Tuesday, June 7, 2022

597. மகேஷ் செய்த மோசடி

"நிலைமை இவ்வளவு மோசமாயிடுச்சே, என்ன செய்யப் போறீங்க?" என்றாள் பரிமளா.

பரந்தாமன் பதில் சொல்லவில்லை.

ஐந்து ஆண்டுகளாகச் செய்து வந்த தொழிலில் கடந்த சில மாதங்களாகப் பல பின்னடைவுகள்.

அவன் நிறுவனத்தில் மானேஜராக இருந்து தொழிலை கவனித்துக் கொண்ட மகேஷ் திடீரென்று வேலையை விட்டுப் போவதாக அறிவித்தான். காரணம் கேட்டதற்கு ஏதோ குடும்பப் பிரச்னை என்று சொன்னான்.

மகேஷை நம்பிப் பல பொறுப்புகளை விட்டு விட்டுத் தொழிலை விரிவாக்குவதில் கவனம் செலுத்தி வந்த பரந்தாமன் மகேஷ் பார்த்துக் கொண்டிருந்த அன்றாட வேலைகளைப் பார்க்க ஆரம்பத்தபோதுதான் ஒரு அதிர்ச்சியான உண்மை அவனுக்குப் புரிந்தது.

அவர்கள் தொழிலில் பல பரிவர்த்தனைகள் ரொக்கத்திலேயே நடந்து வந்ததால், அதைப் பயன்படுத்தி மகேஷ் பல மோசடிகளைச் செய்திருந்தான். சில வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் வரவு வைக்கப்படவில்லை. பணம்  நிலுவையில் இருப்பது பற்றி அவர்களிடம் கேட்டபோது, ஏற்கெனவே மகேஷிடம் பணம் கொடுத்து விட்டதாகக் கூறினார்கள்.

ஒரு சிலர் கோபித்துக் கொண்டு தொழில் உறவை முறித்துக் கொண்டனர். "ரொக்கப் பரிவர்த்தனை நடக்கிற இடத்தில நம்பிக்கைதான் முக்கியம். கொடுத்த பணத்தை இல்லைன்னு சொல்ற உங்களோட எப்படித் தொழில் செய்ய முடியும்?" என்றார்கள். 

தவறு நடந்து விட்டதாக பரந்தாமன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதை ஓரிருவர் மட்டும்தான் ஏற்றுக் கொண்டனர். அவர்களும் இனி தன்னுடன் நம்பிக்கையுடன் இருக்க மாட்டார்கள் என்று பரந்தாமனுக்குப் புரிந்தது.

அது போல் பொருட்கள் சப்ளை செய்திருந்த சிலருக்குப் பணம் கொடுக்கப்பட்டதாகக் கணக்கில் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கொடுக்கப்பட்டவில்லை என்பது அவர்கள் பணம் கேட்டபோதுதான் தெரிந்தது.

அது போல் செலவுகளிலும் பண மோசடிள் நடந்திருந்தன. சில தொழிலாளர்களுக்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டதாகக் கணக்கு எழுதப்பட்டு பணம் கையாடப்பட்டிருந்தது.

வேலையை விட்டுப் போன மகேஷைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. வீடு மாறி விட்டான். எங்கே போனான் என்று தெரியவில்லை. திட்டமிட்டு ஏமாற்றி இருக்கிறான் என்று தெரிந்தது.

"போலீஸ்ல புகார் கொடுக்க முடியாதா?" என்றாள் பரிமளா.

"எதையுமே நிரூபிக்க முடியாதே! போலீஸ்ல அவனைப் பிடிச்சாலும் கொஞ்ச நாள் உள்ளே வச்சு விசாரிச்சுட்டு வெளியில விட்டுடுவாங்க. கோர்ட்ல கேஸ் நிற்காது. எல்லாத்துக்கும் மேல அவங்கிட்டேந்து ஒரு ரூபா கூடத் திரும்ப வாங்க முடியாது. நேரம்தான் வீணாகும்!" என்றான் பரந்தாமன்.

"என்னவோ பக்கம் பக்கமா எழுதிக் கிட்டிருக்கீங்களே! அவன் கையாடின விவரங்களைத்தானே எழுதிக்கிட்டிருக்கீங்க?"

"அதையெல்லாம் எழுதி என்ன பிரயோசனம்? போனது போனதுதான். அவன் இது மாதிரி மோசடிபண்ணக் காரணம் நான் ஆஃபீஸ்ல சரியான சிஸ்டத்தை உருவாக்காததுதான். ஒரு மகேஷ் போயிட்டான்னா ஒரு ரமேஷையோ, சுரேஷையோ வச்சுத் தொழிலை நடத்தித்தானே ஆகணும்? அப்பதானே என்னால தொழிலை விரிவாக்கறதில கவனத்தைச் செலுத்த முடியும்.? அப்ப மறுபடி இது மாதிரி தப்பு நடக்கக் கூடாது இல்ல? இனிமே இது மாதிரி நடக்காம இருக்க ஆஃபீஸ்ல சில சிஸ்டம்ஸ், ஒழுங்குமுறைகளைக் கொண்டு வரணும். அதையெல்லாம்தான் யோசிச்சு விவரமா எழுதிக்கிட்டு இருக்கேன்!" என்றான் பரந்தாமன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 60
ஊக்கமுடைமை

குறள் 597:
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.

பொருள்:
உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானை தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார்.

               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...