Sunday, February 5, 2023

858. அழகேசனின் கோபம்

"ஏண்டா, பெரியப்பா வீட்டுக்குப் போக வேண்டாம்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்? ஏன் போனே?" என்றான் அழகேசன் கோபத்துடன்.

"இல்லை... அம்மாகிட்ட சொல்லிட்டுத்தான் போனேன்" என்றான் சங்கரன் சங்கடத்துடன்.

"ஏம்மா, அவரு நம்ம அப்பாவை அவமானப்படுத்தி இருக்காரு. அதனால அவரோட தொடர்பு வச்சுக்க வேண்டாம்னு நான் சொல்லிக்கிட்டிருக்கேன். நீ பாட்டுக்கு அவனை அவர் வீட்டுக்கு அனுப்பி இருக்க!" என்றான் அழகேசன் தன் தாய் மதுரத்திடம்.

"நான் அனுப்பலடா! பேரன் பிறந்த நாளைக்கு அவங்க நேரில வந்து கூப்பிட்டாங்க. நீ போக மாட்டேன்னுட்ட. அவன் போறேன்னான். நான் சரின்னேன். அவ்வளவுதான்!" என்றாள் மதுரம்.

"அதான் ஏன்னு கேக்கறேன்? நம்ம அப்பாவை அவமானப்படுத்தினவங்களோட நமக்கு என்ன உறவு வேண்டி இருக்கு?"

"டேய்! அது எப்பவோ நடந்தது. உங்க அப்பாவே அதைப் பெரிசா எடுத்துக்கல. 'ஏதோ கோபத்தில அப்படிப் பேசிட்டான். என் அண்ணன்தானே! பரவாயில்ல'ன்னு உங்க அப்பாவே எங்கிட்ட சொல்லி இருக்காரு. அந்த சம்பவம் நடந்து கொஞ்ச நாள்ள உங்க பெரியப்பா வேற ஊருக்குப் போயிட்டதால ரெண்டு பேருக்கும் அதிக தொடர்பு இல்ல. அந்தக் காலத்தில ஃபோன் எல்லாம் கிடையாது. உங்க அப்பா போயே அஞ்சு வருஷம் ஆச்சு. உங்க அப்பா காரியத்துக்கெல்லாம் உங்க பெரியப்பாவும், பெரியம்மாவும் வந்து இருந்துட்டுத்தான் போனாங்க. இப்ப அவங்க மறுபடி இந்த ஊருக்கு வந்துட்டாங்க. பேரன் பிறந்த நாளைக்கு நேரில வந்து கூப்பிட்டாங்க. நீதான் அவங்களைப் பாக்கக் கூட மாட்டேன்னு உள்ளேயே இருந்துட்ட. எதுக்கு அவங்களோட விரோதம் பாராட்டணும்?" என்றாள் மதுரம்.

"எப்படியோ போங்க! நான் சொன்னதைக் கேக்க மாட்டீங்க" என்றான் அழகேசன் கோபத்துடன்.

ருபது வருடங்கள் கடந்து விட்டன. அழகேசன், சங்கரன் இருவருக்குமே திருமணம் ஆகித் தனித் தனியே வசித்து வந்தனர். மதுரம் பெரும்பாலும் அழகேசன் வீட்டிலேயே வசித்து வந்தாள்.

"ஏம்மா! சங்கரன் நல்ல வசதியா இருக்கான். அவன் விடு பெரிசு. உனக்குத் தனி அறை, ஏசி எல்லாம் இருக்கும். அவனும் உன்னைக் கூப்பிட்டுக்கிட்டே இருக்கான். நீ என்னோட இந்தச் சின்ன வீட்டில இருந்துக்கிட்டு கொசுக்கடியில தூங்கிக்கிட்டு இருக்கே. நீ என்னோட இருக்கறது எனக்கு சந்தோஷம்தான். ஆனா நீ அங்கே இன்னும் வசதியா இருக்கலாமேன்னுதான் சொல்றேன்" என்றான் அழகேசன்.

"நீ சொல்றது எனக்குப் புரியுதுடா. நீ கஷ்டப்படறப்ப உன் கஷ்டத்தைப் பகிர்ந்துக்கணுமே தவிர, நான் மட்டும் வசதியா இருக்க எனக்கு எப்படி மனசு வரும்?" என்றாள் மதுரம்.

அழகேசன் மௌனமாக இருந்தான்.

"ஒரு விஷயம் சொல்றேன். யோசிச்சுப் பாரு. நீங்க ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் வளர்ந்தீங்க. உங்கப்பா உங்க ரெண்டு பேரையும்தான் படிக்க வச்சாரு. ரெண்டு பேரும் ஒரே சூழ்நிலை, ஒரே மாதிரி வசதிகளோட இருந்தும், சங்கரன் நல்லா முன்னுக்கு வந்துட்டான். ஆனா நீ கஷ்டப்பட்டுக்கிருக்கே. இது ஏன்னு யோசிச்சுப் பாத்தியா?" என்றள் மதுரம்.

"இதில யோசிக்கறதுக்கு என்ன இருக்கு? அதிர்ஷ்டங்கறது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்."

"இதுக்கு அதிர்ஷ்டம் மட்டும் காரணம் இல்லடா. உங்களோட இயல்பும்தான் காரணம். நீ எல்லோரோடயும் சண்டை போட்டுக்கிட்டு விரோத மனப்பான்மையோட நடந்துக்கற. அதனால உனக்கு மத்தவங்ககிட்டேந்து அதிகம் உதவி கிடைக்கல. யாருக்காவது உனக்கு உதவி செய்யக் கூடிய சந்தர்ப்பம் கிடைச்சாக் கூட, இவன்தான் நம்மகிட்ட விரோதமா இருக்கானே, இவனுக்கு ஏன் உதவி செய்யணும்னு நினைப்பாங்க. சங்கரன் விரோத மனப்பான்மை இல்லாம இருக்கான். எப்பவாவது மனஸ்தாபம் வந்தா அதை சீக்கிரமே மறந்துட்டு மனஸ்தாபம் ஏற்பட்டவங்களோட இயல்பாப் பழக ஆரம்பிச்சுடறான். அதனால அவனுக்கு நண்பர்கள், உதவி செய்யறவங்கன்னு நிறைய பேர் இருக்காங்க. அவன் முன்னுக்கு வந்ததுக்கு அதுவும் ஒரு காரணம்!"

மதுரம் தன் மகனின் முகத்தைப் பார்த்தாள். அவள் சொன்னதை அவன் ஏற்றுக் கொண்டானா என்பது அவளுக்குப் புரியவில்லை.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 86
இகல்

குறள் 858:
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகலூக்கின் ஊக்குமாம் கேடு.

பொருள்: 
மனத்தில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு நீக்கிக் கொண்டால் நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொண்டால் தீமையும் விளையும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...