Saturday, July 2, 2022

796. முத்துசாமியின் 'டைம்லைன்'

"என்னடா இது? கம்பெனியிலே சீ ஈ ஓவா இருந்தப்ப இது மாதிரி சார்ட் எல்லாம் பயன்படுத்தி இருப்பே. இப்ப ரிடயர் ஆனப்பறமும் ஏதோ சார்ட் எல்லாம் போட்டுக்கிட்டிருக்கே!" என்றார் சாம்பசிவம்,

ஒரு தாளில் பென்சிலால் ஏதோ மும்முரமாக வரைந்து கொண்டிருந்த முத்துசாமி, சந்தடி இல்லாமல் பின்னால் வந்து நின்ற தன் நண்பனை அப்போதுதான் கவனித்தவராக பேப்பரைக் கீழே வைத்து விட்டு, "வாடா! இப்படித்தான் பூனை மாதிரி சத்தமில்லாம பின்னால வந்து நின்னு என்னை பயமுறுத்தறதா?" என்றார் சிரித்துக் கொண்டே.

"எவ்வளவோ பெரிய சவால்களையெல்லாம் கொஞ்சம் கூட பயப்படாம சமாளிச்ச உன்னை யாராவது பயமுறுத்த முடியுமா என்ன? ஆனாலும், அறைக்கதவைத் திறந்து வச்சுக்கிட்டு, வாசலுக்கு முதுகைக் காட்டிக்கிட்டு உக்காந்துக்கிட்டிருந்தா, என்னை மாதிரி அப்பாவிக்கெல்லாம் கூட கொஞ்சம் பயமுறுத்திப் பாக்கலாமேன்னுதான் தோணும்!"

"நீயா அப்பாவி? உன்னைப் பாத்து எத்தனை பேரு 'அடப்பாவி!'ன்னு அலறி இருக்காங்கன்னு எனக்குத்தானே தெரியும்? காத்து வரதுக்காக் கதவைத் திறந்து வச்சிருக்கேன். கதவுப் பக்கம் பாத்து உக்காந்தா கிளேர் அடிக்கும். அதனாலதான் முதுகைக் காட்டிக்கிட்டு உக்காந்திருக்கேன். போதுமா?"

"கம்பெனி மீட்டிங்ல எல்லாம் பேசற மாதிரி முக்கியமான கேள்வியை விட்டுட்டு மற்றதுக்கெல்லாம் பதில் சொல்ற! என்னவோ வரைஞ்சிக்கிட்டிருக்கியே என்னனு கேட்டேன்."

"அதுவா? என் வாழ்க்கையோட டைம்லைனைப் போட்டுக்கிட்டிருக்கேன்!"

"பிசினஸ்ல பயன்படுத்தற டூலையெல்லாம் சொந்த வாழ்க்கையில பயன்படுத்தற! எங்கே காட்டு" என்று முத்துசாமியின் கையிலிருந்த தாளை வாங்கிப் பார்த்தார் சாம்பசிவம்.

சற்று நேரம் அதை உற்றுப் பார்த்தபின், "உன் வாழ்க்கையைப் பல கட்டங்களாப் பிரிச்சு ஒவ்வொண்ணுக்கும் ஒரு லேபில் கொடுத்திருக்கே, 'ஆரம்ப அனுபவம்,' 'இயல்பான முன்னேற்றம்,' 'சவால்கள் நிறைந்த முன்னேற்றம்,' 'சோதனை மேல் சோதனை,' இன்னும் சில லேபில்கள். எதுக்கு இது?" என்றார்.

