Wednesday, February 22, 2023

864. வெல்வது எளிது!

"டேய், ரகுபதி! பரஞ்சோதி இந்தத் தொழில்ல ஒரு சக்கரவர்த்தி மாதிரி கோலோச்சிக்கிட்டிருக்காரு. அவரை எதிர்த்து நம்மால போட்டி போட முடியுமா?" என்றான் கோவிந்தன்.

"ஒத்தரைப் போட்டி போட்டு ஜெயிக்கணும்னா அவரோட பலவீனம் என்னன்னு தெரிஞ்சுக்கணும். அதுக்குத்தான் அவரைப் பத்தின எல்லா விவரங்களையும் சேகரிச்சேன்."

"ஆமாம். நீ அலைஞ்சு திரிஞ்சு பலபேர்கிட்ட அவரைப் பத்தி விசாரிச்சே. ஆனா அவரைப் பத்தி எல்லாரும் நல்ல விதமாத்தானே சொல்றாங்க?"

"ஆமாம். வாடிக்கையாளர்கள்கிட்ட அவருக்கு நல்ல பேர் இருக்கு. பண விஷயங்கள்ள கரெக்டானவர்னு சொல்றாங்க. அவர் நிறுவனத்தில வேலை செய்யறவங்களுக்குக் கூட அவர் மேல பெரிசா குறை எதுவும் இருக்கற மாதிரி தெரியல!"

"அப்புறம்?"

"அவரு தனக்குப் போட்டியா யாரும் வர விடாம பாத்துக்கிட்டு இந்தத் தொழில்ல ஒரு தனிக்காட்டு ராஜாவா இருக்காரு. அவரோட வலுவான அடித்தளத்தை அசைச்சுப் பாக்கணும்னு நினைக்கறேன்!"

"நீ நினைச்சாப் போதுமா? நீயே சொல்ற, அவரு தனக்குப் போட்டியா யாரையும் வர விடலேன்னு! அப்படி இருக்கச்சே நம்மை மட்டும் அவர் விட்டு வைப்பாரா என்ன?"

"நான் எல்லாத்தையும் ஆழமாத் தோண்டிப் பாத்துட்டேன். அவருக்குப் போட்டியா வந்தவங்க எல்லாருமே ஏற்கெனவே வேற தொழில்ல ஈடுபட்டு இருந்தவங்கதான். இது நல்ல லாபகரமான தொழிலா இருக்கே, இதில பரஞ்சோதி ஒத்த ஆளா ஆட்டம் போட்டுக்கிட்டிருக்காரேன்னு நினைச்சு இதில இறங்கிப் பாத்திருக்காங்க. ஆனா பரஞ்சோதி அவங்க ஏற்கெனவே செஞ்சுக்கிட்டிருந்த தொழில்ல அவங்களுக்குச் சில பிரச்னைகளை ஏற்படுத்தி அவங்களைப் பின்வாங்க வச்சுட்டாரு. நாம அப்படி இல்ல. நாம வேற தொழில் செய்யல. இந்தத் தொழில்லதான் முழுமூச்சா இறங்கப் போறோம். அதனால பரஞ்சோதியால நமக்கு எந்தப் பிரச்னையும் கொடுக்க முடியாது!" என்றான் ரகுபதி உறுதியாக.

"இந்தத் தொழிலிலேயே நமக்கு அவர் பிரச்னை கொடுக்கலாம் இல்ல?" என்றான் கோவிந்தன்.

"கொடுப்பாரு! அதை நாம சமாளிப்போம். ஆனா அவருக்கு ரெண்டு முக்கியமான பலவீனங்கள் இருக்கு. இந்த பலவீனங்கள் உள்ள மனுஷங்களை நிச்சயமா வீழ்த்த முடியும்!"

"என்ன பலவீனங்கள்? அதான் அவரைப் பத்தி யாரும் தப்பா எதுவும் சொல்லலையே!"

"யாரும் தப்பா எதுவும் சொல்லலதான். ஆனா அவருக்கு நெருக்கமானவங்க மூலமா நான் தெரிஞ்சுக்கிட்ட ரெண்டு விஷயங்கள் அவருக்குப் பெரிய பலவீனமா இருக்குங்கறதில எனக்கு சந்தேகம் இல்லை!"

"அது என்ன ரெண்டு விஷயங்கள்?"

"ஒண்ணு, அவர் ஏதோ குடும்ப விஷயமா அவரோட அப்பாவோட சண்டை போட்டுக்கிட்டு அஞ்சாறு வருஷத்துக்கு மேல அவரோட பேசாம இருக்காரு!"

கோவிந்தன் பெரிதாகச் சிரித்தான். "என்னடா, சீரியசாத்தான் பேசறியா? அது எப்படி பலவீனமா இருக்கும்? அது நமக்கு எப்படி பயன்பட முடியும்?"

"ஒரு மனுஷன் கோபத்தை ரொம்ப நாளா மனசில வச்சுக்கிட்டிருக்கான்னா, அது அவனுக்கு எவ்வளவு பெரிய கெடுலா இருக்கும் தெரியுமா? பரஞ்சோதியோட அப்பா இவர்கிட்ட பேச முயற்சி செஞ்சிருக்காரு, அவர் குடும்பத்தினரும் அவரை சமாதானப்படுத்த முயற்சி செஞ்சிருக்காங்க. ஆனா இவரு பிடிவாதமா தன் கோபத்தைக் கைவிடாம இருக்காரு. இப்படிப்பட்ட பலவீனம் உள்ளவரோட கோபத்தைத் தூண்டி விட்டு அவருக்கு நெருக்கமா இருக்கறவங்களையே அவருக்கு எதிரியா ஆக்கிடலாம்!"

"என்னவோ சொல்ற! சரி. ரெண்டாவது விஷயம்?"

"அவருக்கு ரத்ததில சர்க்கரை கட்டுப்படுத்த முடியாத அளவில இருக்கு!"

"இதுக்கு மொதல்ல சொன்னதே பரவாயில்ல போலருக்கு! ரத்தத்தில சக்கரை இருந்தா? அதனால சீக்கிரமே செத்துடுவாரு, அப்புறம் நமக்குப் போட்டி இருக்காதுன்னு சொல்றியா?"

"சேச்சே! அவர் நீண்ட நாள் நல்லா வாழட்டும். அவரோட சக்கரை அளவை அவரால கட்டுப்படுத்த முடியாததுக்குக் காரணம் அவர் உணவுக் கட்டுப்பாடு இல்லாம இருக்கறதுதானாம். மனவிக்குத் தெரியாம ஓட்டல்களுக்குப் போய் நிறைய ஸ்வீட் சாப்பிடுவாராம்."

"அதனால?"

"புரியலையா? அவரால தன்னோட மனசைக் கட்டுப்படுத்த முடியல. கோபம் ஆறாம மனசில வச்சுக்கறது, தன் மனசைக் கட்டுப்படுத்த முடியாதது - இந்த ரெண்டு பலவீனங்கள் உள்ள ஒத்தரைப் போட்டியில ஜெயிக்கறது கஷ்டம் இல்ல!" என்றான் ரகுபதி.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 87
பகைமாட்சி

குறள் 864:
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.

பொருள்: 
ஒருவன் சினம் நீங்காதவனாய், மனத்தை அடக்கியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் (வீழ்த்துவதற்கு) எளியவன்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...