Monday, February 6, 2023

859. நண்பன் சொன்ன காரணம்!

"புரொமோஷன் லிஸ்ட்ல என் பேரு இல்லை. அந்த மானேஜர் என் மேல பழி தீத்துக்கிட்டான்!" என்றான் நடேசன், தன் நண்பனும், சக ஊழியனுமான பிரேமிடம்.

பிரேம் பதில் சொல்லவில்லை.

"நான் சொல்றது சரிதானே?"

"சரிதான். ஆனா..." என்று ஆரம்பித்த பிரேம், "அதைப் பத்தி இப்ப பேச வேண்டாம். நீ முதல்ல மனசை சமாதானப்படுத்திக்க. கம்பெனிகள்ள இப்படியெல்லாம் நடக்கறது சகஜம்தான்!" என்றான்..

சில நாட்கள் கழித்து, நடேசன் பிரேமிடம், "எனக்கு புரொமோஷன் கிடைக்காததுக்கு மானேஜர்தான் காரணம்னு நான் அன்னிக்கு சொன்னப்ப, நீ ஏதோ சொல்ல வந்தியே?" என்றான்.

"ஒண்ணுமில்ல. நீ சொன்னதுதான். மேனேஜருக்கு உன் மேல விரோதம்னுதானே நீ சொல்ற?"

"ஆமாம். இல்லேன்னு சொல்லப் போறியா?"

"இல்லேன்னு சொல்லல. ஆனா நீ அவர் மேல விரோதம் பாராட்டறியா, இல்லையா?"என்றன் பிரேம்.

நடேசன் யோசித்தான்.

"நான் கவனிச்சதை சொல்றேன். ரெண்டு மாசம் முன்னால மானேஜர் ஆஃபீஸ்ல எல்லாருக்கும் வேலைப் பொறுப்புகளை மாத்திக் கொடுத்தப்ப, உனக்கு முக்கியமில்லாத பொறுப்புகளை கொடுத்துட்டார்னு நீ அவர்கிட்ட சொன்னே இல்ல?"

"ஆமாம். அவரு அப்படித்தானே செஞ்சாரு?"

"இருக்கலாம். ஆனா நீ அப்படிச் சொன்னதுக்கு அவர் என்ன பதில் சொன்னாரு?"

"ரொடேஷன்ல எல்லாருக்கும் பொறுப்புக்கள் மாறி மாறித்தான் வரும். சில சமயம் முக்கியம் இல்லாத பொறுப்புக்களும்தான் வரும்னு சொன்னாரு."

"அதை ஏத்துக்கிட்டு நீ அந்த விஷயத்தை அதோட விட்டிருக்கலாம். மறுபடி ஆறு மாசம் கழிச்சு அடுத்த ரொடேஷன்ல உனக்கு நல்ல பொறுப்புக்கள் கிடைச்சிருக்கும். ஆனா அதுக்கப்பறம் நீ அவர்கிட்ட விரோத பாவமாகவே நடந்துக்கிட்ட. சில வேலைகள்ள சரியா ஒத்துழைப்புத் தராம அவருக்குக் கோபம் வரும்படி நடந்துக்கிட்ட!" என்றான் பிரேம்.

"ஏன், என்னோட எதிர்ப்பைக் காட்டக் கூடாதா?" என்றான் நடேசன் கோபத்துடன்.

"காட்டலாம். ஆனா அப்படிக் காட்டினா அதுக்கான விளைவுகளை சந்திக்கத் தயாரா இருக்கணும். அப்புறம் ஏன் அவர் உன்னைப் பழி தீர்த்துக்கிட்டார்னு சொல்ற? அவரு அப்படித்தான் செய்வார்னு நீ எதிர்பார்த்திருக்கணும் இல்ல?"

நடேசன் மௌனமாக இருந்தான்.

"ஆனா, இதுக்குக் காரணம் நீ இல்ல, உன்னோட நேரம்தான்!"

"என்னடா சொல்ற?" என்றான் நடேசன். 

"அஞ்சாறு வருஷம் முன்னால நாம ரெண்டு பேரும் மதுரை பிராஞ்ச்ல வேலை செஞ்சப்ப நடந்த விஷயம் ஞாபகம் இருக்கா?" என்றான் பிரேம்.

"நீ எதைச் சொல்ற?"

"அந்த பிராஞ்ச் மானேஜர் காரணமே இல்லாம உன் மேல வெறுப்பைக் காட்டினாரு. உனக்கு எவ்வளவோ தொல்லை கொடுத்தாரு. ஆனா நீ ஒரு வார்த்தை கூடப் பேசாம எல்லாத்தையும் பொறுத்துக்கிட்ட. ஞாபகம் இருக்கா?"

நண்பன் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டவனாக நடேசன் தலையை ஆட்டினான்.

"நான் கூட உங்கிட்ட கேட்டேன், ஏண்டா இவ்வளவு பொறுமையா இருக்கே, ஒண்ணு ரெண்டு தடவையாவது உன் எதிர்ப்பைப் பதிவு செய்யலாம் இல்லே?'ன்னு. அதுக்கு நீ என்ன சொன்னே? நான் சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் கேட்டிருக்கேன். அது கிடைக்கும் போல இருக்கு. இந்த சமயத்தில இவரை விரோதிச்சுக்கிட்டா இவரு காரியத்தையே கெடுத்துடுவாரு'ன்னு!"

"ஆமாம். அதுக்கும் என் நேரத்துக்கும் என்ன சம்பந்தம்?"

"அப்ப உன் நேரம் நல்லா இருந்தது. அதனால அந்த மானேஜர் உனக்கு எவ்வளவோ தொந்தரவு கொடுத்தும் ஒரு எதிர்ப்பு கூடத் தெரிவிக்காம பொறுமையா இருந்தே. டிரான்ஸ்ஃபர் கிடைச்சு இங்கே வந்தே. ரெண்டு வருஷம் கழிச்சு நானும் வந்தேன். ஆனா இப்ப உன் நேரம் நல்லா இல்லாததாலதான் ஒரு முக்கியமில்லாத விஷயத்துக்காக மானேஜர் மேல விரோதத்தை வளர்த்துக்கிட்டு உனக்கு வர வேண்டிய புரொமோஷன் வராம போயிடுச்சு. அதனால இது உன் தப்பு இல்லேன்னு நினைச்சுக்க. சீக்கிரமே உனக்கு இன்னொரு நல்ல வாய்ப்பு வரும். கவலைப்படாதே!" என்றான் பிரேம்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 86
இகல்

குறள் 859:
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு.

பொருள்: 
ஒருவனுக்கு நன்மை வரும்போது காரணம் இருந்தாலும் மனவேறுபாடு கொள்ள மாட்டான். தனக்குத் தானே கேட்டை விளைவிக்க எண்ணுபவன், காரணம் இல்லாவிட்டாலும் மனவேறுபாடு கொள்ள எண்ணுவான்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...