Thursday, June 2, 2022

594. ஆர்டர் கிடைக்குமா?

"நீங்களும் ரெண்டு வருஷமா முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கீங்க. உங்க தயாரிப்பை யாரும் வாங்க மாட்டேங்கறாங்க. பேசாம இந்தத் தொழிலுக்கு முழுக்குப் போட்டுட்டு ஏதாவது வேலை தேடிக்கங்க. சம்பளம் குறைச்சலா இருந்தாலும் ஒரு நிலையான வருமானமாவது வரும்!" என்றாள் மீனாட்சி சலிப்புடன்.

"முயற்சி செஞ்சவங்கள்ளாம் கொஞ்ச நாளிலேயே மனம் தளர்ந்து தங்க முயற்சியைக் கைவிட்டிருந்தா இந்த உலகத்தில இவ்வளவு முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்குமா?" என்றான் ராம்குமார்.

"தத்துவம் சோறு போடாதுங்க!"

ரு நிறுவனத்திலிருந்து தன் தயாரிப்புக்கு ஆர்டர் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அறிந்து அங்கே சென்றான் ராம்குமார். 

அந்த நிறுவனத்தின் பொது மேலாளரிடம் தன் தயாரிப்பைப் பற்றி ராம்குமார் விளக்கிய பிறகு, மற்ற பலரும் சொன்னது போல் அவரும், "யோசிச்சு சொல்றேன்!" என்று சொல்லி அவனுக்கு விடை கொடுத்தார்.

நம்பிக்கையுடன் வந்திருந்த ராம்குமார் ஏமாற்றதுடன் அங்கிருந்து கிளம்ப யத்தனித்தான். 

அப்போது பொது மேலாளரிடம் ஏதோ கேட்பதற்காக, அவர் அறைக்குள் வந்த அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சிகாமணி, ராம்குமாரைப் பார்த்து விட்டு, பொது மேலாளரிடம், "'யார் இவரு?" என்று சாதாரணமாக விசாரித்தார்.

"அவரோட ப்ராடக்ட் பற்றி விளக்கறதுக்காக வந்தாரு. யோசிச்சு சொல்றதா சொல்லிக்கிட்டிருந்தேன்" என்றார் பொது மேலாளர்.

ராம்குமாரை உற்றுப் பார்த்த சிகாமணி அவன் முகத்தில் இருந்த ஏமாற்றத்தை கவனித்து விட்டு, "உள்ளே வாங்க. உங்க ப்ராடக்ட் பத்தி நானும் தெரிஞ்சுக்கறேன்!" என்று சொல்லி ராம்குமாரைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றார்.

சிகாமணி ராம்குமாருடன் தன் அறைக்குள் சென்றதும், பொது மேலாளர், அருகிலிருந்த தன் உதவியாளரிடம், "சாருக்கு ரொம்ப இரக்க குணம். இந்த ராம்குமார் மேல இரக்கப்பட்டு ஒரு சின்ன ஆர்டர் கொடுப்பாரு. அவரோட ப்ராடகட் எப்படி இருக்குமோ தெரியாது. அதனாலதான் யாரையுமே சாரைப் பாக்க விடாம நானே பேசி அனுப்பிடுவேன்!" என்றார்.

ராம்குமார் தன் நிவனம் பற்றியும், தன் தயாரிப்பு பற்றியும், அதன் சிறப்புகளைப் பற்றியும் கூறியதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட சிகாமணி, "மிஸ்டர் ராம்குமார்! உங்களுக்கு நான் ஆர்டர் கொடுக்கலாம். ஆனா அது உங்களுக்குப் பெரிசா உதவாதுன்னு நினைக்கிறேன்" என்றார்.

ராம்குமார் சற்று ஏமாற்றத்துடன், "சின்ன ஆர்டரா இருந்தாலும் பரவாயில்ல சார்!" என்றான்.

"சின்ன ஆர்டர்தான் கொடுக்கப் போறேன். ஆனா உங்க தயாரிப்புக்கு நல்ல மார்க்கெட் இருக்குன்னு நினைக்கிறேன். அதனால உங்க ப்ராடக்டைப் பயன்படுத்திப் பாத்துட்டு அது நல்லா இருந்தா நானே அதை டிஸ்டிரிப்யூட் பண்றேன். எனக்குப் பெரிய மார்க்கெடிங் நெட்வொர்க் இருக்கு. அதனால உங்க விற்பனை பலமடங்கு அதிகரிக்கும். உங்க உற்பத்தியையும் நீங்க அதிகரிக்க வேண்டி இருக்கும். அதுக்கு நீங்க தயாரா?" என்றார் சிகாமணி.

"நிச்சயமா சார்! ஒரு ஆர்டரை எதிர்பார்த்துதான் நான் வந்தேன், இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைக்கும்னு எதிர்பாக்கல!" என்றான் ராம்குமார் பொங்கி வந்த மகிழ்ச்சியுடன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 60
ஊக்கமுடைமை

குறள் 594:
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.

பொருள்:
தளர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கம் (செல்வம்) தானே அவன் உள்ள இடத்திற்கு வழி கேட்டுக் கொண்டு போய்ச் சேரும்.

               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...