Thursday, June 9, 2022

598. உதவி செய்ய விரும்பியும்...

"நான் வேலையில இருந்தப்ப, சில அனாதை ஆசிரமங்கள், முதியோர் இல்லங்கள்  இதுக்கெல்லாம் மாசாமாசம் ஒரு தொகையை நன்கொடையாக் கொடுத்துட்டு இருந்தேன். ஆனா, இப்ப அப்படிக் கொடுக்க முடியல!" என்றான் கதிரேசன்.

"ஏன், இப்பதான் சொந்தத் தொழில் செஞ்சு முன்னை விட அதிகமா சம்பாதிக்கிறீங்களே, இப்ப ஏன் கொடுக்க முடியலை?" என்றாள் அவன் மனைவி குமாரி.

"அதுதான் எனக்கும் புரியல. கணக்குப் பாத்தா, வேலையில இருந்தப்ப எனக்குக் கிடைச்ச சம்பளத்தை விட ,சொந்தத் தொழில்ல வர வருமானம் நிச்சயமா அதிகமாத்தான் இருக்கு. ஆனா, எந்த ஒரு கமிட்மென்ட்டும் வச்சுக்கத் தயக்கமா இருக்கு!"

"நான் கூட முன்னேயெல்லாம் நகைச்சீட்டு போட்டுக்கிட்டிருந்தேன். இப்ப நகைச்சீட்டில சேரவே தயக்கமா இருக்கு. குறிப்பிட்ட தேதிக்குள்ள மாசாமாசம் பணம் கட்டணும். உங்ககிட்ட பணம் கேட்டா நீங்க கொடுப்பீங்களான்னு தெரியல. 'இப்ப பணம் இல்ல. ஒரு பெரிய ஆர்டரை எதிர்பார்த்துக்கிட்டிருக்கேன். அது வந்தப்பறம்தான் கையில பணம் புரளும்'னு சொல்லிட்டீங்கன்னா?" 

தான் சிலமுறை இவ்வாறு சொல்லி இருப்பது நினைவு வந்ததால், கதிரேசன் பேசாமல் இருந்தான்.

திரேசன் தன் நண்பன் தனசேகரனைப் பார்க்கச் சென்றிருந்தான். தனசேகரனும் சொந்தத் தொழில் செய்பவன்தான். ஆனால் கதிரேசனுடன் ஒப்பிடும்போது, அவன் தொழில் சிறியது, வருமானமும் குறைவுதான்.

தனசேகரனின் நிறுவனத்தில், அவன் அறையில் கதிரேசன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, தனசேகரனைப் பார்க்க ஒருவர் வந்தார்.

"ஒரு நிமிஷம்" என்று கதிரேசனிடம் சொல்லி விட்டு அவரிடம்  சில வார்த்தைகள் பேசிய தனசேகரன், பிறகு, "கொஞ்சம் வெளியில உட்காருங்க. மானேஜர்கிட்ட சொல்லி செக் கொடுக்கச் சொல்றேன்" என்றான்,

பிறகு மானேஜரை அழைத்தான்.

"எங்க ஊர் கோவில்ல ஆடி மாசம் நடக்கிற அன்னதானத்துக்கு எப்பவும் நன்கொடை கொடுப்போம் இல்ல, அவரு வந்திருக்காரு. பத்தாயிரம் ரூபாய்க்கு அவருக்கு செக் போட்டுடுங்க" என்றான் தனசேகரன், மானேஜரிடம்.

மானேஜர் சற்றுத் தயங்கி விட்டு, "சார்! இப்ப நிலைமை ரொம்ப டைட்டா இருக்கு" என்றபடியே, அவன் அருகில் வந்து ஒரு கணக்குப் புத்தகத்தைக் காட்டினார்.

சற்று யோசித்த தனசேகரன், மானேஜரிடம் சில விவரங்களைக் கேட்டு விட்டு, "ஒரு நிமிஷம் இருங்க!" என்றவன், அறைக்கு வெளியே போய் விட்டுச் சில விநாடிகளில் திரும்பி வந்தான்.

மானைஜரைப் பார்த்து, "பத்து நாள்  கழிச்சுப் பணம் கிடைச்சாப் போதும்னு அவர் சொல்றாரு. அதனால, நான் சொன்னபடி, நீங்க போஸ்ட் டேடட் செக் கொடுத்துடுங்க" என்றான்.

மானேஜர் வெளியே சென்றதும், தனசேகரன், கதிரேசனைப் பார்த்து,"என்னடா, பசிக்குச் சோறு கேட்டா, பத்து நாள் கழிச்சு வான்னு சொல்ற மாதிரி, அன்னதானத்துக்கு நன்கொடை கேட்டா, இவன் போஸ்ட் டேடட் செக் கொடுக்கறானேன்னு நினைக்காதே! நான் உன்னை மாதிரி பெரிய பிசினஸ்மேன் இல்ல. எங்கிட்ட பணப்புழக்கம் கம்மிதான். ஆனா, நல்ல விஷயங்களுக்கு உதவணுங்கற எண்ணம் இருக்கு. அதனால, இது மாதிரி ஏதாவது அட்ஜஸ்ட் பண்ணித்தான் உதவி செய்ய முடியுது. ஆனா, உதவணும்னு உறுதி இருக்கிறதாலேயோ என்னவோ, எனக்குத் தேவையான பணம் கிடைச்சுடுது. இப்ப பத்து நாள் தள்ளித் தேதி போட்டு செக் கொடுத்திருக்கேன்னா, அந்த செக் என் பாங்க்குக்கு வரப்ப எனக்கு ஏதாவது பணம் வந்திருக்கும். இதுவரையிலேயும் ஒரு தடவை கூட பாங்க்ல பணம் இல்லாம போய், 'தயவு செஞ்சு இந்த செக்கை பாஸ் பண்ணிடுங்க சார்'னு பாங்க் மானேஜர்கிட்ட கெஞ்சற நிலைமை வந்ததில்ல!" என்று சொல்லிச் சிரித்தான்.

நண்பனை வியப்புடன் பார்த்தான் கதிரேசன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 60
ஊக்கமுடைமை

குறள் 598:
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு.

பொருள்:
ஊக்கம் இல்லாதவர், பிறர்க்கு உதவும் வள்ளல் யாம் என்னும் மன உயர்வைப் பெற மாட்டார்.

Read 'Post-dated Cheque' the English version of this story by the same author.

               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...