"முக்கியமான துறைகளான நிதி, மருத்துவம், விவசாயம் மற்றும் உணவு உற்பத்தி, பாதுகாப்பு, வெளியுறவு ஆகிய ஐந்து துறைகளுக்கு நீங்கள் ஏன் அமைச்சர்களை நியமிக்கவில்லை?" என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, "விரைவிலேயே நியமித்து விடுவேன்!" என்றார் தர்மபிரகாஷ், சிரித்துக் கொண்டே.
அடுத்த சில நாட்களுக்கு, தர்மபிரகாஷை அவர் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்களும், வேறு சிலரும் சந்தித்துப் பேசினர். அவர்கள் அனைவருமே தர்மபிரகாஷால் அழைக்கப்பட்டவர்கள் என்று கூறப்பட்டது. அமைச்சர் பதவியை எதிர்பார்த்திருந்த கட்சித் தலைவர்கள் பலருக்கு அழைப்புக் கிடைக்கவில்லை.
ஒரு வாரம் கழித்து, அந்த ஐந்து துறைகளுக்குமான அமைச்சர்களின் பெயர்களை அறிவித்தார் தர்மபிரகாஷ். ஐந்து பேரில் இரண்டு பேர் கட்சிக்காரர்கள், மற்ற மூன்று பேரும் குறிப்பிட்ட துறைகளில் நிபுணர்கள்.
அமைச்சரவைக் கூட்டம் அதிபர் தர்மபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
அமைச்சர்களை வாழ்த்தி வரவேற்ற பின், தர்மபிரகாஷ் கூறினார்:
"நாம் தேர்தல் அறிக்கையில் பல வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கோம். அதையெல்லாம் நிறைவேற்ற வேண்டியது முக்கியம்தான். ஆனா, அதைவிட முக்கியமா, நாம் செய்ய வேண்டிய மூணு விஷயங்கள் இருக்கு. இந்த மூணு விஷயத்தையும் நாம் குறிப்பா நம் தேர்தல் வக்குறுதிகளாக் கொடுக்கல. ஆனா இவற்றை நிறைவேற்றினாலே, மற்ற வாக்குறுதிகளை நிறைவேற்றின மாதிரிதான். ஏன்னா, இந்த மூணும் நாட்டு மக்களுக்குத் தேவையான அடிப்படையான விஷயங்கள்!"
தர்மபிரகாஷ் பேச்சை நிறுத்தி விட்டு, அனைவரையும் பார்த்தார். பிறகு தொடர்ந்து பேசினார்.
"எல்லாருக்கும் அடிப்படையான ரெண்டு விஷயங்கள் உணவு, உடல்நலம். பட்டினி, நோய் இந்த இரண்டு கேடுகளும் நாட்டில இல்லாம செய்யறதுதான் எந்த ஒரு அரசாங்கத்துக்கும் முதல் குறிக்கோளா இருக்கணும். ஆனா, இதைச் செய்யறது சுலபம் இல்லை. ஆழமா சிந்திச்சு முறையாத் திட்டம் போட்டுச் செயல்பட்டாத்தான், ஓரளவுக்காவது இதை நிறைவேற்ற முடியும்.
"நம் பதவிக்காலமான நாலு வருஷத்துக்குள்ள எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு இந்தப் பணியை செஞ்சு முடிக்கணும். அதனாலதான், உணவு உற்பத்தி, மருத்துவம் இவற்றில் நிறைய அறிவும் அனுபவமும் உள்ள நிபுணர்கள் சில பேரை அழைச்சு, அவங்ககிட்ட என் எதிர்பார்ப்புகளைப் பற்றிச் சொல்லி, அவற்றை அவங்க எப்படி நிறைவேற்றுவாங்கன்னு அவங்ககிட்ட கேட்டு, அவங்க சொன்ன பதிலை வைச்சு, அவங்களுக்குள்ள சிறந்தவங்கன்னு நான் கருதின நபர்களை விவசாயம் மற்றும் உணவு, மருத்துவம் ஆகிய துறைகளுக்கு அமைச்சர்களா நியமிச்சேன். எல்லாத்துக்கும் நிதிதானே அடிப்படை? அதனாலதான், நிதி அமைச்சரா ஒரு பொருளாதார நிபுணரை நியமிச்சிருக்கேன்!"
"மூணு விஷயம்னு சொன்னீங்களே! பசி, நோய் இரண்டும் இல்லாத நிலையை உருவாக்கணும்னு சொன்னீங்க. அந்த மூணாவது விஷயம் என்ன?" என்றார் ஒரு மூத்த அமைச்சர்.
"நம் மக்களைப் பாதுகாப்பா இருக்க வைக்கறதுதான். நம் எதிரி நாடுகள்கிட்டேந்து நமக்கு அச்சுறுத்தல் இல்லாம பாத்துக்கணும். அதுக்கு உலக நாடுகள் எல்லாவற்றோடும் நாம நட்பா இருக்கற சூழ்நிலையை உருவாக்கணும். கூடியவரையிலும் எல்லா நாடுகளோடயும் நட்பா இருந்து, நம் அண்டை நாடுகள்கிட்ட ஏதாவது பிரச்னைகள் ஏற்பட்டா கூட, அவற்றைப் பேசித் தீர்க்க வகை செய்யணும். அதையும் மீறிப் போர் ஏற்படற சூழ்நிலை ஏற்பட்டா, பல நாடுகள் நமக்கு ஆதரவா இருக்கற நிலையை உருவாக்கணும். அதுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் திறமையானவரா, சிறப்பா செயல்படறவரா இருக்ணும். அப்படிப் போர் வந்தா, நமக்கு எதிராப் போர் தொடுக்கற நாட்டை முறியடிக்கத் தேவையான படை வலிமையும், ஆயுத வலிமையும் நமக்கு இருக்கணும். அதற்கு நமக்கு ஒரு திறமையுள்ள பாதுகாப்பு அமைச்சர் இருக்கணும்!"
ஒரு நிமிடம் மௌனமாக அனைவரையும் பர்த்த தர்மபிரகாஷ், "இந்த மூணு விஷயங்களுக்காக சிறப்பான கவனம் செலுத்த ஐந்து அமைச்சர்கள் இருந்தாலும் இந்த மூணு விஷயங்களையும் நிறைவேற்றுவதில் நம் எல்லாருக்குமே பொறுப்பு உண்டு. அதனாலதான், இதைப் பற்றி உங்க எல்லார்கிட்டயும் விளக்கமாச் சொன்னேன்!" என்றார்.
பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 74
நாடு
குறள் 734:
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.
No comments:
Post a Comment