Thursday, April 21, 2022

570. படிக்காதவர்கள்!

"இந்த அரசங்கம் வந்ததிலேந்து நிறைய விஷயங்களைத் தலைகீழா மாத்திக்கிட்டிருக்காங்க" என்றார் பொன்னையா.

"மாற்றங்கள் நல்லதுதானே! மாற்றங்கள்னாலே, முன்னேற்றம்தானே?" என்றார் சின்னையா.

"அப்படியா? இப்ப நான் ஒரு வேலையில இருக்கேன். இதை விட்டுட்டு, இதை விட கஷ்டமான, இன்னும் குறைவான சம்பளத்துக்கு வேற ஒரு வேலைக்குப் போனா, அது மாற்றம்தான். ஆனா அது முன்னேற்றமா?"

"நீ சொல்ற உதாரணம் இந்த அரசாங்கம் செய்யற மாற்றங்களுக்குப் பொருந்தாது. அவங்க எல்லா மாற்றங்களையும், ஆலோசகர்களோட யோசனைகளைக் கேட்டு, அல்லது கமிட்டிகளைப் போட்டு, அவற்றோட பரிந்துரைகள் அடிப்படையிலதானே செய்யறாங்க?"

"ஆலோசகர்கள் இருந்தா, எல்லாம் சரியா இருக்கணுமா என்ன? ஹிட்லருக்குக் கூட ஆலோசகர்கள் இருந்திருப்பாங்க! ஒரு ஜனநாயக நாட்டில கொடுங்கோல் ஆட்சி செய்யறவங்க, தாங்க ரொம்ப சரியா செயல்படறதாக் காட்டிக்கறதுக்காக, இது மாதிரி ஆலோசகர்கள், கமிட்டிகள் இவங்களோட ஆலோசனையைக் கேட்டுச் செயல்படற மாதிரி ஒரு தோற்றத்தை உருவாக்குவாங்க! நம் அரசாங்கம் போட்டிருக்கிற கமிட்டிகள்ள இருக்கறவங்க பெரும்பாலும் ஆளுங்கட்சிக்காரங்க, மீதிப்பேரு இந்த அரசாங்கத்தோட அத்துமீறல்களையெல்லாம் ஆதரிச்சுக் குரல் கொடுக்கறவங்க!"

"எப்படி இருந்தா என்ன? இந்த மாற்றங்களால நாட்டில முன்னேற்றம் ஏற்பட்டிருக்கு இல்ல?"

"முன்னேற்றம் ஏற்பட்டிருக்கா? இந்த மாற்றங்களால நிறையப் பின்னடைவுகள்தான் ஏற்பட்டிருக்குன்னு புள்ளி விவரங்கள் சொல்லுது. ஆனா, அதையெல்லாம் முன்னேற்றம்னு இந்த அரசாங்கமும், அவங்க கட்டுப்படுத்தி வச்சிருக்கிற ஊடகங்களும் சொல்லிக்கிட்டிருக்காங்க!"

"இல்லையே! பிரச்னைகள் இருக்கு, ஆனா, அவையெல்லாம் காலப்போக்கில சரியாயிடும், மக்கள் கொஞ்ச காலம் காத்திருக்கணும்னு சில ஆலோசகர்கள் சொல்றாங்களே!"

"எவ்வளவு காலம்? நூறு வருஷமா? இதெல்லாம் ஏமாத்து வேலைன்னு உனக்குப் புரியல?"

"ஒரு அரசாங்கம் படிச்சவங்களையும், விஷயம் தெரிஞ்சவங்களையும், நிபுணர்களையும் வச்சு கமிட்டிகள் போட்டு அவர்களோட ஆலோசனைகள்படி சில மாற்றங்களைச் செய்யுது. இதில எங்க தப்பு இருக்கு?"

"முதல்ல, நீ சொல்ற கமிட்டியில இருக்கிற பல பேர் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள். படிப்புக்கும், அவங்களுக்கும் அதிகத் தொடர்பு இல்ல. அவங்கள்ள சில பேர் பட்டப் படிப்போ, வேற படிப்போ படிச்சிருந்தாலும், அவங்க பேசறதை, செய்யறதை எல்லாம் பார்க்கும்போது, அவங்களைப் படிச்சவங்களா ஏத்துக்க முடியாது. விஷயம் தெரிஞ்சவங்களா, நிபுணர்களா இருக்கிற சில பேரும், இந்த அரசாங்கம் செய்யற அட்டூழியங்களைக் கண்ணை மூடிக்கிட்டு ஆதரிக்கிறவங்களா இருக்காங்க. சாதாரண மக்கள் படற கஷ்டங்களைப் புரிஞ்சுக்க, இவங்க மறுக்கறாங்க. அதாவது, தங்கள் கல்வியையும் அறிவையும் பயன்படுத்தவே மறுக்கறாங்க. அதனால, இவங்களையும் படிக்காதவங்களாத்தான் கருதணும்!"

"அதாவது, இது ஏற்கெனவே ஒரு கொடுங்கோல் ஆட்சி. இவங்க படிக்காதவங்களைத் தங்களுக்குத் துணையா வச்சுக்கிட்டு செயல்படறது இன்னும் கொடுமை. இதானே நீ சொல்ல வரது?" என்றார் சின்னையா, கேலியான குரலில்.

"ரொம்ப சரியா சொன்ன! திருவள்ளுவரால கூட இவ்வளவு சுருக்கமாவும், தெளிவாகவும் சொல்லி இருக்க முடியாது!" என்றார் பொன்னையா, பாதி உண்மையாகவும், பாதி கேலியாகவும்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 57
வெருவந்த செய்யாமை 
(மக்களுக்கு அச்சமூட்டும் செயல்களைச் செய்யாமை)

குறள் 570:
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.

பொருள்: 
கொடுங்கோல் அரசு, கல்லாதவர்களைத் தனக்கு பக்கபலமாக்கிக் கொள்ளும். அதைப் போல பூமிக்கு பாரம் வேறு எதுவுமில்லை.

Read 'The Uneducated' the English version of this story by the same author.
               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...