Wednesday, March 15, 2023

677. குழுவில் ஒரு புதிய உறுப்பினர்

"இந்தியாவில இந்த புராஜக்டை நாமதான் முதல்ல செய்யப் போறோம்" என்றான் புராஜெக்ட் மானேஜர் அரவிந்த் பெருமையுடன்.

தொழிலதிபர் குமார் மௌனமாகச் சிரித்தார்.

"நம்ம குமார் சார்தான் தைரியமா இந்த புராஜெக்ட்டை ஆரம்பிச்சிருக்காரு. இவனை புராஜெக்ட் மானேஜராப் போட்டிருக்காரு. இவன் என்னவோ தான்தான் இந்த புராஜெக்டை நிறைவேத்தற மாதிரி பெருமைப்பட்டுக்கிட்டிருக்கான்!" என்று அக்கவுண்ட்ஸ் மானேஜர் சண்முகம் தன் அருகில் அமர்ந்திருந்த அட்மினிஸ்ட்ரேஷன் மானேஜர் சக்திவேலின் காதில் முணுமுணுத்தார்.

"அரவிந்த் சில புராஜெக்ட்களை வெற்றிகரமா நிறைவேற்றின அனுபவம் உள்ளவர்ங்கறதாலதானே குமார் சார் அவரை புராஜெக்ட் மானேஜராப் போட்டிருக்காரு? அவருக்கு அந்தப் பெருமிதம் இருக்கத்தான் செய்யும்!" என்றார் சக்திவேல்.

"சரி. இந்த மீட்டிங் முடியப் போகுது. இந்த புராஜெக்ட் இம்ப்ளிமென்டேஷன் குரூப்ல இப்ப எட்டு பேர் இருக்கோம். இந்தக் குழுவில இன்னொரு உறுப்பினரையும் சேர்த்திருக்கேன். அவரு நாளைக்கு வேலையில சேரறாரு. அவர் அரவிந்தோட இணைஞ்சு வேலை செய்வாரு. இனிமே நடக்கற புராஜெக்ட் குழு கூட்டங்களில் அவரும் கலந்துப்பாரு!" என்றார் குமார்.

குமாரின் இந்த அறிவிப்பு அனைவருக்குமே வியப்பாக இருந்தாலும், அரவிந்துக்கு அதிர்ச்சியாகவும் இருந்தது என்பதை அவனுடைய முகமாற்றத்திலிருந்து தெரிந்தது.

"புராஜெக்ட் வெற்றிகரமா முடிஞ்சு போச்சு. டிரையல் புரொடக்‌ஷன் சிறப்பா வந்திருக்கு. இனிமே கமர்ஷியல் புரொடக்‌ஷன் ஆரம்பிக்க வேண்டியதுதான்! இந்த புராஜெக்ட் செயல்பாட்டுக் குழுவில உறுப்பினர்களா இருந்து சிறப்பாப் பணி செஞ்ச உங்கள் எல்லோருக்கும் என்னோட பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!" என்றார் குமார்.

அனைவரும் மௌனமாகத் தலையசைத்துப் புன்னகைத்தனர்.

குமாரின் அறைக் கதவைத் தட்டி அனுமதி பெற்று அவர் அறைக்குள் நிழைந்தான் அரவிந்த்.

"வாங்க அரவிந்த்! புராஜெக்டை வெற்றிகரமா முடிச்சதுக்கு உங்களைத்தான் சிறப்பாப் பாராட்டணும். எல்லோரும் இருக்கறப்ப உங்களைத் தனியாப் பாராட்டினா நல்லா இருக்காதுங்கறதாலதான் மீட்டிங்கில உங்களைத் தனியாப் பாராட்டல" என்றார் குமார்.

"நன்றி சார்! ஆனா எனக்கு ஒரு வருத்தம் உண்டு!" என்றார் அரவிந்த்.

"அது எனக்குத் தெரியுமே! புராஜெக்ட் மானேஜரா உங்களைப் போட்டுட்டு, நீங்க இன்னொருத்தரோட சேர்ந்துதான் பணியாற்றணும்னு சொன்னா உங்களுக்கு வருத்தமா இருக்குங்கறதை என்னால புரிஞ்சுக்க முடியாதா?"

அப்புறம் ஏன் சார்..." என்று ஆரம்பித்த அரவிந்த், உடனே பேச்சை மாற்றி "சுந்தர் நிறைய விஷயம் தெரிஞ்சவராவும், அனுபவம் உள்ளவராகவும் இருந்ததால அவரோட இணைஞ்சு வேலை செஞ்சது ரொம்ப உற்சாகமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. இந்த புராஜெக்ட்ல அவரோட பங்களிப்பு ரொம்ப அதிகம். ஆனா எங்க ரெண்டு பேர்ல ஒத்தரை மட்டும் வச்சே நீங்க இந்த புராஜெக்டை முடிச்சிருக்கலாங்கறது என்னோட தனிப்பட்ட கருத்து. தப்பா இருந்தா மன்னிச்சுடுங்க" என்றான்.

