"இப்பல்லாம் உங்க நண்பர் சீதாராம் நம்ம வீட்டுக்கே வரதில்லையே, ஏன்?" என்றாள் கல்பனா.
"அவனுக்கு என் மேல கோபம்!" என்றான் கோபால்.
"ஏன்? என்ன ஆச்சு?" என்றாள் கல்பனா, வியப்புடன்.
"அவன் செய்ய நினைக்கிறது எனக்குப் பிடிக்கல. அது தப்புன்னு சொன்னேன். அதனால கொஞ்சம் கோபமா இருக்கான் போலருக்கு. கொஞ்ச நாள்ள சரியாயிடும்னு நினைக்கிறேன். பார்க்கலாம்!"
"அவருக்குப் பிடிச்சதை அவர் செஞ்சுட்டுப் போறாரு. அது உங்களுக்கு எதுக்குப் பிடிக்கணும்? நீங்க வாயை மூடிக்கிட்டு இருக்க வேண்டியதுதானே?"
"நீயா இருந்தா, வாயை மூடிக்கிட்டு இருந்திருப்பேன்! அப்படித்தானே இருந்துக்கிட்டிருக்கேன்? என் நண்பன் விஷயத்தில அப்படி இருக்க முடியாது. அவன் செய்யறது தப்புன்னு நான் நினைச்சா, அப்படித்தான் சொல்லுவேன். அது மாதிரி, நான் தப்பு செஞ்சாலும், அது தப்புன்னு அவன் அடிச்சு சொல்லலாம், சொல்லணும்!"
"அப்படிச் சொல்ற உரிமை உங்களுக்கு இல்லேன்னு அவர் நினைச்சா, அதை நீங்க ஏத்துக்க வேண்டியதுதானே?"
"அது உரிமை இல்ல, கல்பனா, கடமை! என் கடமையைச் செய்யக் கூடாதுன்னு சொல்ல அவனுக்கு உரிமை இல்லை!"
"நீங்க சொல்றது வேடிக்கையா இருக்கு! மத்தவங்ளைக் குத்தம் சொல்றதுக்கு உங்களுக்கு உரிமையும் இல்ல, அது உங்க கடமையும் இல்ல!" என்றாள் கல்பனா
"குத்தம் சொல்றது இல்ல, கல்பனா. ஒத்தர் தப்பு செய்யறப்ப, அது தப்பு, அதை செய்யக் கூடாதுன்னு சொல்றதுக்குப் பேரு குத்தம் சொல்றது இல்ல, அவரைத் தப்பு செய்யாம தடுத்து நிறுத்தறது!" என்றான் கோபால்.
"நீங்க சொல்றது எனக்குப் புரியல. அப்படிச் சொல்ல உங்களுக்கு உரிமை இல்லைன்னு நான் நினைக்கிறேன். ஆனா, அதை நீங்க கடமைன்னு சொல்றீங்க! அது சரி, அவர் அப்படி என்ன தப்பு செஞ்சாரு?"
"உன் அண்ணன் செஞ்ச தப்பைத்தான்!" என்ற கோபால், கல்பனாவின் முகம் சட்டென்று வாடுவதைப் பார்த்து, "சாரி! உனக்கு வருத்தமா இருக்கும்னு யோசிக்காம சொல்லிட்டேன்" என்றான்.
"பரவாயில்ல. நடந்ததைத்தானே சொன்னீங்க? ஆமாம், எங்க அப்பா அம்மாவை என் அண்ணன் முதியோர் இல்லத்தில சேர்த்தப்ப, அவங்கிட்ட சொல்லித் தடுங்கன்னு நான் உங்ககிட்ட எவ்வளவோ தடவை சொன்னேன். ஆனா, நீங்க ஒரு தடவை சொல்லிட்டு, அப்புறம் அதில தலையிடாம ஒதுங்கி இருந்துட்டீங்க. ஆனா, உங்க நண்பர்கிட்ட சண்டை போட்டுட்டு, அவர் உங்ககிட்ட பேசாத அளவுக்கு செஞ்சிருக்கீங்களே!"
"உன் அண்ணன்கிட்ட நான் ஒரு அளவுக்குத்தான் சொல்ல முடியும். அந்த அளவுக்கு சொன்னேன். அவர் என் பேச்சைக் கேக்கல. என் குடும்ப விஷயத்தில தலையிடாதீங்கன்னு சொல்லிட்டாரு. அதுக்கப்பறம் அவர்கிட்ட நான் எப்படிப் பேச முடியும்? ஆனா, இதையே என் நண்பன் சீதாராம் சொன்னப்ப, 'அப்படித்தான் தலையிடுவேன். ஏன்னா, நீ தப்பு செய்யாம தடுக்கிற பொறுப்பு எனக்கு இருக்கு'ன்னு சொன்னேன். அதுக்கப்பறம்தான் அவன் எங்கிட்ட கோவிச்சுக்கிட்டுப் பேசாம இருக்கான்!" என்றான் கோபால், வருத்தத்துடன்.
"கோபம் தணிஞ்சு, மறுபடி அவரு உங்ககிட்ட நெருக்கமா நடந்துப்பாரா?" என்றாள் கல்பனா.
"தெரியல. ஆனா, நான் செஞ்சது சரிதான்னு மட்டும் எனக்குத் தெரியும்" என்றான் கோபால், உறுதியாக.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 79
நட்பு
குறள் 784:
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.
No comments:
Post a Comment