Sunday, December 25, 2022

663. சொல்லாதது ஏன்?

"ஏண்டா, எத்தனை நாளைக்குத்தான் இந்த வேலையிலேயே இருந்துக்கிட்டிருப்ப? வேற நல்ல வேலைக்கு முயற்சி பண்ண மாட்டியா?"

நந்தகுமாரைப் பார்த்து அவன் நண்பர்கள் பலரும் அடிக்கடி கேட்கும் கேள்வி இது.

நந்தகுமாரின் அம்மாவும்தான்!

"ஏண்டா! பள்ளிக்கூடத்திலேயும், கல்லூரியிலும் நீ நல்லாப் படிக்கறவன்னு பேர் வாங்கினவன். 'எங்க வகுப்பிலேயே எல்லாரையும் விட நந்தகுமார்தான் புத்திசாலி'ன்னு உன் நண்பர்கள் சொல்றப்ப எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கும்.. இப்ப அவங்கள்ளாம் நல்ல வேலையில இருக்காங்க. நீ ஒரு சின்ன கம்பெனியில குறைஞ்ச சம்பளத்துக்கு வேலை பாத்துக்கிட்டிருக்கே. வேற வேலைக்கு முயற்சி செய்ய மாட்டேங்கற! எனக்கு ரொம்ப ஏமாற்றமா இருக்குடா!" என்று அடிக்கடி அலுத்துக் கொள்வாள் அவன் தாய் திரிபுரசுந்தரி.

""முயற்சி பண்ணிக்கிட்டுத்தாம்மா இருக்கேன்!" என்பான் நந்தகுமார்.

"எனக்கு அப்படித் தெரியலையே! நீ ஒரு இன்டர்வியூவுக்குப் போய்க்கூட நான் பாத்ததில்ல."

"இப்பல்லாம் ஆன்லைன் இன்டர்வியூதாம்மா! நேரில போக வேண்டியதில்லை."

"இன்டர்வியூவில எல்லாம் கலந்துக்கறேன்னா ஏன் உனக்கு இன்னும் நல்ல வேலை கிடைக்கல?"

"கிடைக்கும்மா! கொஞ்ச நாள் பொறுமையா இரு!"

"என்னை ஆசீர்வாதம் பண்ணும்மா! நான் சொந்தத் தொழில் ஆரம்பிக்கப் போறேன்!" என்றபடி தன் தாயில் காலில் விழுந்து வணங்கினான் நந்தகுமார்.

"என்னடா இது, திடீர்னு! என்ன தொழில்? எப்படி ஆரம்பிக்கப் போற? பணம் ஏது உங்கிட்ட?" என்று கேள்விகளை அடுக்கினாள் திரிபுரசுந்தரி.

"அம்மா! கல்லூரியில படிக்கறப்பவே புதுசா ஒரு பொருளைத் தயாரிக்க எனக்கு ஒரு யோசனை வந்தது. படிப்பு முடிஞ்சப்பறம் சில பெரிய தொழிலதிபர்கள்கிட்ட அதைப் பத்திப் பேசினேன். ஆனா அவங்க யாருமே அதில ஆர்வம் காட்டல. 

"அப்புறம் வேலை தேடறப்ப இப்ப நான வேலை பாக்கற கம்பெனிக்கு இன்டர்வியூவுக்குப் போனப்ப அவர்கிட்ட என் ஐடியாவைப் பத்தி சொன்னேன். அவருக்கு அது ரொம்பப் பிடிச்சுப் போச்சு. நான் தொழில் ஆரம்பிக்க அவரே உதவி செய்யறதா சொன்னாரு. 

"அவர் முதல் போடுவாரு. மானேஜிங் டைரக்டரா இருந்து கம்பெனி நிர்வாகத்தை நான் பாத்துக்கணும், எனக்கு சம்பளம் உண்டு. அதைத் தவிர .லாபத்தில முப்பது சதவீதம் பங்கும் உண்டு. 

