"ஏம்ப்பா, என்னோட படிக்கிற எல்லாப் பையங்களோட அப்பாவும் வேலைக்குப் போறாங்க. நீ மட்டும் ஏன் போகல?"
ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகன் கேட்ட கேள்வி, தங்கப்பனுக்கு ஆச்சரியமளிக்கவில்லை, ஆனால் எரிச்சலூட்டியது.
"முதல்ல, என்னோட அம்மா கேட்டாங்க. அப்புறம், உன்னோட அம்மா கேட்டா. இப்ப, நீ கேக்கறியா?" என்றான் தங்கப்பன், எரிச்சலுடன்.
"பையன்கிட்ட ஏன் எரிஞ்ச விழறீங்க? நீங்க வேலைக்குப் போகாம இருக்கறதைப் பத்தி, ஊர்ல எல்லாரும்தான் பேசறாங்க!" என்றாள் அவன் மனைவி சுமங்கலி.
"எனக்குப் பரம்பரை சொத்து இருக்கு. நான் எதுக்கு வேலைக்குப் போகணும்?"
"பரம்பரை சொத்து உங்கப்பாவுக்கும் தானே இருந்தது? ஆனா, அவர் வீட்டில உக்காந்துக்கிட்டிருக்கலியே! வயல், தோட்டம்னு அலைஞ்சு எல்லாத்தையும் பாத்துக்கிட்டு, சொத்தைப் பெருக்கி, உங்களுக்கு விட்டுட்டுப் போனாரே!"
"அவருக்கு அது பிடிச்சிருந்தது. வேலை செய்யறது எனக்குப் பிடிக்கல. வீட்டில உக்காந்துக்கிட்டிருக்கறதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு!"
"நான் கூட வசதியான குடும்பத்திலேந்து வந்தவதான். அதுக்காக சமையல் வேலை செய்ய மாட்டேன்னு நான் சும்மா இருந்தா எப்படி இருக்கும்?" என்றாள் சுமங்கலி, கோபத்துடன்.
"இருந்துட்டுப் போயேன். சமையலுக்கு ஆள் வச்சுக்க முடியாதா நம்மால?" என்றான் தங்கப்பன், சிரித்தபடி.
"பள்ளிக்கூடத்தில எல்லாரும் உன் அப்பா என்ன வேலை பாக்கறாருன்னு கேக்கறாங்க. நான் என்ன சொல்றது?" என்றான் சிறுவன், விடாமல்.
"என் அப்பாதான் எல்லாருக்கும் வேலை கொடுக்கறாருன்னு சொல்லு!" என்றான் தங்கப்பன்.
"என்னவோ போங்க! எல்லாரும் உங்கப்பாவைப் பத்திப் பெருமையாப் பேசிட்டு, அவரோட பையன் இப்படி இருக்காரேன்னு என் காது படவே பேசிக்கறப்ப, எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு!" என்றபடியே உள்ளே சென்றாள் சுமங்கலி, யார் என்ன சொன்னாலும், தன் கணவன் மாறப் போவதில்லை என்ற விரக்தியுடன்.
"ரெண்டு மூணு நாளா எங்கேயோ வெளியில போயிட்டு வரீங்களே, என்ன விஷயம்?" என்றாள் சுமங்கலி.
"ஒரு வியாபாரம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்!" என்றான் தங்கப்பன் புன்சிரிப்புடன்.
"வியாபாரமா, என்ன வியாபாரம்?" என்றாள் சுமங்கலி, வியப்புடன்.
"நெல் வியாபாரம்தான். நம்ம ஊர்லயும், சுத்தி இருக்கிற ஊர்களிலேயும் உள்ள சின்னச் சின்ன விவசாயிகள்கிட்டல்லாம் நெல்லை வாங்கி, டவுன்ல இருக்கற பெரிய வியாபாரிங்ககிட்ட விக்கறது. அதுக்காக, மாட்டு வண்டிகள், கூலி ஆட்கள் எல்லாம் ஏற்பாடு பண்ணத்தான் வெளியில போயிட்டு வந்தேன். வர வெள்ளிக்கிழமை அன்னிக்கு பூஜை போட்டுட்டு, வியாபாரத்தை ஆரம்பிக்க வேண்டியதுதான்!" என்றான் தங்கப்பன், உற்சாகத்துடன்.
"உண்மையாவா? எப்படிங்க, திடீர்னு இப்படி ஒரு முடிவை எடுத்தீங்க?" என்றாள் சுமங்கலி, வாய் நிறைய சிரிப்புடன்.
"இத்தனை வருஷமா, என்னோட அம்மாவும், நீயும், இன்னும் பல பேரும் சொல்லி இருக்கீங்க. அப்பல்லாம் எனக்கு அது உறைக்கல. ஆனா, உன்னோட அப்பா என்ன செய்யறார்னு கூடப் படிக்கிற பையன்கள்ளாம் கேட்டா என்ன சொல்றதுன்னு நம்ம பையன் கேட்டது, என் மனசை உறுத்திக்கிட்டே இருந்தது. என் அப்பா எல்லாருக்கும் வேலை கொடுக்கறார்னு சொல்லுன்னு, அன்னிக்கு அவங்கிட்ட ஒப்புக்கு ஒரு பதிலைச் சொன்னேன். அப்படியே செஞ்சா என்னன்னு தோணிச்சு. அப்புறம் யோசிச்சு, இந்தத் தொழில்தான் எனக்கு ஒத்து வரும்னு இதைத் தேர்ந்தெடுத்தேன். தொழிலை ஆரம்பிக்கறதுக்கான எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு, உங்கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன்."
"ரொம்பப் பெருமையா இருக்குங்க!"
"ஆனா, ஒரு பிரச்னைதான்" என்றான் தங்கப்பன்.
"என்ன பிரச்னை?" என்றாள் சுமங்கலி, கவலையுடன்.
"இந்த வியாபாரம் வருஷத்தில நாலஞ்சு மாசம்தான் நடக்கும். மத்த நாட்கள்ள என்ன செய்யறதுன்னு தெரியல!"
"அவ்வளவுதானா? எப்ப ஒரு தொழில் செய்யறதுன்னு இறங்கிட்டீங்களோ, அப்புறம் உங்களால சும்மா இருக்க முடியாது. வேற ஏதாவது செய்வீங்க. இனிமே உங்களை சோம்பேறின்னோ, நல்ல குடும்பத்தில பிறந்துட்டு இப்படி இருக்காரேன்னோ, யாரும் பழிச்சுப் பேச மாட்டாங்க. எனக்கு அது போதும்!" என்றாள் சுமங்கலி, மனத்திருப்தியுடன்.
பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 61
மடியின்மை (சோம்பலின்மை)
குறள் 609:
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.
பொருள்:
ஒருவன் தான் சோம்பலால் ஆளப்படும் தன்மையை மாற்றிவிட்டால், அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்த குற்றம் தீர்ந்து விடும்.
No comments:
Post a Comment