Monday, February 27, 2023

675. திருப்புமுனை!

 "உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போறேங்கறீங்க!" என்றாள் சுமதி.

"அரசியல் கட்சிகள் நாட்டுக்குத் தேவைதானே? இத்தனை வருஷமா தொழில் செஞ்சு நிறைய சம்பாதிச்சுட்டேன். இன்னும் சம்பாதிச்சுக்கிட்டிருக்கேன்  நாம நல்லா வாழ்ந்துக்கிட்டிருக்கோம். இப்ப நான் ஆஃபீசுக்குப் போகாமலே தொழில் நல்லா நடந்துக்கிட்டிருக்கு. சமூகத்துக்கு ஏதாவது செய்யணும்னு நினைக்கிறேன். அரசியல் கட்சி ஆரம்பிச்சு நல்ல கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்துச் செயல்படுத்தினா அது நாட்டுக்கு நல்லதுதானே?" என்றார் கௌரிசங்கர்.

"மேடையில பேசற மாதிரி பேசறீங்க! அரசியல்னாலே அது பதவிக்கும் பணத்துக்கும்தான்னு ஆயிடுச்சு. நீங்க போய் என்ன நல்லது செய்யப் போறீங்க?"

"நீ சொல்றது சரிதான்.அரரசியல்னா பதவி, பணம்னுதான் ஆயிடுச்சு. இதை மாத்தி நல்லது செய்யத்தான்  நான் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போறேன்!"

"என்னவோ செய்யுங்க. உங்களுக்குத் தெரியாததா?" என்றாள் சுமதி.

"என்னங்க, அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போறதாச் சொன்னீங்க! அஞ்சாறு மாசமா நிறைய பேரைக் கூப்பிட்டுப் பேசிக்கிட்டிருக்கீங்க. நிறைய பணம் செலவழிக்கறீங்க. எதுக்குன்னே தெரியல! இப்ப திடீர்னு டிவி சேனல் ஆரம்பிக்கப் போறேன்னு சொல்றீங்க. உங்க திட்டத்தை மாத்திக்கிட்டீங்களா?" என்றாள் சுமதி.

கௌரிசங்கர் பதில் சொல்லாமல் சிரித்தார்.

"நல்ல வேளை! முடிவை மாத்திக்கிட்டீங்களே! டிவி சேனல் நடத்தறது நல்ல தொழிலா இருக்கும். உங்களுக்குத்தான் தொழில் நடத்தற அனுபவம் இருக்கே! நல்ல விஷயம்தான்!" என்றாள் சுமதி..

கௌரிசங்கர் மௌனமாக இருந்தார்.

"வேதாளம் மறுபடி முருங்கை மரத்தில ஏறின மாதிரி மறுபடி ஆரசியல் கட்சி ஆரம்பிக்கற யோசனைக்குப் போயிட்டாங்களா?" என்றாள் சுமதி. 

"அரசியல் கட்சி ஆரம்பிக்கற யோசனையை நான் எப்ப கைவிட்டேன்?" என்றார் கௌரிசங்கள்.

"பின்னே ஏழெட்டு மாசமா வேற ஏதோ செஞ்சுக்கிட்டிருந்தீங்களே! டிவி சேனல் ஆரம்பிக்க அனுமதிக்கு விண்ணப்பிச்சிருக்கீங்க!"

"அனுமதி கிடைச்சாச்சு. மே மாசம் ஒண்ணாம் தேதி அன்னிக்கு டிவி சேனல் ஆரம்பிக்கப் போறேன். அன்னிக்கே அரசியல் கட்சியோட துவக்க விழாவையும் திருச்சியில நடத்தப் போறேன். அது நம்ம டிவி சேனல்ல லைவா ஒளிபரப்பாகும். அதனால என்னோட புதுக் கட்சிக்கும் பப்ளிசிடி கிடைக்கும், டிவி சேனலுக்கும் பப்ளிசிடி கிடைக்கும்!" என்றார் கௌரிசங்கர் உற்சாகமாக.

