"இந்த வருஷமும், வழக்கம் போல, பக்கத்தில போக முடியாத அளவுக்கு சேல்ஸ் டார்கெட் கொடுத்திருக்காரு நம் எம்.டி.!"
"ஒவ்வொரு வருஷமும் இந்தக் கதைதானே நடக்குது! கடந்த காலத்திலேந்து அவர் பாடம் எதுவும் கத்துக்கிட்ட மாதிரி தெரியலியே!"
"'இதெல்லாம் முடியாது சார்!'னு நம்ம சேல்ஸ் மானேஜர் தைரியமா சொல்லணும்! ஆனா, அவர் எம்.டி.யை எதிர்த்துப் பேச முடியாம, மௌனமா உக்காந்திருந்தாரு. ஆனா டார்கெட்டை சொல்லிச் சொல்லி, நம்ம உயிரை எடுப்பாரு!"
விற்பனை பட்ஜெட் கூட்டம் முடிந்து வெளியே வந்த விற்பனைப் பிரதிநிதிகள் தங்களுக்குள் பேசிக் கொண்டவை இவை.
"சார்! மீட்டிங்ல எதுவும் சொல்ல வேண்டாம்னு பேசாம இருந்தேன். நாம கொடுத்த டார்கெட் ரொம்ப அதிகம்னு தோணுது" என்றார் சேல்ஸ் மானேஜர் விக்கிரமன்.
"ரொம்ப அதிகம்னு நீங்க சொல்றதைக் கேக்க சந்தோஷமா இருக்கு. கொஞ்சம் அதிகம்னு சொல்லியிருந்தீங்கன்னா, அடாடா, இன்னும் அதிகமாக் கொடுத்திருக்கலாமேன்னு நினைச்சிருப்பேன்!" என்றார் நிர்வாக இயக்குனர் செந்தில், சிரித்துக் கொண்டே.
"சார்! நான் சொல்றேனேன்னு தப்பா நினைக்காதீங்க. ஒவ்வொரு வருஷமும் நாம பெரிய டார்கெட் கொடுக்கறோம். ஆனா, அதில ஐம்பது அல்லது அறுபது சதவீதம்தான் நம்மால விற்பனை செய்ய முடியுது. இது விற்பனைப் பிரதிநிதிகளை டிஸ்கரேஜ் பண்ணாதா?"
"விற்பனை இலக்கை எட்டலை என்பதற்காக நாம யாரையும் வேலையை விட்டு அனுப்பல, அவங்களுக்கு நல்ல இன்க்ரிமென்ட் கொடுக்கறோம். கடந்த மூணு வருஷங்கள்ள, ஒண்ணு ரெண்டு பேரைத் தவிர வேற யாரும் வேலையை விட்டுப் போகவும் இல்ல" என்றார் செந்தில்.
"ஆமாம் சார்! நீங்க ரொம்பப் பெருந்தன்மையா, தாராளமா நடந்துக்கிறீங்கன்னு விற்பனைப் பிரதிநிதிகள் பல பேர் எங்கிட்ட சொல்லி இருக்காங்க. அவங்க உங்களுக்கு விஸ்வாசமாத்தான் இருக்காங்க. ஆனா டார்கெட் அன்ரியலிஸ்டிக்கா இருக்கக் கூடாதுன்னு ஒரு பிரின்சிபிள் இருக்கு இல்ல?"
"இருக்கு. ஆனா, நான் பின்பற்றுவது வேற பிரின்சிபிள். நம் இலக்குகள் உயர்வா இருக்கணும்கறது என்னோட பிரின்சிபிள்!" என்று சொல்லிச் சிரித்தார் செந்தில்.
"அது நடைமுறைக்கு சரியா வராதே சார்!"
"உங்ககிட்ட ஒரு விஷயத்தைப் பகிர்ந்துக்கலாம்னு நினைக்கிறேன். நான் வாழ்க்கையில பல விஷயங்களுக்கு எயிம் பண்ணியிருக்கேன். ஆனா, பெரும்பாலும், எனக்குக் கிடைச்சது நான் எயிம் பண்ணினதை விட ரொம்பக் குறைவாத்தான் இருக்கும். ஆனா, மறுபடியும் நான் இன்னொரு பெரிய விஷயத்துக்குத்தான் குறி வைப்பேன்.
"ஆரம்பத்தில, நான் ஒரு நிறுவனத்தில வேலை பார்த்தேன். அந்த நிறுவனத்திலேயே மேலே வரணும்னு முயற்சி பண்ணினேன். ஆனா, ஓரளவுக்குத்தான் என்னால மேல வர முடிஞ்சது அப்புறம்தான் சொந்தத் தொழில் ஆரம்பிச்சேன். ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனமா வரணுங்கறது என்னோட இலக்கு. ஆனா, நாம இன்னும் ஒரு சின்ன நிறுவனமாத்தான் இருக்கோம்.
"ஆனா, இன்னும் என் இலக்கை நான் கைவிடல. சிறு நிறுவனங்களுக்குள்ளேயே நாம ஓரளவு பெரிய நிறுவனமா இருக்கோம்னா, அதுக்கு என்னோட உயர்வான இலக்குகள்தான் காரணம்னு நான் நினைக்கிறேன்!"
"நீங்க சொல்றது சரியா இருக்கலாம் சார். ஏன்னா, நம்ம செயல்பாடு நம் இலக்கை விடக் குறைவா இருந்தாலும், நம் வளர்ச்சி, இந்தத் தொழிலோட சராசரி வளர்ச்சியை விட அதிகமா இருக்கு. நீங்க சொன்னதைக் கேட்டப்புறம், உங்களோட உயர்ந்த இலக்குகள்தான் இதற்குக் காரணமா இருக்கும்னு தோணுது!" என்றார் விக்கிரமன்.
பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 60
ஊக்கமுடைமை
குறள் 596:
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
பொருள்:
எண்ணங்கள் எல்லாம் உயர்வாகவே இருக்க வேண்டும். அவை கைகூடாவிட்டாலும், அவ்வாறு எண்ணுவதை விடக் கூடாது.
No comments:
Post a Comment