர்ல ஒரு பெரிய மனுஷர். ஊர்ல அவருக்கு ரொம்ப மரியாதை உண்டு. வேல்முருகன் அவருக்கு ஒரே பையன். அவர் போனப்பறம் வேல்முருகன் வேலைக்குப் போகாம வெட்டியா வீட்டில உக்காந்து பொழுதைக் கழிச்சுக்கிட்டிருந்தான். அவன் அம்மாவும் இறந்தப்பறம் அவனுக்கு புத்தி சொல்ல யாரும் இல்ல. அப்பா விட்டுட்டுப் போன சொத்து கரைஞ்சுக்கிட்டே இருந்தது அவனுக்குத் தெரியல. "கல்யாணம் ஆகிக் குடும்பமும் ஏற்பட்டப்பறம்தான் குடும்பம் நடத்தவே பணம் இல்லேங்கற நிலைமை வந்தது அவனுக்குப் புரிஞ்சுது"

"நிறைய சொத்து இருந்த்துன்னு சொன்னீங்களே!"

"எவ்வளவு சொத்து இருந்தா என்ன? சம்பாதிக்காம சொத்தை வித்துத் தின்னுக்கிட்டிருந்தா  சொத்து எவ்வளவு வேகமாக் கரையுங்கறது அந்த நிலைமையை அனுபவிச்சங்களுக்குத்தான் தெரியும். நீங்க அனுபவிச்சிருக்கீங்களான்னு கேக்காதே! இந்த அனுபவம் பல பேருக்கு ஏற்பட்டதை நான் பாத்திருக்கேன்!" என்றார் குணசீலன்.

"அப்புறம்?" என்றான் சபாபதி கதை கேட்கும் ஆர்வத்துடன்.

"அப்புறம் என்ன? வேல்முருகன் வேலை தேட ஆரம்பிச்சான். எதுவும் கிடைக்கல. கடைசியில நம்ம ஆள்கிட்ட வந்து மாட்டினான். இதில சோகம் என்னன்னா நம் முதலாளியோட அப்பாவுக்கும் வேல்முருகனோட அப்பாவுக்கும் ஆகாது. இப்ப அவர் பையன் வேல்முருகன் மேல இரக்கப்பட்டு அவனுக்கு வேலை கொடுக்கற மாதிரி கொடுத்துட்டு அவனை ஒரு அடிமை மாதிரி. நடத்தறான். தன்னை விட வயசில பெரியவன்னு கூட பாக்காம வேல்முருகனை வாடா போடான்னு பேசறதும், விரட்டறதும், கடுமையாப் பேசறதும், எனக்கு பாக்கறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு!" என்றார் குணசீலன்.

பொருட்பால்
அரசியல் இயல்

அதிகாரம் 61
மடியின்மை (சோம்பலின்மை)

குறள் 608:
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.

பொருள்:
நல்ல குடியில் பிறந்தவனிடம் 
சோம்பல் வந்து பொருந்தினால், அது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.

      அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...