நீண்ட நாட்களுக்குப் பிறகு எதிர்பாராமல் தன் வீட்டுக்கு வந்த தன் நண்பன் ஆனந்தைப் பார்த்ததும் ரகுவுக்கு வியப்பையும் மீறி ஒருவித சோர்வு ஏற்பட்டது.
"வா!" என்றான் உற்சாகமில்லாமல்.
இதுவே ஆறு மாதங்களுக்கு முன்னால் என்றால் "வாடா!" என்று கையைப் பிடித்து உள்ளே அழைத்து வந்திருப்பான்.
"உட்கார்!" என்று சொல்லக் கூட ரகுவுக்கு மனமில்லை. ஆனந்த் தானே உட்கார்ந்தான்.
"நடக்கக் கூடாததெல்லாம் நடந்துடுச்சு. நல்ல வேளையா எல்லாம் நல்லபடியா முடிஞ்சுடுச்சு!" என்றான் ஆனந்த்.
நல்லபடியாக முடிந்து விட்டதா?
அலுவலகத்தில் யாரோ செய்த மோசடிக்கான பழி தன் மேல் விழுந்து கைது செய்யப்பட்டு ஜாமீன் கிடைக்காமல் மூன்று மாதம் சிறையில் இருந்து விட்டு, ஆறு மாதங்கள் பணி இடைநீக்கத்துக்குப் பின் போலீஸ் விசாரணையில் உண்மைக் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்ட பின் தன் மீது சமத்தப்பட்ட குற்றச்சாட்டு விலக்கிக் கொள்ளப்பட்டு தான் மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டதை நல்லபடியாக முடிந்து விட்டது என்று கடந்து போக முடியுமா?
சற்று நேரம் ஏதோ பேசிக் கொண்டிருந்து விட்டு ஆனந்த் கிளம்பினான்.
கிளம்பும் சமயத்தில், "உன் மனைவி எங்கே? எங்கேயாவது வெளியில போயிருக்காங்களா என்ன?" என்றான் ஆனந்த்.
"உள்ளே ஏதாவது வேலையா இருப்பா" என்றான் ராமு சுருக்கமாக.
ஆனந்த் கிளம்பிச் சென்றதும்,உள்ளிருந்து வந்த ரகுவின் மனைவி சாந்தா, "எங்கே அவரு? போயிட்டாரா? உங்களுக்கு சோதனையான காலத்தில நமக்கு அதிகம் பழக்கமில்லாத சில பேர் கூட வந்து நமக்கு ஆறுதல் சொன்னாங்க? நண்பன்னு சொல்லிட்டு இத்தனை வருஷமா பழகின இவரு எட்டிக் கூடப் பாக்கல. ஒரு ஃபோன் பண்ணி கூட ஆறுதல் சொல்லல. இப்ப எல்லாம் சரியானப்பறம் மறுபடி வந்து ஒட்டிக்கப் பாக்கறாரு. அதனாலதான் வீட்டுக்கு வந்தவருக்கு ஒரு காப்பி கூடக் கொடுக்காம நான் உள்ளேயே இருந்துட்டேன். அவர் மூஞ்சியைப் பாக்கவே எனக்குப் பிடிக்கல?" என்றாள் கோபம் கொப்பளிக்கும் குரலில்.
"நான் மட்டும் அவன் மூஞ்சியை இனிமே ஏன் பாக்கப் போறேன்? நான் அவங்கிட்ட அலட்சியமா நடந்துக்கிட்டது, நீ உள்ளேயிருந்து வெளியே வராமல் இருந்தது இதையெல்லாம் வச்சே அவனுக்குப் புரிஞ்சிருக்கும் அவன் கூட இனிமே நான் நட்பு வச்சுக்க மாட்டேன்னு. அவனை விடு. நடந்ததையெல்லாம் நினைச்சா எனக்கு மனசு ஆறல, எனக்கு இப்படி ஒரு அநியாயம் நடந்துடுச்சேன்னு" என்றான் ரகு.
"இதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மறக்கப் பாக்கணுங்க. முயற்சி செஞ்சா கொஞ்ச நாள்ள இந்த அனுபவத்தோட நினைவெல்லாம் தேஞ்சு போயிடும். ஆனந்த் மாதிரி ஆட்களோட நட்பை உதறின மாதிரி இது மாதிரி அனுபவங்களோட நினைவையும் விட்டொழிச்சாத்தான் நம்மால சந்தோஷமா இருக்க முடியும்" என்றாள் சாந்தா.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 80
நட்பாராய்தல்
குறள் 798:
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
No comments:
Post a Comment