Tuesday, October 25, 2022

826. நல்ல வாய்ப்பு?

"திருச்சியில நமக்கு ஒரு சப்சிடியரி கம்பெனி இருக்கு இல்ல? அதுக்கு ஜெனரல் மானேஜராப் போறீங்களான்னு ஜி. எம். எங்கிட்ட கேட்டாரு" என்றான் முரளி, தன் நண்பனும் சக ஊழியனுமான தனபாலிடம்.

"கருணாகரனா அப்படிச் சொன்னாரு? ஆச்சரியமா இருக்கே! டெபுடி ஜெனரால் மானேஜரா இருக்கற மூணு பேர்ல நீதான் சீனியர். உனக்கு இந்த வாய்ப்பு கொடுத்தது சரிதான். ஆனா நீ அவருக்கு அவ்வளவு நெருக்கமானவர் இல்லேன்னு நினைச்சேன்!" என்றான் தனபால்.

"ஆமாம். அவர் எங்கிட்ட தனிப்பட்ட முறையில நெருக்கமா இருந்ததில்லதான். டி ஜி எம்கள்ள முத்துவும், மனோகரும்தான் அவருக்கு நெருக்கமானவங்கன்னு நம்ம ஆஃபீஸ்ல எல்லாருக்குமே தெரியும். ஆனா இன்னிக்கு என்னோட வேலையைப் பத்தி ரொம்பப் புகழ்ந்து பேசினாரு. அவர் சொன்னதைப் பார்த்தா அவருக்கு எப்பவுமே என் பேர்ல ஒரு நல்ல அபிப்பிராயம் இருக்கறதாத் தெரிஞ்சுது. ஆனா அதை வெளிக்காட்டிக்கல. அவ்வளவுதான்!"

"நல்ல விஷயம்தான். சப்சிடியரிக்கு நீ ஜி எம்னாலும் இந்த ஜி எம் கிட்டதான் நீ ரிப்போர்ட் பண்ணணும். அது ஒரு சின்ன கம்பெனிதான். பத்து பேர்தான் வேலை பாக்கறாங்க. ஆனாலும் எலி வளைன்னாலும் தனி வளைங்கற மாதிரி, அங்கே நீதான் ராஜா! எப்படியும் இவரு இன்னும் பத்து வருஷத்துக்கப்பறம்தான் ரிடயர் ஆவாரு. அதுக்கப்பறம்தான் நீ ஜி எம் ஆக முடியும். ஆனா இப்பவே ஜி எம் ஆக உனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. போயிட்டு வா."

"இப்படி ஒரு திட்டம் வச்சிருப்பார்னு நான் எதிர்பார்க்கலடா!" என்றான் முரளி தனபாலிடம் தொலைபேசியில்.

"ஆமாம். சி  ஈ ஓ ஏதோ பிரச்னையில மாட்டி இருக்காரு, அதனால அவர் பதவி விலக வேண்டி இருக்கும், அந்த இடத்துக்கு அநேகமா தான்தான் வருவோம்னு கருணாகரனுக்குத் தெரிஞ்சிருக்கு. அப்படி அவர் சி ஈ ஓ ஆனதும், நீதான் அவர் இடத்துக்கு வந்திருப்ப. அதைத் தடுத்து அவரோட ஆளு முத்துவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கணுங்கறதுக்காக உனக்கு நல்லது செய்யற மாதிரி உன்னை சப்சிடியரி கம்பெனிக்கு பேக் பண்ணி அனுப்பிட்டாரு. இப்ப நீ இங்கே இல்லாததால சீனியாரிடியில உனக்கு அடுத்தபடியா இருக்கற முத்துவுக்கு அந்த வாய்ப்பை வாங்கிக் கொடுத்துட்டாரு. சீனியாரிடிப்படிஉனக்குத்தான் கொடுக்கணும்னு சேர்மன் சொன்னப்ப, அவரு இப்பதான் போயிருக்காரு, சப்சிடியரியை நல்லா பாத்துக்கறாரு அவரை இப்ப டிஸ்டர்ப் பண்ணினா சப்சிடியரியோட செயல்பாடு பாதிக்கப்படும்னு சொல்லி சேர்மனை இவரு சமாதானப்படுத்திட்டாருன்னு பேசிக்கறாங்க!" என்றான் தனபால்.

"அடப்பாவி! எனக்கு நல்லது செய்யற மாதிரி நடிச்சு, எனக்கு வர வேண்டிய நல்ல வாய்ப்பைக் கெடுத்துட்டாரே! எவ்வளவு மோசமானவரு இந்த ஆளு!" என்றான் முரளி ஆற்றாமையுடன்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 83
கூடா நட்பு

குறள் 826:
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.

பொருள்: 
நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்னபோதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...