Friday, February 24, 2023

674. விட்ட குறை, தொட்ட குறை!

குமரன் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களில் ஒருவரான சண்முகத்திடமிருந்து அந்தக் கோரிக்கை வந்தபோது அதைக் கண்டிப்பாக நிறைவேற்றுவதாக குமரன் இண்டஸ்டிரீஸின் உரிமையாளரான குமரன் கூறி இருந்தார்.

குமரன் இண்டஸ்டிரீஸ் ஒரு ரசாயனப் பொருளைத் தயாரித்து வந்தது. அது கமர்ஷயல் கிரேடு எனப்படும் வணிகத் தரத்தில் தயாரிக்கப்பட்டு வந்தது.

அந்த ரசாயனப் பொருளைப் பயன்படுத்தி வேறோரு ரசாயனப் பொருளைத் தயாரித்து வந்தார் சண்முகம்.

தான் இன்னொரு ரசாயனப் பொருளைத் தயாரிக்கப் போவதாகவும் அதற்கு குமரன் இண்டஸ்டிரீஸ் தற்போது தயாரித்து வரும் கமர்ஷியல் கிரேடை விட இன்னும் உயர்வான லேபரட்டரி கிரேட் என்னும் ஆய்வுக்கூடத் தரத்தில் அதே ரசாயனப் பொருளைத் தயாரித்து அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டிருந்தார்.

ஏற்கெனவே தங்களிடம் வாங்கும் வணிகத்தர ரசாயனப் பொருளைத் தவிர ஆய்வுக்கூடத் தரத்திலான புதிய தயாரிப்பையும் சண்முகம் கூடுதலாக வாங்குவார் என்பதால் அவருடைய கோரிக்கை குமரன் இண்டஸ்டிரீஸுக்கும் லாபகரமானதுதான். அத்துடன் இந்த ஆய்வுக்கூடத் தர ரசாயனப் பொருளை  தயாரிப்பை வேறு புதிய வாடிக்கையாளர்களுக்கும் விற்பனை செய்ய முடியும்.

ஆயினும் ஆய்வுக்கூடத் தரப் பொருளைத் தயாரிக்கக் கூடுதலாக சில தயாரிப்பு உபகரணங்கள் வாங்க வேண்டும் என்பதுடன் அரசாங்கத்திடம் அனுமதியும் பெற வேண்டும்.

தங்கள் வாடிக்கையாளரின் கோரிக்கையை ஏற்கும் விதத்திலும், தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் ஆய்வுக்கூடத் தரப் பொருளைத் தயாரிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதில் குமரன் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

தற்போது ஆய்வுக்கூடத் தரப் பொருளை வேறொரு நிறுவனத்திலிருந்து வாங்குவதாகவும், குமரன் இண்டஸ்டிரீஸ் தயாரிப்பைத் தொடங்கியவுடன் அவர்களிடம் வாங்கிக் கொள்வதாகவும் சண்முகம் கூறினார்.

சில காரணங்களால் அரசாங்கத்தின் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. குமரன் அரசின் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினால் அனுமதி கிடைக்கும் என்று குமரன் இண்டஸ்டிரீஸ் நிர்வாகி அவரிடம் கூறினார்.

குமரன் அரசின் உயர் அதிகாரி ஒருவரைச் சந்தித்துப் பேசினார். ஆனால் அவரிடமிருந்து உறுதியான பதில் எதுவும் வரவில்லை.

அரசின் மேல்நிலையில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று குமரன் புரிந்து கொண்டார். இன்னும் சில முறை சென்று இன்னும் சில அதிகாரிகளைப் பார்த்துப் பேசிச் சில விஷயங்களைச் செய்து முடித்தால் அனுமதி கிடைத்து விடும் என்று அவருக்குத் தோன்றியது. 

ஆனால் ஒருவிதத் தயக்கத்தினாலும், தள்ளிப் போடும் மனப்பான்மையாலும் குமரன் தொடர்ந்து முயற்சி செய்யவில்லை.