"சும்மாதான்! கம்பெனியில முந்தின வருஷ செயல்பாடுகளை ரிவியூ பண்ற மாதிரி, இதுவரையிலுமான என் வாழ்க்கையைப் பத்தி ஒரு ரிவியூ. ஆனா கம்பெனியில ரிவியூ அடிப்படையில எதிர்காலத்தில நம் செயல்பாடுகளை மாத்திக்கலாம். ஆனா என் வாழ்க்கையில அப்படிச் செய்ய முடியாது. மீதி இருக்கிறது செயல்பாடுகள் இல்லாத வாழ்க்கைதானே? இது ஒரு போஸ்ட்மார்ட்டம்னு சொல்லலாம், அவ்வளவுதான்!" என்றார் முத்துசாமி.

முத்துசாமி பேசுவதைக் கேட்டுக் கொண்டே, சார்ட்டைப் பார்த்துக் கொண்டிருந்த சாம்பசிவம், "இது என்ன? ஒவ்வொரு கட்டத்துக்கும் மார்க் போடற மாதிரி ஏதோ போட்டிருக்கியே!" என்றார்.

"ஆமாம். அது மதிப்பெண் மாதிரி ஒரு குறியீடுதான். டைம்லைன்ல இருக்கிற ஒவ்வொரு கட்டமும் எனக்கு எந்த விதத்தில வாழ்க்கையில எந்த அளவுக்குப் பயனுள்ளதா இருந்ததுங்கறதுக்கான மதிப்பெண் அது."

"சோதனை மேல் சோதனைங்கற கால கட்டத்துக்குத்தான் அதிகமா மார்க் கொடுத்திருக்கே! அது எப்படி உன் வாழ்க்கையில அதிகப் பயனுள்ள காலமா இருந்திருக்கும்?" என்றார் சாம்பசிவம் வியப்புடன்.

"நான் பல சவால்களையும், தோல்விகளையும், துன்பங்களையும் அனுபவிச்ச காலம் அது. அப்ப எனக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தாங்க. அவங்க எல்லாருமே எங்கிட்ட அன்பும், அக்கறையும் கொண்டவங்கன்னு நான் நம்பின காலம் அது. 

"ஆனா என்னோட சோதனைக் காலத்தின்போதுதான், எந்தெந்த நண்பர்கள் எங்கிட்ட உண்மையான அக்கறை கொண்டிருந்தாங்க, எந்தெந்த நண்பர்கள் போலியா நட்பு பாராட்டிட்டு எனக்கு கஷ்டம் வந்தப்ப எங்கிட்டேந்து ஒதுங்க ஆரம்பிச்சாங்கன்னு எனக்குப் புரிஞ்சது. 

"என்னோட ரொம்ப நெருக்கமா இருந்ததா நான் நினைச்ச சில நண்பர்கள் எங்கிட்டேந்து விலகிப் போனாங்க. நான் அதிகம் நெருக்கம் இல்லைன்னு நினைச்ச சில நண்பர்கள் எனக்கு ஆரதவா என் பக்கத்தில நின்னபோது, அவங்க எங்கிட்ட எவ்வளவு அன்போடயும் அக்கறையோடயும் இருந்தாங்கங்கறதை அத்தனை காலமா புரிஞ்சுக்காம இருந்தது எனக்கு வெட்கமாகக் கூட இருந்தது.

 "என் உண்மையான நண்பர்கள் யாருங்கறதை எனக்குப் புரிய வச்சதை விட எனக்கு அதிகப் பயனுள்ள விஷயம் வேற எதுவா இருக்க முடியும்? அதனாலதான் அந்தக் காலத்தை அதிகப் பயனுள்ளதா நினைச்சு அதுக்கு அதிக மார்க் கொடுத்திருக்கேன். உன்னைமாதிரி உண்மையான நண்பர்களை அன்னிக்குத்தான் என்னால அடையாளம் காண முடிஞ்சது. அதைக் கண்டுபிடிக்க எனக்கு உதவினதே அந்த சோதனைக் காலம்தானே!"

உணர்ச்சிப் பெருக்கில் முத்துசாமி தன் நண்பனின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 80
நட்பாராய்தல் 

குறள் 796:
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.

பொருள்: 
தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு. அந்தத் தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...