Sunday, May 29, 2022

592. எப்படி இருந்த நான்...

தாமோதரனை மாலா திருமணம் செய்து கொண்டபோது அவன் ஒரு சிறிய நிறுவனத்தில் ஒரு விற்பனைப் பிரதிநிதியாகத்தான் பணியாற்றிக் கொண்டிருந்தான். 

சில வருடங்கள் கழித்து வேலையை விட்டு விட்டு கமிஷன் அடிப்படையில் சில பொருட்களை வாங்கி விற்க ஆரம்பத்தான். 

வியாபாரம் வெற்றிகரமாக நடக்க ஆரம்பித்ததும் சிறு முதலீட்டில் பொருட்களை வாங்கி விற்க ஆரம்பத்தான்.

தாமோதரனின் படிப்படியான முயற்சிகள் அவனுக்கு வேகமான வளர்ச்சியை அளித்தன. தாமோதரன் இண்டஸ்டிரீஸ் என்ற பெயரில் ஒரு தொழிற்சாலையை நடத்தும் அளவுக்கு அவன் வளர்ச்சி உயர்ந்தது.

"நம்ம நிலைமைக்கு ஒரு சாதாரண இடத்திலதான் உனக்குக் கல்யாணம் செஞ்சு கொடுத்தோம். ஆனா மாப்பிள்ளை இன்னிக்கு ஒரு தொழிலதிபரா இருக்காரு. உனக்கு நல்ல அதிர்ஷ்டம்தான்!" என்றார் மாலாவின் தந்தை. 

"அவளோட அதிர்ஷ்டம்தான் அவ புருஷனை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கு!" என்றாள் அவள் அம்மா.

"அதிர்ஷ்டம்தான் காரணம்னா அவரோட முயற்சிக்கு மதிப்பு இல்லையா?" என்றாள் மாலா.

"எப்படி புருஷனை விட்டுக் கொடுக்காம பேசறா பாரு! நீ இப்படி என்னிக்காவது எனக்கு ஆதரவாப் பேசி இருக்கியா?" என்று தன் மனைவியைச் சீண்டினார் அவள் அப்பா.

" 'எப்படி இருந்த நான் எப்படி ஆயிட்டேன்'னு விவேக் ஒரு படத்தில சொல்லுவாரு. அது மாதிரி ஆயிடுச்சு என் நிலைமை!" என்றான் தாமோதரன்.

"ஏன் அப்படிச் சொல்றீங்க?"

"இன்னும் என்ன ஆகணும்? கஷ்டப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமா மேலே வந்தேன். இப்ப திடீர்னு ஒரு பெரிய நஷ்டம் வந்து எல்லாம் போயிடுச்சு. தொழிலையே இழுத்து மூட வேண்டிய நிலைமை வந்துடும் போலருக்கு. நம்மகிட்ட இருந்த எல்லாம் போயிடுச்சு."

"எல்லாம் போனா என்னங்க? கல்யணம் ஆனதிலேந்து உங்ககிட்ட நான் பாக்கிற ரெண்டு விஷயங்கள் அப்படியேதானே இருக்கு?" என்றாள் மாலா.

"அது என்ன ரெண்டு விஷயம்?"

"உற்சாகம், விடாமுயற்சி. இந்த ரெண்டையும் வச்சுதானே நீங்க எல்லாத்தையும் சாதிச்சீங்க? அந்த ரெண்டும் உங்ககிட்ட இருக்கறப்ப நீங்க மறுபடியும் பல விஷயங்களை சாதிக்கலாமே!" என்றாள் மாலா.

"அந்த ரெண்டு விஷயங்கள் எங்கிட்ட இருக்கறதை எனக்கு ஞாபகப்படுத்த நீ இருக்கறப்ப என்னால நிச்சயம் சாதிக்க முடியங்கற நம்பிக்கை எனக்கு இப்ப வந்திருக்கு!" என்றான் தாமோதரன் உற்சாகத்துடன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 60
ஊக்கமுடைமை

குறள் 592:
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.

பொருள்:
ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும், மற்றப் பொருளுடைமை நிலைத்து நிற்காமல் நீங்கி விடக் கூடியவை..

               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...