"எனக்கு நீங்க செய்யறது எதுவுமே புரியல!"

"சுமதி! ஒரு வேலையை செய்யறதுக்கு முன்னால அதைச் சிறப்பா செய்யறதுக்காக நிறைய முன்னேற்பாடுகளைச் செய்யணும். முதல்ல பணம் வேணும். இந்த எட்டு மாசத்தில என் தொழில்கள்ள வர லாபத்திலேந்து கொஞ்சம் கொஞ்சமா எடுத்து ஒரு பெரிய தொகையைச் சேர்த்து வச்சிருக்ககேன்.

"ரெண்டாவது, இது தவல் தொழில்நுட்ப யுகம். அதனால நம் கட்சிக்கு ஒரு டிவி சேனல் இருந்தா நல்லது. நம்ம கட்சி பத்தின விஷயங்களைப் போடலாம். மத்தவங்க செய்யற விமரிசனங்களுக்கு பதில் கொடுக்கலாம். 

"அதோட இப்பல்லாம் யூடியூப் சேனல்களும் முக்கியம். அதனாலதான் ஊடகத் துறையில இருக்கற சில திறமைசாலிகளை வச்சு சில யூடியுப் சேனல்களை ஆரம்பிச்சிருக்கேன். அந்த சேனல்கள் மூலமாகவும் நம்ம கட்சியை வளர்க்கலாம்.

"மூணாவதா, மே தினத்தன்னிக்கு கட்சியை ஆரம்பிச்சா, உடனே அரசியல் தலைவர்கள் பல பேர் 'இவன் ஒரு முதலாளி, இவனுக்கும் தொழிலாளர் தினத்துக்கும் என்ன சம்பந்தம்?'னு  பேசுவாங்க. அப்ப என்னோட தொழிற்சாலைகள்ள வேலை செய்யற தொழிலாளர்களுக்கு எவ்வளவு நன்மைகள் செஞ்சிருக்கேன்னு விவரமா எடுத்துச் சொல்லி, நமக்கு எதிராகச் சொல்லப்பட்ட விஷயத்தையே நமக்கு ஆதரவான விஷயமா மாத்தி நம்ம கட்சியைப் பத்தி ஒரு நல்ல இமேஜை உருவாக்க முடியும்! அதனாலதான் தொழிலாளர் தினத்தன்னிக்குக் கட்சியை ஆரம்பிக்கறேன்"

"அது சரி. கட்சித் துவக்க விழாவை ஏன் திருச்சியில நடத்தறீங்க? உங்க சொந்த ஊர் மதுரையாச்சே! அங்கே நடத்தலாம் இல்ல?"

"நடத்தலாம். ஆனா திருச்சிக்கு ஒரு சிறப்பு இருக்கு. பல கட்சிகளோட பல முக்கியமான மாநாடுகள் திருச்சியில நடந்திருக்கு. 'திருச்சி ஒரு திருப்பு முனை' ன்னு பல தலைவர்கள் இதுக்கு முன்னால சொல்லி இருக்காங்க. அந்த சென்டிமென்ட்டைப் பயன்படுத்தி, திருச்சியில் இந்தப் புதிய கட்சி துவக்கப்படறது தமிழ்நாட்டு அரசியலில் ஒரு திருப்பு முனைன்னு சொல்லி ஒரு வலுவான பிரசாரத்தை உருவாக்கலாமே! அதுக்குத்தான்!" என்றார் கௌரிசங்கர்.

"புதுசா ஒரு தொழிலை ஆரம்பிகறதுக்கு முன்னால எப்படி திட்டமிடுவீங்கன்னு நான் பாத்திருக்கேன். அரசியல் கட்சியை ஆரம்பிக்கவும் அதே மாதிரி திட்டமிட்டிருக்கீங்க!" என்றாள் சுமதி கணவனைப் பெருமையுடன் பார்த்து.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 68
வினை செயல்வகை

குறள் 675:
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.

பொருள்:
ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...