Monday, July 24, 2023

900. முதல்வரின் மறைவுக்குப் பின்...

முதலமைச்சராக இருந்த நல்லசிவம் மறைந்ததும் அவருக்கு அடுத்த இடத்திலிருந்த தயாளன்தான் முதல்வராகி இருக்க வேண்டும். 

தயாளன் கட்சிக்குள் நல்லசிவத்தை விட மூத்த தலைவர். ஆயினும் நல்லசிவம் மக்களிடையே அதிக செல்வாக்குப் பெற்றவர் என்பதால் தயாளனே முன்னின்று நல்லசிவத்தை முதல்வராக்கினார். அதனாலேயே நல்லசிவம் இறுதிவரை தயாளனைப் பெரிதும் மதித்து வந்தார்.

நல்லசிவத்தின் மறைவுக்குப் பிறகு அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. தயாளன்தான் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது, ஒரு சட்டமன்ற உறுப்பினர் துரைராசனின் பெயரை முன்மொழிந்தார்.

கட்சியின் மூத்த உறுப்பினர்கள் துரைராசனைப் போட்டியிலிருந்து விலகும்படி கேட்டுக் கொண்டும் துரைராசன் விலக மறுத்ததால் வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பில் துரைராசன் வெற்றி பெற்று விட்டான்.

துரைராசன் முன்பே திட்டமிட்டுப் பல சட்டமன்ற உறுப்பினர்களிடம் தனித் தனியே பேசி தனக்கு ஆரவு திரட்டி இருக்கிறான் என்பது மூத்த தலைவர்களுக்கு அப்புறம்தான் புரிந்தது.

துரைராசன் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை தயாளன் இயல்பாக எடுத்துக் கொண்டு துரைராசனுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

தன் அமைச்சரவையில் ஒரு அமைச்சராக இருக்கச் சொல்லி ஒரு மரியாதைக்காகக் கூட துரைராசன் தயாளனைக் கேட்கவில்லை. 

தயாளன் ஒதுங்கி இருந்தார்.

சில மாதங்களில் கட்சியைத் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்ட துரைராசன் தயாளனைக் கட்சியிலிருந்து நீக்கி விட்டான்.

துரைராசனுக்கு நெருக்கமாக இருந்த ஒரு மூத்த தலைவர், "தம்பி! தயாளன் மக்கள்கிட்ட செல்வாக்குப் பெற்றவர். அவருக்குக் கிடைக்க வேண்டிய முதல்வர் பதவி அவருக்குக் கிடைக்கலைங்கறதாலே ஏற்கெனவே மக்களுக்கு அவர் மேல அனுதாபம் இருக்கு. ஆனா அவர் அமைதியா ஒதுங்கி இருக்காரு. இது அவர் வளர்த்த கட்சி. கட்சியை விட்டு அவரை நீக்கினா அவர் அதை எளிதா எடுத்துக்க மாட்டாரு. அவர் கோபம் என்ன விளைவுகளை ஏற்படுத்த முடியும்னு சொல்ல முடியாது. இது வேண்டாம்"  என்று துரைராசனை எச்சரித்தார்.

ஆனால் துரைராசன் அதைச் செவிமடுக்கவில்லை.

தயாளனுக்கு வயதாகி விட்டதால், கட்சியிலிருந்து தயாளன் நீக்கப்பட்டதும் அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெற்று விடுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் தயாளன் புதிதாக ஒரு கட்சியைத் துவங்கினார். மக்களிடையே அவருக்கு அனுதாபம் இருந்ததால் புதிதாகத் துவக்கப்பட்ட அவர் கட்சி மக்கள் ஆதரவு பெற்று வேகமாக வளர்ந்தது.

சில மாதங்கள் கழித்து நடந்த ஒரு இடைத் தேர்தலில் தயாளன் கட்சி பெரிய வெற்றி பெற்றதுடன், துரைராசனின் கட்சி மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு டெபாசிட் இழந்தது.

இதனால் ஆளும் கட்சிக்குள் ஒரு போராட்டம் வெடிக்க ஆரம்பித்தது. துரைராசன் பதவி விலக வேண்டும் என்று குரல்கள் எழுந்து வலுவடையத் தொடங்கின.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 90
பெரியாரைப் பிழையாமை

குறள் 900:
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.

பொருள்: 
வலிமையான துணைகளை உடையவராக இருப்பினும், தகுதியிற் சிறந்த சான்றோரின் சினத்தை எதிர்த்துத் தப்பிப் பிழைக்க முடியாது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...