Wednesday, June 8, 2022

791. அம்மா சொன்ன பொய்!

"ரகு இல்லையா?" என்றான் ஆதி.

"இல்லை. அவன் பெரியப்பா வீட்டுக்குப் போயிருக்கான்" என்றாள் ரகுவின் அம்மா மரகதம்.

"இப்ப வந்துடுவான் இல்ல?" என்றபடியே சோஃபாவில் உட்காரப் போனான் ஆதி.

"இல்லை. அவன் பெரியப்பாவோட யாரையோ பாக்கப் போகப் போறதா சொன்னான். சாயந்திரம்தான் வருவான்."

"அப்படியா?" என்ற ஆதி ஏமாற்றத்துடன் வெளியே போகத் திரும்பினான். "என்னோட சினிமாவுக்கு வரதா சொல்லி இருந்தானே?" என்றான் தொடர்ந்து.

"சினிமா எங்கே போகுது? இது முதல் வாரம்தானே? அடுத்த ஞாயிற்றுக்க்கிழமை போய்க்கங்க. டிக்கட்டும் சுலபமாக் கிடைக்கும்!" என்றாள் மரகதம் சிரித்தபடி.

"அடுத்த வாரம் இந்தப் படம் இருக்குமோ, தூக்கிடுவாங்களோ!"

"அப்படி ஒரு வாரத்திலேயே தியேட்டரை விட்டு ஓடிடும்னா அந்தப் படத்தைப் பாக்காம இருக்கிறதே நல்லதாச்சே!" 

தன் நகைச்சுவைப் பேச்சைத் தானே ரசித்து மரகதம் பெரிதாகச் சிரித்தாள். ஆதி எதுவும் பேசாமல் வெளியேறினான்.

ற்று நேரத்துக்கெல்லாம் அவசரமாக வீட்டுக்குள் நுழைந்த ரகு, "ஆதி இன்னும் வரல? சினிமாவுக்குக் கிளம்ப நேரமாயிடுச்சே!" என்றான்.

"வந்தான். நீ உன் பெரியப்பா விட்டுக்குப் போயிருக்கே, சாயந்திரம்தான் வருவேன்னு சொல்லி அனுப்பிட்டேன்!" என்றாள் மரகதம்.

"ஏம்மா? சினிமாவுக்குப் போகப் போறோம்னு சொன்னேன் இல்ல?"

"ஒரு ஞாயிற்றுக்கிழமை தவறாம ரெண்டு பேரும் சினிமாவுக்குப் போயிடறீங்க. சில சமயம் வார நாள்ள கூட எங்கிட்ட சொல்லாமயே ஆஃபீஸ்லேந்து நேரா அவனோட ஈவினிங் ஷோக்குப் போயிடற. நான் ராத்திரி பத்து மணிக்கும் நீ வரலியேன்னு தவிச்சுக்கிட்டு உக்காந்துக்கிட்டிருக்கேன். சினிமா பாக்கறதுக்குன்னு ஒரு சிநேகமா? உலகத்தில வேற விஷயமே இல்லை?" என்றாள் மரகதம் கோபத்துடன்.

"வாரத்தில ரெண்டு மூணு சினிமா பாத்தா ஒண்ணும் ஆயிடாதும்மா. எங்கிட்ட வேற கெட்ட பழக்கம் எதுவும் கிடையாது!"

"இதுவரையிலும் இல்ல. இனிமே வராதுன்னு எப்படிச் சொல்ல முடியும், ஆதி மாதிரி நண்பர்கள் இருக்கறச்சே?"

"அம்மா! ஆதிக்கு சிகரெட் பழக்கம் இருக்கறது உண்மைதான். அது உனக்கு எப்படித் தெரிஞ்சதுன்னு தெரியல. ஆனா நான் அதையெல்லாம் பழக்கிக்க மாட்டேன்."

"ஓ, அவனுக்கு சிகரெட் பழக்கம் இருக்கா? அது எனக்குத் தெரியாது. ஆனா ஒண்ணு தெரியும். ஆதி ஏதாவது சொன்னா உன்னால மாட்டேன்னு சொல்ல முடியாது. ஒருநாள் கூட அவன் சினிமாவுக்குக் கூப்பிட்டு நீ போகாம இருந்ததில்லையே! அவன் கூப்பிட்டாங்கறதுக்காக உனக்கு இஷ்டமில்லாதப்ப கூட நீ அவனோட போனதை நான் கவனிச்சிருக்கேன். அதனலதான் அவனோட நீ சிநேகம் வச்சிக்கறது ஆபத்தானதுன்னு நினைக்கிறேன். இது மாதிரி மோசமான நட்பிலேந்து  விடுபட முடியாது. நான் பாத்திருக்கேனே!" என்றாள் மரகதம் பெருமூச்சுடன்.

"என்ன பாத்திருக்க? உனக்கு மோசமான சிநேகிதிகள் யாராவது இருந்தாங்களா என்ன?" என்றான் ரகு கேலியான குரலில்.

"எனக்கு இல்லடா, உங்கப்பாவுக்கு! நல்லா சம்பாதிச்சு நல்லா வாழ்ந்துக்கிட்டிருந்த அவருக்கு ராஜுன்னு ஒரு நண்பன் வந்து வாய்ச்சான், உனக்கு இந்த ஆதி வந்து வாய்ச்ச மாதிரி! அவருக்கு சூதாட்டத்தைப் பழக்கி விட்டு அவரோட சொத்தையெல்லாம் அழிச்சுட்டான். தான் போற வழி தப்புன்னு அவர் கொஞ்ச நாளிலேயே புரிஞ்சுக்கிட்டு அவங்கிட்டேந்து விலகி இருக்க முயற்சி செஞ்சாரு. ஆனா அவனோட நட்பை அவரால விட முடியல, அவன் வந்து கூப்பிடறப்ப போகாமயும் இருக்க முடிஞ்சதில்ல. ராஜுவோட சிநேகிதத்தால குடும்பத்தையே அழிச்சுட்டேனேன்னு கடைசி வரையிலேயும் நொந்துக்கிட்டேதான் வாழ்ந்தாரு அவரு!" மரகதத்தின் குரல் கம்மியது.

"அம்மா அது வேற..." என்று ஆரம்பித்தான் ரகு.

"வேற மாதிரி இருந்தாலும் இதுவும் அதுதான்! அடிக்கடி சினிமா பாக்கறது பெரிய விஷயம் இல்ல. அதை நீ மாத்திக்க முடியும். ஆனா ஆதி வந்து கூப்பிடறப்ப உன்னால போகாம இருக்க முடியலியே! அதுதான் ரொம்ப ஆபத்தான விஷயம். இன்னும் ரெண்டு மூணு வாரத்துக்கு ஆதி கண்ணில படாம இரு. நல்ல வேளையா நம்  வீட்டில ஃபோன் வசதி இல்லை. அதனால அவனால உன்னைத் தொடர்பு கொள்ள முடியாது. அப்புறம் அவனே ஒதுங்கிடுவான். அதுதான் உனக்கு நல்லது! எனக்கு நீ செய்யற உதவியும் கூட!" என்றாள் மரகதம்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 80
நட்பாராய்தல்

குறள் 791:
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.

பொருள்: 
நட்பை ஏற்படுத்திக் கொண்ட பிறகு, அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வது போல் கெடுதியானது வேறு இல்லை.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...