Thursday, January 21, 2021

442. துணை

"எல்லாரும் குழந்தைகள் இல்லையேன்னு ஏங்குவாங்க. நீ பெரியவங்க இல்லையேன்னு வருத்தப்படறியே!" என்றான் பிரபாகர்.

"என் அப்பா பல வருஷங்களுக்கு முன்னேயே இறந்துட்டாரு. நமக்குக் கல்யாணம் ஆகிக் கொஞ்ச நாள்ள என் அம்மாவும் இறந்துட்டாங்க. உங்க அப்பா அம்மாவும் ரொம்ப நாள் முன்னாலேயே போய்ச் சேந்துட்டாங்க. 

"கடவுள் புண்ணியத்தில நமக்கு ஒரு பையன் பிறந்திருக்கான். நீங்க நல்ல வேலையில இருக்கீங்க. நமக்கு எந்தக் குறையும் இல்லதான். ஆனா, சின்னதும்,பெரிசுமா, நமக்கு ஏதாவது பிரச்னை வந்துக்கிட்டே இருக்கே! அதையெல்லாம் சமாளிக்கறதுக்குள்ள நாம திணறிப் போயிடறோம், இல்ல? 

"வீட்டில யாராவது பெரியவங்க இருந்தா, இது மாதிரி பிரச்னைகளை சமாளிக்க அவங்க சரியானபடி வழிகாட்டுவாங்க. குழந்தையை சரியா வளக்கறதுக்கும், அவங்க வழிகாட்டுதல் பயனுள்ளதா இருக்கும். அதனாலதான், வீட்டில பெரியவங்க யாராவது இருந்தா, நல்லா இருக்கும்னு நினைக்கறேன்" என்றாள் சியாமளா.

"குழந்தையைப் பாத்துக்கறது உனக்குக் கஷ்டமா இருந்தா, ஒரு ஆயாவை வச்சுக்கலாம்."

"நான் விரும்பறது அது இல்ல. நமக்கு வழி காட்டவும், ஆலோசனை சொல்லவும் வீட்டில பெரியவங்க யாராவது இருந்தா, நல்லா இருக்கும்னுதான் நினைச்சேன். சில குடும்பங்கள்ள பெரியவங்க இருக்கறதைப் பாத்தா எனக்கு நம்ம வீட்டில அது மாதிரி இல்லையேன்னு ஏமாத்தமா இருக்கு."

"நீ சொல்றது ஆச்சரியமா இருக்கு. பல குடும்பங்கள்ள பெரியவங்களை ஒரு சுமையா நினைக்கறாங்க. பெரியவங்களை முதியோர் விடுதியில கொண்டு விட்டுட்டு, தாங்கள், தங்கள் பிள்ளைகள்னு இருக்கணும்னு நினைக்கறவங்கதான் அதிகம்."

"அது உண்மைதான். பெரியவங்களோட அருமை அவங்களுக்குப் புரியலேன்னுதான் நினைக்கறேன்."

"நீ நினைக்கறது சரியா இருக்கலாம். ஆனா, குழந்தைகளைத் தத்து எடுக்கற மாதிரி, பெரியவங்களைத் தத்து எடுக்க முடியாதே!" என்றான் பிரபாகர்.

"அது சரிதான்!" என்றாள் சியாமளா.

ரண்டு நாட்கள் கழித்து, பிரபாகர் சியாமளாவிடம் சொன்னான்:
"சியாமளா! நீ சொன்னதைப் பத்தி யோசிச்சுக்கிட்டிருந்தேன். வீட்டில பெரியவங்க யாராவது இருக்கறது நல்லதுதான்னு எனக்கும் தோணுது. நமக்கு ஏதாவது பிரச்னைன்னா, அவங்களாலதான் நமக்கு வழிகாட்ட முடியும்."

"அது மட்டும் இல்ல.பெரியவங்க வழிகாட்டல் இருந்தா, நாம தப்புப் பண்ண மாட்டோம். அதனால நமக்குப் பிரச்னைகள் வரதையும் நம்மால தவிர்க்க முடியும்'" என்றாள் சியாமளா.

"என் நண்பன் சேகர் இப்ப அமெரிக்கால இருக்கான். அவன் அங்கேயே செட்டில் ஆயிட்டான். அவன் அப்பா இந்த ஊர்ல தனியாத்தான் இருக்காரு. அவருக்கு அமெரிக்காவுக்குப் போயிட்டு வரதில விருப்பமில்ல. அவர்  ரொம்ப நல்ல மனுஷன். படிச்சவர். அனுபவசாலி. அவர்கிட்ட நான் நிறைய தடவை பேசி இருக்கேன். அவரை எல்லாருக்குமே பிடிக்கும்.

"நாம அவரைப் போய்ப் பாப்போம். உனக்கு அவரைப் பிடிச்சிருந்தா, அவரும் சேகரும் சம்மதிச்சா, அவரை நமக்குத் துணையா நம்ம வீட்டில வச்சுக்கலாம். என்ன சொல்ற?"

"நிச்சயமா. எனக்கு அவரைப் பிடிக்காம போகாது. அவரும், உங்க நண்பரும் சம்மதிச்சா, அதை நம்ம அதிர்ஷ்டம்னுதான் நினைப்பேன்!" என்றாள் சியாமளா, மகிழ்ச்சியுடன். 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 45 
 பெரியாரைத் துணைக்கோடல்  
குறள் 442
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.

பொருள்:
வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்க வல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.

Read 'Companion' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                             காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...