"சுந்தரோட பங்களிப்பு அதிகமா இருந்ததா நீங்கதான் இப்ப சொன்னீங்க. இந்த புராஜெக்ட்ல உங்க ரெண்டு பேரோட பங்களிப்பும் இருந்திருக்கு இல்ல? ஒத்தரோட பங்களிப்பு மட்டும் இருந்திருந்தா இந்த புராஜெக்ட் இவ்வளவு சிறப்பா வந்திருக்கும்னு சொல்ல முடியுமா? " என்றார் குமார்.

"நீங்க சொல்றது உண்மையா இருக்கலாம் சார்! ஆனா சுந்தரோட பின்னணசி பற்றி நீங்க எங்க யார்கிட்டயும் எதுவுமே சொல்லல. அவரோட பின்னணி பற்றி அவர்கிட்ட யாரும் கேட்கக் கூடாதுன்னும் சொல்லிட்டீங்க. ஏன் சார் அப்படி? அவர் யாரு? அவருக்கு இந்த புராஜெக்டைப் பத்தி எப்படி இவ்வளவு விஷயம் தெரிஞ்சிருக்கு? இதையெல்லாம் நீங்க இப்பவாவது சொல்லாம் இல்லையா?" என்றான் அரவிந்த்.

"அரவிந்த்! இந்தியாவில இந்த புராஜெக்டை நாமதான் முதல்ல செய்யறோம்னு நீங்க அடிக்கடி சொல்லுவீங்க. உங்க பேச்சை நான் மறுத்ததில்ல. ஆனா அது உண்மையில்ல. நமக்கு முன்னால ஏற்கெனவே இந்த புராஜெக்டை செய்ய சில பேர் முயற்சி செஞ்சிருக்காங்க!"

"முயற்சி செஞ்சிருக்காங்க சார்! ஆனா யாரும் செஞ்சு முடிக்கலையே1 அதைத்தான் நான் சொன்னேன்" என்றான் அரவிந்த்.

"ஒரு முயற்சியை ஆரம்பிக்கும்போது எல்லோருமே அதை செஞ்சு முடிக்கப் போறோம்னு நினைச்சுத்தான் ஆரம்பிப்பாங்க. நாமும் அப்படித்தான் ஆரம்பிச்சோம். இதை செஞ்சு முடிச்சப்பறம்தானே நம்மால முடிச்சுட்டோம்னு சொல்லிக்க முடிஞ்சது? பல பேர் இந்த புராஜெக்டை முயற்சி செஞ்சிருந்தாலும், அஞ்சு வருஷம் முன்னால ஒத்தர் ரொம்பக் கடுமையா முயற்சி செஞ்சு கிட்டத்தட்ட செஞ்சு முடிக்கிற நிலைக்கு வந்துட்டாரு. ஆனா கடைசி நிமிஷத்தில ஏற்பட்ட சில எதிர்பாராத சிக்கல்களால அவரால அந்த புராஜெக்டை முடிக்க முடியல. அதானால அவரோட அனுபவத்தைப் பயன்படுத்திக்கலாம்னு நினைச்சேன்!"

"அப்படீன்னா...?"

"ஆமாம். நீங்க நினைக்கிறது சரிதான். சுந்தர்தான் அந்த நபர். நீங்க சில புராஜெக்ட்களை வெற்றிகராமா செஞ்சு முடிச்சதால ஒரு புராஜெக்டை செஞ்சு முடிக்கிற வழிமுறைகள் உங்களுக்குத் தெரியும். சுந்தர் இந்த புராஜெக்டையே செஞ்ச அனுபவம் உள்ளவர்ங்கறதால அவரோட அந்த அனுபவமும் இந்த புராஜெக்டுக்குத் தேவைங்கறதாலதான் அவரையும் நம் டீம்ல இணைஞ்சுக்கச் சொல்லிக் கேட்டுக்கிட்டேன்!" என்றார் குமார். 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 68
வினை செயல்வகை

குறள் 677:
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்.

பொருள்:
ஒரு செயலைச் செய்யத் தொடங்குபவன் அதைச் செய்யும் முறை, அச்செயலை இதற்கு முன்பு செய்திருப்பவனின் கருத்து இவற்றை அறிந்து கொள்ள வேண்டும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...