புதிய தொழில் முனைவோருக்கு முதலீட்டு நிதி வழங்கி உதவும் அந்த வெஞ்சர் காபிடல் நிறுவனத்தில், புதிய தொழில் முனைவோர்களின் நேர்காணல் நடந்து முடிந்தது.
நேர்காணல் முடிந்த பிறகு, எந்த நிறுவனங்களுக்கு நிதி உதவுவது என்று முடிவு செய்ய, தேர்வுக்குழு உறுப்பினர்கள் கூடி விவாதித்தனர்.
அந்த ஆண்டு, அவர்கள் ஐந்து நிறுவனங்களுக்கு உதவி வழங்கத் திட்டமிட்டிருந்தனர். சற்று நேர விவாதத்துக்குப் பின், நான்கு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன.
"நாம ஷார்ட்லிஸ்ட் பண்ணின தொழில் முனைவர்கள்ள மூணு பேர் மீதி இருக்காங்க. அவங்கள்ளேந்து ஒத்தரை நாம தேர்ந்தெடுக்கணும்" என்றார் தேர்வுக்குழுத் தலைவர் கார்த்திகேயன்.
சிறிது நேர விவாதத்துக்குப் பிறகு, ஒரு தொழில் முனைவர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டார்.
"மீதமுள்ள ரெண்டு பேர்ல ஒத்தரை நாம தேர்ந்தெடுக்கணும். யாரைத் தேர்ந்தெடுக்கலாம்?" என்றார் குழுவின் தலைவர்.
"என்னோட தேர்வு மூர்த்திதான். அவரோட அகாடமிக் பேக்ரவுண்ட் பிரில்லியன்ட்டா இருக்கு. அவர் பொருளாதாரப் பின்னணியும் பரவாயில்ல. அவர் குடும்பப் பின்னணியைப் பாக்கறப்ப, அவருக்கு நிறைய தொடர்புகள் இருக்கும்னு தோணுது. அவரோட தொழில் முயற்சி வெற்றி அடைய நிறைய வாய்ப்பு இருக்கு" என்றார் சண்முகம் என்ற உறுப்பினர்.
மற்ற சிலரும் அவர் கூறியதை ஆமோதித்தனர்.
ரமணி மட்டும் மௌனமாக இருந்தார்.
"என்ன மிஸ்டர் ரமணி! நீங்க ஒண்ணும் சொல்லலியே?" என்றார் தலைவர்.
"ரெண்டு பேருக்குக் கொடுக்கலாம்னா, மூர்த்திக்குக் கொடுக்கறதை நான் ஆமோதிப்பேன். ஆனா ஒத்தருக்குத்தான் கொடுக்க முடியுங்கறப்ப, என்னோட தேர்வு செந்தில்தான்!" என்றார் ரமணி.
"என்ன சார் இது? அவரை எப்படி நாம ஷார்ட்லிஸ்ட் பண்ணினோம்னே எனக்கு ஆச்சரியமா இருக்கு! அவரோட ப்ராடக்ட் நல்லா இருக்குங்கறதுக்காக அவரை ஷார்ட்லிஸ்ட் பண்ணிட்டோம்னு நினைக்கிறேன். அதிலேயே எனக்கு உடன்பாடு இல்ல. கடைசியில தேர்வு பண்றப்ப பாத்துக்கலாம்னு அப்ப ஒண்ணும் சொல்லாம இருந்தேன். அவருக்கு நல்ல பின்னணியே இல்ல. முதல் தலைமுறைப் பட்டதாரி. கம்யூனிகேஷன் ரொம்ப புவரா இருக்கு. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே தடுமாறினாரு. பயம் வேற. பொருளாதாரப் பின்னணி, சமூகப் பின்னணி எல்லாம் ரொம்ப பலவீனமா இருக்கு. ஒரு தொழில்ல வெற்றி அடைய இதெல்லாம் முக்கியம் இல்லையா?" என்றார் சண்முகம், சற்று ஆவேசமாக.
