Wednesday, July 13, 2022

610. "ராஜேந்திர சோழன்"

"அரசே! உங்கள் தந்தை பல சிறிய நாடுகளை வென்று தன் சாம்ராஜ்யத்தைப் பெருக்கி உங்களிடம் ஒப்படைத்திருக்கிறார். இந்தப் பரந்த சாம்ராஜ்யத்தைப் பராமரிப்பது உங்கள் பொறுப்பு!" என்றார் அமைச்சர்.

"என் தந்தை பல சிறிய நாடுகளை வென்றார் என்று கூறினீர்கள். பெரிய நாடு எதையும் அவர் வெல்ல முயற்சி செய்யவில்லையா?" என்றான் அப்போதுதான் முடிசூட்டிக் கொண்ட அரசன் இளவழகன்.

அமைச்சர் சற்று வியப்புடன் அரசனைப் பார்த்தார்.

"அரசே! பெரிய நாடுகளுடன் போரிட்டு வெல்வது கடினம். போரில் தோற்றால், இருக்கும் நாட்டையும் இழக்க நேரிடும். அதனால்தான் புத்திசாலியான உங்கள் தந்தை பல சிறிய நாடுகளை வென்று அவற்றை நம் நாட்டுடன் இணைத்து நம் நாட்டைப் பெரிய நாடாக ஆக்கினார். சில அரசர்கள் சிறு நாடுகளை வென்ற பிறகு, அந்த நாடுகளின் அரசர்களிடம் கப்பம் வாங்கிக் கொடு அவற்றை த் தனிநாடுகளாக இருக்க அனுமதிப்பார்கள். ஆனால் உங்கள் தந்தை அவ்வாறு செய்யாமல் அவற்றை நம் நாட்டின் ஒரு பகுதியாக ஆக்கி விட்டார்" என்று விளக்கினார் அமைச்சர்.

"அப்படியானால் இனி நாம் பெரிய நாடுகளை வென்று அவற்றை நம்முடன் இணைத்துக் கொண்டால் உலகிலேயே மிகப் பெரிய நாடாக விளங்கலாமே!" என்றான் அரசன் உற்சாகத்துடன்.

"அரசே! பெரிய நாடுகளைப் போரில் வெல்வது எளிதல்ல. நீங்கள் இப்போதுதான் முடிசூட்டிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு இளம் வயது. சில ஆண்டுகள் அரச சுகத்தை அனுபவித்து விட்டு அதற்குப் பிறகு நாட்டை மேலும் விரிவாக்குவதைப் பற்றிச் சிந்திக்கலாம் என்பது என் கருத்து!" என்றார் அமைச்சர்.

"அமைச்சரே! நாளைக்கே போருக்குக் கிளம்ப வேண்டும் என்று நான் கூறவில்லை. பெரிய நாடுகளுடன் போரிட நாம் விரிவாகத் திட்டமிட வேண்டும், நம் படைகளை இன்னும் வலுவாக்கிக் கொள்ள வேண்டும், ஒற்றர்கள் மூலம் முக்கியத் தகவல்களைப் பெற வேண்டும். இவற்றுக்கெல்லாம் சில ஆண்டுகள் பிடிக்கும் என்பதை நான் அறிவேன். ஆனால் அவற்றுக்கான முயற்சிகளை இப்போதே துவங்க வேண்டாமா? முதலில் பல ஆலோசனைக் கூட்டங்களை நடத்த வேண்டும். அவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். ஓய்வெடுப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. அதனால் முயற்சிகளை உடனே தொடங்கலாம்!" என்றான் அரசன்.

"அரசே! நாட்டை விரிவாக்குவதில் நீங்கள் உங்கள் தந்தையையே மிஞ்சி விட்டீர்கள். மிகக் குறைந்த காலத்திலேயே சில பெரிய நாடுகளை வென்று  பல பகுதிகளிலும் நம் கொடியைப் பறக்க விட்டு விட்டீர்கள். அபாரமான சாதனை உங்களுடையது!" என்றார் அமைச்சர்.

"என் தந்தையுடன் இணைந்து பணியாற்றிய தங்களைப் போன்ற அறிவும், அனுபவமும் கொண்ட பலரது ஆலோசனை, படைத்தலைவரின் வியூகங்கள், படைவீரர்களின் வீரம், தியாக உணர்வுடன் நம் மக்கள் நம் முயற்சிகளுக்கு அளித்த ஆதரவு ஆகியவைதான் இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம்!" என்றான் அரசன்.

"அரசே! உங்கள் அயராத உழைப்பு, விடாமுயற்சி, மன உறுதி, வீரம் இவற்றைப் போல் உங்கள் அடக்கமும் மிக உயர்ந்தது. மூன்று அடிகளால் உலகை அளந்த வாமனர் போல் நீங்களும் பெரிய நிலப்பரப்பை வென்று விட்டீர்கள். இதற்கான உத்வேகம் உங்களுக்கு எப்படி வந்தது என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது."

"அந்த உத்வேகத்தை அளித்தவர் தாங்கள்தான் அமைச்சரே!" என்றான் அரசன் சிரித்தபடி.

"நானா? நான் என்ன செய்தேன்?" என்றார் அமைச்சர் வியப்புடன்.

"என் முடிசூட்டு விழாவின்போது ராஜராஜ சோழருக்கு நிகரான புகழுடன் விளங்கிய அவரது புதல்வர் ராஜேந்திர சோழரைப் போல புகழ் பெற்று விளங்க வேண்டும் என்று தாங்கள் என்னை வாழ்த்தினீர்கள். அதற்குப் பிறகு ராஜேந்திர சோழரின் வரலாற்றைப் படித்துப் பார்த்தேன். ராஜராஜர் அருகிலுள்ள இலங்கையை வென்றார் என்றால், ராஜேந்திரர் கடல் கடந்து தொலைவில் இருந்த கடாரத்தை வென்றதுடன், வடக்கிலும் கங்கைக்கரையிலிருந்த நாடுகள் வரை வென்று தன் சாம்ராஜ்யத்தைப் பெருக்கினார் என்று அறிந்து கொண்டேன். அதற்குப் பிறகுதான் சாம்ராஜ்யத்தை விரிவாக்க வேண்டும் என்ற உத்வேகம் எனக்கு ஏற்பட்டது!" என்றான் இளவழகன்.

"உத்வேகம் வேண்டுமானால் என்னிடமிருந்து வந்திருக்கலாம். ஆனால் உங்கள் ஓய்வில்லாத உழைப்புதான் உங்கள் வெற்றிக்குக் காரணம்" என்றார் அமைச்சர்.

பொருட்பால்
அரசியல் இயல்

அதிகாரம் 61
மடியின்மை (சோம்பலின்மை)

குறள் 610:
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.

பொருள்:
அடியால் உலகத்தை அளந்த கடவுள் கடந்த பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒருசேர அடைவான்.

      அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...