"என்ன சார் இப்படிச் சொல்றீங்க? எவ்வளவு வருஷமா நாங்க உங்களுக்கு சப்ளை பண்ணிக்கிட்டிருக்கோம். இனிமே எங்ககிட்ட வாங்க மாட்டேன்னு திடீர்னு சொல்றீங்களே!" என்றார் குமரன்.

"திடீர்னு சொல்லலியே! ஆறு மாசம் முன்னாலேயே சொன்னேன் எனக்கு லேபரட்டரி கிரேடு மெடீரியல் வேணும்னு. இப்போதைக்கு வேற ஒருத்தர்கிட்ட வாங்கிக்கிட்டிருக்கேன், நீங்க தயாரிக்க ஆரம்பச்சவுடனே உங்ககிட்ட வாங்கிக்கறேன்னும் சொன்னேன். ஆனா ஆறு மாசம் ஆகியும் நீங்க இன்னும் கவர்ன்மென்ட் அப்ரூவல் கூட வாங்கலியே!" என்றார் சண்முகம்.

"இல்லை சார்! முயற்சி செஞ்சுக்கிட்டுத்தான் இருக்கோம். அரசாங்கத்தில கொஞ்சம் டிலே பண்றாங்க!"

"இல்லை சார். நான் எனக்குத் தெரிஞ்ச அரசாங்க வட்டாத்தில விசாரிச்சேன். நீங்க அப்ரூவல் வாங்கறதில ஆர்வமே காட்டலேன்னு அவங்க சொல்றாங்க. நீங்க இந்த முயற்சியைக் கைவிட்டுட்டீங்கன்னுதான் எனக்குத் தோணுது."

"இல்லை சார்..."

"சாரி குமரன்! நான் பயன்படுத்தற ரெண்டு கிரேடு பொருட்களையும் ஒரே இடத்தில வாங்கறதுதான் எனக்கு நல்லது. இப்ப ஒருத்தர் ரெண்டு கிரேடையுமே தயாரிக்கறாரு. உங்ககிட்ட கெமிஸ்டா இருந்தவர்தானாமே, தாமோதரன்னு! அவர்கிட்டதான் வாங்கப் போறேன். சாரி. என் தொழிலுக்கு எது நல்லதுன்னு நான் பாக்கணும் இல்ல?" என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டார் சண்முகம்.

தாமோதரனா?

குமரனுக்கு உடலில் சூடு ஏறியது.

அவருடைய நிறுவனத்தில் கெமிஸ்டாகப் பணி செய்து கொண்டிருந்த தாமோதரன் அவர்கள் நிறுவனத் தயாரிப்பின் ஃபார்முலாவை வேறொரு நிறுவனத்துக்கு விற்க முயன்றபோது. அந்த நிறுவனமே அதைக் குமரனிடம் சொல்லி தாமோதரனைக் காட்டிக் கொடுத்தது. உடனே தாமோதரனை வேலையிலிருந்து நீக்கினார் குமரன்.

தாமோதரன் மீது காவல்துறையில் புகார் கொடுத்து அவனைச் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று அவர்கள் நிறுவனத்தின் நிர்வாகி உட்படப் பலர் கூறியபோது, வேலையை விட்டு நீக்குவதே அவனுக்குப் போதுமான தண்டனைதான் என்று விட்டு விட்டார் குமரன்.

தனக்கு துரோகம் செய்தவனை தண்டிக்காமல் விட்டது, தான் துவங்கிய செயலை முடிக்காமல் பாதியில் நிறுத்தியது இரண்டும் ஒன்று சேர்ந்து தன்னைத் தாக்கியிருப்பதை உணர்ந்தார் குமரன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 68
வினை செயல்வகை

குறள் 674:
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.

பொருள்:
செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவை இரண்டிலும் மிச்சம் இருந்தால் அவை தீயின் மிச்சம் போல வளர்ந்து அழிக்கும் (ஆதலால் எதையும் முழுமையாகச் செய்க).

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...