"முக்கியம்தான். ஆனா, அதையெல்லாம் விட முக்கியம் உற்சாகமும், விடாமுயற்சியும். செந்திலைப் பொருத்தவரையில, நீங்க சொன்ன காரணங்களால, படிப்பில கவனம் செலுத்தி நல்ல மார்க் வாங்கி ஒரு நல்ல வேலை தேடிக்கிறதுதான் அவருக்கு எளிதா இருந்திருக்கும். ஆனா, அவர் கஷ்டப்பட்டு இந்த ப்ராடக்டை டெவலப் பண்ணி இருக்காரு. நிறைய பிரச்னைகளை சந்திச்சு, தோல்விகளை சந்திச்சு, தன் ஊக்கத்தைக் கைவிடாம இந்த ப்ராடக்டை டெவலப் பண்ணி இருக்காரு. அவரோட நேர்காணலிலேயே, இதையெல்லாம் அவர் சொன்னாரே! தன் முயற்சிகளைப் பத்திப் பேசறப்ப அவ எவ்வளவு உற்சாகமா இருந்தாரு, பாத்தீங்களா? மார்க்கெடிங், ஃபைனான்ஸ் எல்லாம் அவருக்கு சவாலாத்தான் இருக்கும். ஆனா, அவரோட உற்சாகமும், விடாமுயற்சியும் அவருக்குக் கை கொடுக்கும்னு நினைக்கிறேன்" என்றார் ரமணி.
"எதுக்கு இவ்வளவு ரிஸ்க் எடுத்து அவருக்கு நாம உதவணும்?" என்றார் சண்முகம்.
"வெஞ்சர் காபிடல்ங்கறதே ரிஸ்க் உள்ள முயற்சிகளுக்கு உதவறதுதானே?" என்றார் ரமணி, சிரித்தபடி.
தலைவர் நடத்திய ஓட்டெடுப்பில் பெரும்பாலோர் மூர்த்திக்கு உதவுவதற்கே வாய்ப்பளித்தனர்.
"இங்கே பாத்தீங்களா?" என்றார் ரமணி, சண்முகத்திடம்.
"உங்க பேருக்கு யாரோ செக் கொடுத்திருக்காங்க. அதை ஏன் எங்கிட்ட காட்டறீங்க?" என்றார் சண்முகம்.
"இது டிவிடெண்ட் செக். செந்திலோட கம்பெனியிலேந்து வந்திருக்கு!"
"செந்தில்? யார் அது? ஓ, ரெண்டு வருஷம் முன்னால வெஞ்சர் காபிடலுக்கு அப்ளை பண்ணி இருந்தாரே! ஆனா, நாம அவருக்கு ஃபைனான்ஸ் பண்ணல. உங்களுக்கு எப்படி டிவிடெண்ட் செக்..? ஓ..அப்படின்னா, நீங்க...?" என்றார் சண்முகம்.
"ஆமாம். நான் தனிப்பட்ட முறையில அவர் நிறுவனத்தில முதலீடு செஞ்சேன். அவர்கிட்ட இருந்த உற்சாகமும், விடாமுயற்சியும் எனக்கு அவர் மேல ஒரு வலுவான நம்பிக்கையைக் கொடுத்ததால, ரிஸ்க் எடுத்து, என் சொந்தப் பணத்தை முதலீடு செஞ்சேன். ரெண்டாவது வருஷத்திலேயே லாபம் சம்பாதிச்சு டிவிடெண்ட் கொடுத்திருக்காரு!" என்றார் ரமணி, உற்சாகமாக.
'ஆனா மூர்த்தியோட நிறுவனம் இன்னும் டேக் ஆஃப் ஆகவே இல்லையே!' என்று நினைத்துக் கொண்டார் சண்முகம்.
பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 60
ஊக்கமுடைமை
குறள் 591:
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.
பொருள்:
ஊக்கம் உடையவரே எதையும் உடையவர்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதை உடையவர் என்றாலும் உடையவர் ஆவாரோ?
Read 'The Dividend Cheque' the English version of this story by the same author.

No comments:
Post a Comment