Sunday, June 9, 2024

1074. ஜாமீன் கிடைக்குமா?

தன்னைப் பார்க்கச் சிறைக்கு வந்த வக்கீல் தண்டபாணியிடம், "என்ன வக்கீல் சார்? எப்ப பெயில் கிடைக்கும்?" என்றான் சச்சிதானந்தம், அதிகாரமாக.

"முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன், சார். போஸ்கோ கேஸ்ங்கறதால, உடனே பெயில் கிடைக்கறது கஷ்டம்தான்" என்றார் தண்டபாணி.

"போஸ்கோ கேஸ்னா?"

"பெண்கள்கிட்ட தப்பா நடந்துக்கறது, பாலியல் குற்றங்கள் இதெல்லாம் போஸ்கோவில வரும். அது கொஞ்சம் கடுமையான சட்டம்."

"என் மேல ஒரு பொண்ணு குற்றம் சாட்டினா, நான் குற்றவாளி ஆயிடுவேனா? ஆதாரம் வேண்டாமா?"

"ஆதாரம் இருக்காங்கற கேள்வியெல்லாம் வழக்கு விசாரணையின்போதுதான் வரும். ஆனா, ஆரம்பக் கட்டத்தில, அந்த வாதத்தையெல்லாம் விரிவாப் பாக்க மாட்டாங்க" என்ற வக்கீல் சற்றுத் தயங்கி விட்டு, "அதோட, உங்க மேல ஒரு பொண்ணு குற்றம் சாட்டினதைத் தொடர்ந்து, இன்னும் சில பெண்கள், தாங்களும் பாதிக்கப்பட்டதா குற்றம் சாட்டி இருக்காங்க. அதனால, இப்ப நிலைமை இன்னும் கடுமையா ஆயிடுச்சு" என்றார்.

"ஊர்ல யாரும் செய்யாததையா நான் செஞ்சுட்டேன்? நான் அப்படிச் செய்யவே இல்லைன்னு அடிச்சு வாதாடுங்க. செஞ்சதுக்கு ஆதாரம் ஏதாவது இருந்தா, அந்தப் பொண்களோட சம்மதத்தோடதான் நான் அவங்ககிட்ட உறவு வச்சுக்கிட்டேன்னு வலுவா வாதாடுங்க!" என்றான் சச்சிதானந்தம்.

'எப்படி வாதாடணும்னு எனக்கே வகுப்பு எடுக்கறியா?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட வக்கீல் தண்டபாணி, "வழக்கு விசாரணைக்கு வரட்டும். நாம வலுவான வாதங்களை எடுத்து வைப்போம்" என்றார்.

"இங்கே ஒரு கைதியைப் பார்த்தேன். அவன் பல பெண்கள்கிட்ட தப்பா நடந்துக்கிட்டு, அதை வீடியோ வேற எடுத்து வச்சிருந்தானாம். அந்த வீடியோ வெளியாகி, அவனைக் கைது பண்ணி இருக்காங்க. இப்ப அவன் வக்கீல் எப்படி வாதாடறாரு தெரியுமா?"

"எப்படி?"

"அந்தப் பெண்களோட சம்மதத்தோடதான் அவன் அவங்களோட உறவு வச்சுக்கிட்டதா வாதாடறாராம்!"

"இது ஒரு வழக்கமான வாதம்தானே?"

"அதோட இல்ல. அந்தப் பெண்கள்தான் வீடியோ எடுக்கச் சொன்னாங்க, வீடியோவைத் தங்களுக்கு அனுப்பச் சொன்னாங்கன்னு வாதாடப் போறாராம்!"

"அடப்பாவிங்களா!" என்றார் தண்டபாணி.

"பாருங்க, உலகத்தில எவ்வளவு மோசமான மனுஷங்கல்லாம் இருக்காங்கன்னு! நான் அப்படியெல்லாம் இல்லையே! எனக்கு ஏன் ஜாமீன் கொடுக்கக் கூடாது?" என்றான் சச்சிதானந்தம், நியாயத்தை வலியுறுத்துவது போன்ற தொனியில்.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 108
கயமை (தீய குணம்)

குறள் 1074:
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.

பொருள்: 
பண்பாடு இல்லாத கயவர்கள், தம்மைக் காட்டிலும் இழிவான குணமுடையோரைக் கண்டால், அவர்களை விடத் தாம் சிறந்தவர்கள் என்று கர்வம் கொள்வார்கள்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...