"சண்டை போட்டா, கோபம் இருக்கத்தான் செய்யும்!" என்றான் குமார்.
"அதுக்காக, எங்கிட்ட பேசாமயே இருந்துடுவீங்களா? எத்தனை நாளுக்கு இப்படி இருப்பீங்க? ஆயுள் பூராவா?" என்றாள் பூங்கோதை, கோபத்துடன்.
"நீ என் மனைவிங்கறதால, உங்கிட்ட சமாதானம் ஆகி, இப்ப பேசறேன். மத்தவங்கன்னா பேச மாட்டேன்!"
"இப்படி இருந்தீங்கன்னா, எல்லோரையும் விரோதிச்சுக்கிட்டு இருக்க வேண்டியதுதான். நமக்கு உதவி செய்ய யாரும் இருக்க மாட்டாங்க!"
"மத்தவங்க உதவி எனக்குத் தேவையில்லை!" என்றான் குமார், விறைப்புடன்.
"குமாருக்கு இப்ப ஏழரை நாட்டுச் சனி. அதான் எல்லோரோடயும் விரோதம், ஆஃபீஸ்ல, சொந்தக்காரங்ககிட்ட, அக்கம்பக்கத்திலன்னு எல்லார்கிட்டேயும் மனஸ்தாபம். பல பேரோட பேச்சு வார்த்தை கூட இல்ல!" என்றாள் குமாரின் தாய் கமலா.
'ஏன் அத்தை, உங்க பிள்ளை எல்லார்கிட்டேயும் சண்டை போட்டுக்கிட்டு அவங்களோட விரோதபாவத்தோட இருந்தா, அதுக்கு சனி என்ன செய்யும்?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட பூங்கோதை, கணவனை மாற்றுவது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
"ஏழெட்டு வருஷம் கஷ்டப்பட்டப்பறம், இப்பதான் குமாருக்கு நல்லது நடக்க ஆரம்பிச்சிருக்கு. ஆஃபீஸ்ல, புரொமோஷன் கிடைச்சிருக்கு. சொந்தக்காரங்க மனஸ்தாபத்தை மறந்துட்டு வந்து போறாங்க. அக்கம்பக்கத்தில கூட எல்லாரும் நட்பா இருக்காங்க!" என்றாள் கமலா.
"உங்க பிள்ளை இப்ப ரொம்ப மாறிட்டாரு, அத்தை. யாரோடயும் சண்டை போடறதில்ல. எப்பவாவது யார்கிட்டயாவது மனஸ்தாபம் வந்தாலும், அதை மனசில வச்சுக்காம, அவங்களோட இனிமையாப் பழகறாரு. ஆஃபீஸ்ல யாரோடயும் சண்டை போடாம அனுசரிச்சுப் போனதாலதான், மேலதிகாரிகள்கிட்ட நல்ல உறவு ஏற்பட்டு, தனக்குப் பதவி உயர்வு கிடைச்சதா அவரே சொல்றாரு!" என்றாள் பூங்கோதை.
"ஒரு மனுஷனுக்கு நேரம் நல்லா இல்லாதப்ப, அவனோட புத்தியும் சரியா இருக்காது. ஏழரை நாட்டுச் சனி ஆட்டி வச்சதாலதான், அவன் எல்லோரோடயும் சண்டை போட்டு விரோதத்தை வளர்த்துக்கிட்டான். இப்ப சனி விலகி நல்ல நேரம் வந்ததும், அவனோட சிந்தனையும் மாறிடுச்சு!" என்றாள் கமலா.
"அப்படின்னா, இவ்வளவு வருஷமா அவரோட போராடி, அவரைக் கொஞ்சம் கொஞ்சமா மாத்தின எனக்கு அவரோட முன்னேற்றத்தில எந்தப் பங்கும் இல்லையா?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் பூங்கோதை.
அன்று இரவு, மாமியார் கூறியதைக் கணவனிடம் கூறிய பூங்கோதை, "ஏழரை நாட்டுச் சனி இருந்தா, நல்லது எதுவும் நடக்காதா? நீங்க என்னைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டதே உங்களுக்கு ஏழரை நாட்டுச் சனி இருந்தப்பதானே!" என்றாள்.
"அப்படின்னா, என் வாழ்க்கையில வந்த ஏழரை நாட்டுச் சனி நீதான்!" என்றான் குமார், சிரித்தபடி.
பூங்கோதை அவனைக் கோபத்துடன் பார்த்தாள்.
"கோபிச்சுக்கக் கூடாதுன்னு எனக்கு அறிவுறுத்தி, என்னை மாத்தினவ நீதானே! இப்ப, நீயே கோபிச்சுக்கிட்டா எப்படி? நீ என்னோட இயல்பை மாத்தின, நன்மை செய்யும் சனி!" என்றான் குமார்.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 86
இகல்
குறள் 860:
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.
ஒருவனுக்கு இகலால் துன்பமானவை எல்லாம் உண்டாகும், அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியாகிய பெருமித நிலை உண்டாகும்.
No comments:
Post a Comment