ஆனா அந்தப் பொருளை சின்ன அளவில தயாரிச்சு அது எப்படி வருதுன்னு பாக்கணும். அதை மாரர்க்கெட்ல கொடுத்து அதைப் பயன்படுத்தப் போறவங்க என்ன நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்கணும். அதுக்கப்பறம்தான் அந்தப் பொருறைத் தயாரிக்க ஆரம்பிக்கணும். அதுக்கு ஒண்ணு ரெண்டு வருஷம் ஆகும். 

"அதனால ஆரம்பத்தில அவர் நிறுவனத்தில நான் சம்பளத்துக்கு வேலை பாத்துக்கிட்டு இந்தப் பொருளை சின்ன அளவில தயாரிக்கற வேலையில ஈடுபடணும்னு சொன்னாரு. ஒருவேளை அது சரியா வராட்டா நான் வேற வேலை பாத்துக்கலாம். அதன்படிதான் ஒரு வருஷத்துக்கு மேல அங்கே வேலை செஞ்சுக்கிட்டு அந்தப் பொருளை சின்ன அளவில தயாரிக்கற  அமைப்பை உருவாக்கறதிலேயும் ஈடுபட்டிருந்தேன்.

"பொருளை மார்க்கெட்ல கொடுத்து டெஸ்ட் பண்ணினோம். மார்க்கெட்ல அதுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. அதனால இப்ப புதுசா ஒரு கம்பெனி ஆரம்பிச்சு அந்தப் பொருளைத் தயாரிக்கப் போறோம். இனிமே உன் பிள்ளை மானேஜிஙு டைரக்டர்!"

நந்தகுமார் சொல்லி முடித்ததும் "என்னடா திடீர்னு இப்படிச் சொல்ற? என்னால நம்பவே முடியல. சந்தோஷத்தில திக்குமுக்காட வச்சுட்டியே!" என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறிய திரிபுரசுந்தரி, "ஏண்டா! இதைப் பத்தி எங்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல? ஏதோ சின்ன கம்பெனியில குறைஞ்ச சம்பளத்துக்கு வேலை செய்யறதா சொல்லி என்னை ஏமாத்திக்கிட்டு வந்திருக்கியே!" என்றாள் சற்றுக் கோபத்துடன்.

"மன்னிச்சுக்கம்மா. உங்கிட்ட மட்டும் இல்ல, என்னை ஏன் வேற வேலைக்குப் போகலேன்னு என் நண்பர்கள் துருவித் துருவிக் கேட்டப்பக் கூட அவங்ககிட்ட உண்மையைச் சொல்லாம  கஷ்டப்பட்டு என்னைக் கட்டுப்படுத்திக்கிட்டேன்.  இதை செஞ்சு முடிக்கிற வரைக்கும் இதைப் பத்திப் பேசக் கூடாதுன்னு உறுதியா இருந்தேன். ஒருவேளை இதை வெளியில சொன்னா, 'இதெல்லாம் வேண்டாம், நல்லதாஒரு  வேலையைப் பாத்துக்கிட்டு வாழ்க்கையில செட்டில் ஆற வழியைப்பாரு'ன்னு நீயோ வேற யாராவது சொல்லிடுவீங்களோன்னு பயம். அதனாலதான் ரொம்ப கஷ்டப்பட்டு என்னைக் கட்டுப்படுத்திக்கிட்டிருந்தேன். அப்படி இருந்ததாலதானே இதைச் செஞ்சு முடிச்சு உன்னை சந்தோஷப்படுத்த முடிஞ்சுது!" என்றான் நந்தகுமார்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 67
வினைத்திட்பம்

குறள் 663:
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்.

பொருள்:
செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப் பற்றி வெளிப்படுத்தாமல் இருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும். இடையில் வெளியே தெரிந்து விட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக் கூடும்.

குறள் 664 (விரைவில்)

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...