அதற்குப் பிறகு, அவன் நண்பர்கள் எங்கள் வீட்டுக்கு வருவது குறைந்து விட்டது. ஆனால் அவன் தன் நண்பர்கள் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தான்.
அப்போதும் அப்பா அவனைக் கடிந்து கொண்டார்.
"ஏண்டா, படிக்காம, எப்ப பார்த்தாலும் நண்பர்கள் வீட்டில போய் உக்காந்திருக்கியே!" என்பார், சில சமயம்.
"இல்லப்பா. படிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்!" என்பான் அண்ணன்.
பரீட்சைகளில் அவன் நல்ல மார்க் வாங்கி வந்ததால், அப்பா சமாதானமாகி விட்டார்.
ஆனால், பொதுவாக யாரிடமும் அதிகம் நெருங்கிப் பழகாத இயல்பு கொண்ட என் அப்பாவுக்கு, தன் மகன் பலரிடமும் நட்பு வைத்துக் கொண்டிருந்தது பிடிக்கவில்லை. அவரைப் பொருத்தவரை, நண்பர்கள் என்றால் ஊர் சுற்றுவது, நேரத்தை வீண்டிப்பது என்று பொருள்.
அத்துடன், நண்பர்கள் அதிகம் இருந்தால், அவர்களிடமிருந்து தவறான பழக்கம் எதுவும் தன் மகனுக்கு வந்து விடக் கூடும் என்ற கவலையும் அவருக்கு இருந்தது.
"இவன் பல பேரோட பழகிக்கிட்டிருக்கான். அவங்கள்ள சில பேருக்கு பீடி, சிகரெட் மாதிரி கெட்ட பழக்கம் இருக்கும். இவன் அதையெல்லாம் பழகிக்காம இருக்கணுமே!" என்பார், என் அம்மாவிடம்.
"நம்ம பையன் அப்படியெல்லாம் பழகிக்கிறவன் இல்லை!" என்பார் என் அம்மா, தன் பிள்ளையை விட்டுக் கொடுக்காத அம்மாவின் இயல்புடன்.
அப்போது என் அண்ணன் பதினோராம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். நான் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன்.
ஒரு நாள் இரவு, என் அப்பா திடீரென்று மார்பைப் பிடித்துக் கொண்டு, "திடீர்னு மார் வலிக்குதே!" என்று சொல்லிப் படுத்துக் கொண்டார்.
எங்கள் யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. நாங்கள் இருந்தது ஒரு கிராமம். எங்கள் ஊரில் மருத்துவ வசதி கிடையாது. இரண்டு மைல் தள்ளி ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தது. அது கூட இரவில் மூடப்பட்டிருக்கும். அதில் வேலை பார்க்கும் ஒரே டாக்டர் அருகிலேயே குவார்ட்டர்ஸில்தான் தங்கி இருப்பார். அவசரம் என்றால் அவரை எழுப்பலாம். ஆனால், அப்பாவை அங்கே எப்படி அழைத்துச் செல்வது? அந்தக் காலகட்டத்தில், கிராமப் பகுதிகளில் ஆம்புலன்ஸ் வசதிகள் அதிகம் இல்லை. தொலைபேசி வசதியும் கிடையாது.
"நான் போய் ஏதாவது வண்டி கிடைக்குதான்னு பாத்துட்டு வரேன்" என்று என் அண்ணன் வெளியே ஓடினான்.
அண்ணன் வெளியே சென்று நீண்ட நேரம் ஆகி விட்டது. வண்டி எதுவும் கிடைக்கவில்லை போலிருக்கிறது. அப்பா கட்டிலில் கண்ணை மூடிப் படுத்துக் கொண்டிருந்தார். வலி குறைந்து விட்டதா, அல்லது வலியைப் பொறுத்துக் கொண்டு படுத்துக் கொண்டிருந்தாரா என்று தெரியவில்லை. நானும் அம்மாவும் செய்வதறியாமல் நின்று கொண்டிருந்தோம்.
