Sunday, March 15, 2020

400. சொந்தத் தொழில்

"25 வருஷம் வேலை செஞ்சாச்சு. சொந்தமா வீடு இருக்கு. ஓரளவுக்கு சேமிப்பு இருக்கு. வேலையை விட்டா, பி எஃப் பணம் கொஞ்சம் வரும். இப்ப ரிஸ்க் எடுக்காட்டா, அப்புறம் எப்ப ரிஸ்க் எடுக்கறது?" என்றார் தனபால், மனைவியிடம். 

"ஏங்க, நல்லா படிச்சிருக்கீங்க. தொல்லை இல்லாத வேலை. கை நிறைய சம்பளம். வருஷா வருஷம் இன்க்ரிமென்ட். இன்னும் எட்டு வருஷம் சர்வீஸ் இருக்கு, அதுக்கப்பறம் கூட உங்களை உங்க கம்பெனியில வேலையில தொடரச் சொன்னாலும் தொடருவாங்க. இப்ப எதுக்கு வேலையை விட்டுட்டு சொந்தமாத் தொழில் ஆரம்பிக்கறேங்கறீங்க?" என்றாள் அவர் மனைவி அம்பிகா.

"சொந்தத் தொழில் செய்யணும்கறது என்னோட கனவு. நான் ஒண்ணும் சின்ன வயசிலேயே ரிஸ்க் எடுத்து சொந்தத் தொழில் ஆரம்பிக்கலையே! 25 வருஷம் வேலை  செஞ்சுட்டு, நம்ம பெண்ணைப்  படிக்க வச்சு, கல்யாணம் பண்ணிக் கொடுத்தப்புறம்தானே சொந்தத் தொழில் ஆரம்பிக்கறேன்? அதோட கொஞ்சம் பணமும் சேத்து வச்சிருக்கோம். என் கனவை நிறைவேத்த இதுதான் சரியான சமயம்."

"என்னவோ போங்க. நான் சொன்னா கேக்கவா போறீங்க?"

னபால் திட்டமிட்டபடியே வேலையை விட்டு விட்டு, கொஞ்சம் பணத்தை முதலீடு செய்து சிறிய அளவில் ஒரு சொந்தத் தொழிலை ஆரம்பித்தார். 

ஆறே மாதங்களில் தொழிலில் வளர்ச்சி ஏற்பட்டது. அதிக முதலீடு தேவைப்பட்டதால் வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்தார். அவர் வீட்டை அடமானம் வைத்தால் கடன் கொடுப்பதாக வங்கி கூறியது.

மனைவியின் எதிர்ப்பை மீறி வீட்டை அடகு வைத்துக் கடன் வாங்கினார் தனபால். 

"தொழில்தான் நல்லாப் போய்க்கிட்டிருக்கே! அப்புறம் ஏன் பயப்படணும்? அஞ்சு வருஷத்திலே கடனையெல்லாம் அடைச்சு வீட்டை மீட்டுடறேன்!" என்றார் தனபால்.

ஆனால் அவர் எதிர்பாராத விதமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தொழிலில் நலிவு ஏற்படத் தொடங்கியது. சில மாதங்களில் பிரச்னை பெரிதாகித் தொழிலையே மூடும் அளவுக்கு வந்து விட்டது. வங்கிக்கடன், வெளிக்கடன் என்று கடன்கள் பெருகிப் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தின.

வேறு வழியின்றி, தனபால் தன் வீட்டை விற்று எல்லாக் கடன்களையும் அடைத்தார். சேமிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக முன்பே கரைந்து விட்டன. கடன்களையெல்லாம் அடைத்த பிறகு, கையில் ஒரு சில லட்சங்கள் கூட மிஞ்சவில்லை.  

ஒரு லட்ச ரூபாய் முன் பணம் கொடுத்து ஒரு வாடகை வீட்டுக்குக் குடிபோனார் தனபால். 

"ராஜா மாதிரி இருந்தீங்க. இப்ப வாடகை வீட்டுக்குக் குடிபோக வேண்டிய  அளவுக்கு ஆயிடுச்சே நம்ப நிலைமை! கையில இருக்கற காசு எவ்வளவு நாளைக்கு வரும்? எப்படி வாடகை கொடுக்கப் போறோம்? சாப்பாட்டுக்கு என்ன செய்யப் போறோம்?" என்று புலம்பினாள் அம்பிகா.

தனபால் எதுவும் பேசவில்லை.

அடுத்த சில நாட்களில் தனபால் இரண்டு மூன்று முறை வெளியே சென்று வந்தார். அவர் எங்கே போகிறார் என்று அம்பிகாவும் கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை.

ரு வாரம் கழித்து தனபால் அம்பிகாவிடம் சொன்னார். "அம்பிகா! திங்கட்கிழமையிலேந்து நான் வேலைக்குப் போறேன்."

"அப்படியா? எங்கே?" என்றாள் அம்பிகா, சற்று வியப்புடன்.

நிறுவனத்தின் பெயரைச் சொன்னார் தனபால்.

"எவ்வளவு சம்பளம்?"

"ஒரு லட்சம் ரூபாய்."

"பரவாயில்லையே! நம்ப சேமிப்பு, வீடு எல்லாம் நம்ம கையை விட்டுப் போனதும், எல்லாமே போயிடுச்சுன்னு நினைச்சேன்!" என்றாள் அம்பிகா. 

"நம்ப சொத்தெல்லாம் போனாலும், நான் படிச்ச படிப்பு நம்மளைக் காப்பாத்திடுச்சு!" என்றார் தனபால். 

பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 40
கல்வி
குறள் 400:
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

பொருள்:
ஒருவருக்கு அழிவு இல்லாத செல்வம் கல்வி மட்டுமே. மற்ற செல்வங்கள் ஒருவருக்கு உண்மையான செல்வம் அல்ல.

Read 'Dhanapal's Business Venture' the English version of this story by the same author.
             அறத்துப்பால்                                                                           காமத்துப்பால் 










No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...