"புராணக் கதைகள் சொல்வதில் வல்லமை பெற்ற பல சொற்பொழிவாளர்கள் இருக்கிறார்கள். எல்லோருமே அறிஞர்கள். பல நூல்களைப் படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள். ஆயினும். பாண்டுரங்கன் அவர்கள் தனக்கென்று ஒரு தனிப்பாணியை உருவாக்கித் தன் பணியைச் சிறப்பாகச் செய்து வருகிறார்."
"ஒருபுறம், பாண்டுரங்கன் அவர்களின் சொற்பொழிவை அறிஞர்களும், புலவர்களும் பாராட்டுகிறார்கள். அவருடைய கல்வியறிவு, சொல்வளம் ஆகியவற்றை வியக்கிறார்கள். மறுபுறம், சாதாரண மக்களும் அவர் பேச்சினால் ஈர்க்கப்படுகிறார்கள். இது மிகவும் அரிதான ஒரு விஷயம்."
"சௌத பௌராணிகர் என்பவர் புராணக் கதைகள் சொல்வதில் விற்பன்னர் என்றும் அவர் கூறும் கதைகளைக் கேட்பதில் பலரும் ஆர்வமாக இருப்பார்கள் என்றும் புராணங்களில் எழுதப்பட்டிருக்கின்றன. அந்த சௌத பௌராணிகருக்கு நிகரானவர் பண்டுரங்கன்."
இவையெல்லாம் பாண்டுரங்கனைப் புகழ்ந்து, விழா மேடையில் பலரும் பேசியவை.
இறுதியாக, பாண்டுரங்கன் பாராட்டுகளுக்கு நன்றி தெரிவித்துப் பேசினார்.
"எந்த ஒரு பாடம் குறித்தும் நூல்களைக் கற்று அந்தப் பாடத்தில் புலமை பெறுவது பலருக்கும் கைவரக் கூடியதுதான். கடினமாக உழைக்கும் எவராலும் அதைச் செய்ய முடியும். ஆனால், ஒருவர் தான் கற்றவற்றை, கேட்பவர்கள் விரும்பும்படி கூறுவது என்பது ஒரு தனிக்கலை. இந்தக் கலையை எல்லோரும் அறிந்திருக்க மாட்டார்கள்."
தன்னைப் புகழ்து கொள்வது போல் பாண்டுரங்கன் பேசியது அனைவருக்கும் சற்று வியப்பாக இருந்தது. 'என்ன இவர் கொஞ்சம் கூட அடக்கம் இல்லாமல், தன்னைப் புகழ்ந்து கொள்கிறாரே!' என்று சிலர் நினைத்தனர்.
"ஆரம்பத்தில், அந்தக் கலையை நான் அறிந்திருக்கவில்லை!"
இப்போது அனைவரும் பாண்டுரங்கன் அடக்கம் இல்லாமல் பேசவில்லை என்பதை உணர்ந்து, அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க ஆவலுடன் இருந்தனர்.
"நான் பேசத் தொடங்கிய காலத்தில், என் பேச்சு பலரை ஈர்க்கவில்லை. ஒரு சிலர் மட்டுமே என் பேச்சில் இருந்த ஆழமான விஷயங்களைப் புரிந்து கொண்டு என்னைப் பாராட்டினர். பெரும்பாலானோர் 'ஏதோ சொல்கிறார், ஆனால் அதில் சுவாரசியமாக எதுவும் இல்லை' என்று நினைத்ததை என்னால் உணர முடிந்தது.
"எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எனக்கு நெருக்கமான ஒருவரிடம் இதைப் பற்றிக் கூறினேன். அவர் அதிகம் படித்தவர் இல்லை, ஆனால் புத்திசாலி. அடுத்த முறை, அவர் என் சொற்பொழிவுக்கு வந்தார். என் சொற்பொழிவைக் கேட்ட பிறகு, 'உங்கள் பேச்சில் விஷயம் இருக்கிறது, ஆனால், கேட்பவர்களுக்கு ஆர்வமூட்டும் விதத்தில் உங்கள் பேச்சு இல்லை!' என்றார் அவர்.
"அதற்கு என்ன செய்வதென்று கேட்டேன். அவர் கொஞ்சம் யோசித்து விட்டு, "எப்போதோ ஒரு காலத்தில் எழுதப்பட்ட கதைகளை நீங்கள் சொல்கிறீர்கள். அவை தற்கால நிகழ்வுகளுக்குப் பொருத்தமாக இல்லையே! அதனால் நீங்கள் கதைகளைச் சொல்லும்போது அவற்றைத் தற்கால நிகழ்வுகளுடன் இணைத்துச் சொல்லுங்கள். உதாரணமாக ராமாயணக் கதையைச் சொல்லும்போது தற்காலத்தில் பெற்றோர் பேச்சை மதிக்காத பிள்ளைகள் பற்றிக் கூறி அதை ராமரின் பெற்றோர் பக்தியுடன் இணைத்துச் சொல்லுங்கள். லக்ஷ்மணர் தந்தையைக் கடுமையாகப் பேசியதைக் குறிப்பிட்டு, கோபத்தின் வசப்பட்டால், நல்ல பிள்ளைகள் கூடப் பெற்றோர்களை இகழ்ந்து பேசக் கூடும் என்று சுட்டிக் காட்டுங்கள். இப்படியெல்லாம் புராண நிகழ்வுகளைத் தற்கால உலக இயற்கையுடன் இணைத்துப் பேசினால், அது கேட்பவர்களுக்கு சுவாரசியமாக இருக்கும்' என்றார்.
"என் அடுத்த சொற்பொழிவிலிருந்தே, அவர் கூறிய யோசனைகளைச் செயல்படுத்தினேன். அதற்குப் பிறகு, கதை கேட்ட மக்களிடம் ஏற்பட்ட உற்சாகத்தை என்னால் உணர முடிந்தது. எனவே நான் படித்து அறிந்தவை மட்டுமின்றி, அந்த அறிவுள்ள நபரிடம் நான் அறிந்து கொண்ட நடைமுறை அறிவும், என் பேச்சுக்கள் பலருக்கும் பிடித்தவையாக அமைந்ததற்குக் காரணம்."
ஒரு நிமிடம் தன் பேச்சை நிறுத்தி விட்டுத் தொடர்ந்தார் பாண்டுரங்கன்
"இந்தப் பாராட்டு விழாவின்போது, என் வெற்றிக்குக் காரணமான அந்த நபரை மேடைக்கு அழைத்து கௌரவிப்பதுதான் முறை. ஆனால், என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை."
பாண்டுரங்கன் மீண்டும் பேச்சை நிறுத்தினார். தன் மூக்குக் கண்ணாடியைக் கழற்றிக் கண்களைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டார்.
"உலக இயற்கையைப் புரிந்து கொண்டு செயல்பட எனக்கு யோசனை கூறிய அந்த நபர், இப்போது உயிருடன் இல்லை. என் மனைவி என்னை விட்டுப் பிரிந்து மூன்று ஆண்டுகள் ஆகி விட்டன!" என்றார் பாண்டுரங்கன், கம்மிய குரலில்.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 64
அமைச்சு
குறள் 637:
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.
பொருள்:
நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளை அறிந்த போதிலும், உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செயல்பட வேண்டும்.
No comments:
Post a Comment