சுமார் ஒரு மணி நேரம் கழித்து, என் அண்ணன் வந்தான் அவனுக்குப் பின்னால், தோளில் போட்டுக் கொண்டிருந்த ஸ்டெதாஸ்கோப் மூலம் தன்னை ஒரு டாக்டர் என்று அடையாளம் காட்டிய ஒருவர், இன்னொரு மனிதர் ஆகியோர் வந்து கொண்டிருந்தனர்.
"வாங்க டாக்டர்!" என்று டாக்டரை அவசரமாக அப்பாவிடம் அழைத்துச் சென்றான் அண்ணன்.
டாக்டர் அப்பாவைப் பரிசோதித்து விட்டு, தான் எடுத்து வந்த இஞ்ஜெக்ஷனைப் போட்டு விட்டு, சில மாத்திரைகளை அம்மாவிடம் கொடுத்து அவற்றை எப்போது கொடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்.
போகும்போது, அம்மாவைப் பார்த்து, "அவருக்கு வந்தது ஹார்ட் அட்டாக்தான். ஆனா கவலைப்படாதீங்க. இப்ப ஆபத்து எதுவும் இல்ல. இஞ்ஜெக்ஷன் போட்டு மாத்திரை கொடுத்திருக்கேன். இப்ப அவர் சரி ஆயிட்டாரு. நாளைக்கு ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு வாங்க. முழுசா செக் பண்ணிப் பாத்துடலாம்" என்று சொல்லி விட்டுச் சென்றார்.
டாக்டருக்கு நன்றி சொன்ன என் அண்ணன், "நானும் சைக்கிள்ள உங்க கூடவே உங்க வீடு வரையிலும் வரேன் சார்!" என்றான்.
"அதெல்லாம் வேண்டாம்ப்பா! நான் போய்க்கறேன். இது மாதிரி அவசரத்துக்கெல்லாம் ராத்திரியில வந்துட்டுப் போறது எனக்குப் புதுசு இல்ல" என்றார் டாக்டர்.
பிறகு என் அண்ணன் அந்த இன்னொரு மனிதரைப் பார்த்து, "ரொம்ப நன்றி, சார். நான் உங்களை சைக்கிள்ள உங்க வீட்டில கொண்டு விட்டுடறேன்" என்றான்.
"வேண்டாம்ப்பா! என் வீடு பக்கத்திலதானே? நான் நடந்தே போய்க்கறேன்" என்றார் அவர்.
அவர்கள் இருவரும் கிளம்பிச் சென்றதும், "என்னடா இது! எல்லாமே எனக்கு அதிசயமா இருக்கு! டாக்டரை எப்படிக் கூப்பிட்டுட்டு வந்தே? அவர் கூட வந்தவர் யாரு?" என்றார் என் அம்மா, பிரமிப்புடன்.
"அவர் என் நண்பன் கோபாலோட அப்பா. டாக்டரை அவருக்கு நல்லாத் தெரியும்னு கோபால் ஒரு தடவை எங்கிட்ட சொல்லி இருக்கான். அதனால, கோபால் வீட்டுக்குப் போய் அவன்கிட்ட விஷயத்தைச் சொன்னேன். அவன் அவனோட அப்பாகிட்ட சொன்னதும், அவர் உடனே என்னோட கிளம்பிட்டாரு. அவரை சைக்கிள்ள வச்சு அழைச்சுக்கிட்டு டாக்டர் வீட்டுக்குப் போனேன். கோபாலோட அப்பா டாக்டரை எழுப்பி அவர்கிட்ட விஷயத்தைச் சொன்னதும், டாக்டர் தன்னோட சைக்கிளை எடுத்துக்கிட்டு எங்களோடயே கிளம்பி வந்துட்டாரு. நல்ல வேளையா, அப்பாவுக்கு உடனேயே டிரீட்மென்ட் கிடைச்சுது!" என்றான் என் அண்ணன்
"சின்னப் பசங்க சிநேகத்துக்கு இவ்வளவு சக்தி இருக்கா?" என்றார் என் அம்மா வியப்புடன்.
கண்ணை மூடிக் கொண்டு படுத்திருந்த அப்பா, ஒரு கணம் கண்ணைத் திறந்து அண்ணனைப் பார்த்து விட்டு, மீண்டும் கண்களை மூடிக் கொண்டார்.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 79
நட்பு
குறள் 781:
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
No comments:
Post a Comment