"நாம ஒத்தர்கிட்ட உதவி கேட்டா, முடிஞ்சா நமக்கு உதவி செய்யணும், முடியலேன்னா, முடியாதுன்னு சொல்லணும்.
"அதை விட்டுட்டு, எனக்கு உபதேசம் பண்றான். உபதேசம் பண்ண இவன் யாரு? என் அப்பாவா, அண்ணனா? அவனோட உபதேசத்தை நான் கேக்கலேங்கறதுக்காக, என்னைக் கண்டபடி பேசிட்டான், அதுவும் அவன் மனைவி முன்னாலேயே! அவமானத்தில எனக்கு அழுகையே வந்துடும் போல ஆயிடுச்சு" என்றான் செண்பகராமன், ஆத்திரத்துடன்.
சொல்லும்போதே, அவன் தொண்டை அடைத்துக் கொண்டது.
"'யாரைச் சொல்றீங்க? என்ன நடந்தது?" என்றாள் அவன் மனைவி மஞ்சுளா.
"எல்லாம் என் நண்பன் அமுதனைப் பத்தித்தான். அமுதன்னு பேரை வச்சுக்கிட்டு விஷத்தைக் கக்கிட்டான். அவனை என் நண்பன்னு சொல்லிக்கவே எனக்கு அவமானமா இருக்கு. இதோட அவன் நட்புக்குத் தலை முழுகிட்டேன்."
"என்ன நடந்தது?"
"இந்த கிரிப்டோ கரன்சின்னெல்லாம் சொல்றாங்க இல்ல?"
"ஆமாம். நான் கேள்விப்படிருக்கேன். ஆனா, அது என்னன்னு புரியல. ஏதாவது வெளிநாட்டு கரன்சியா?"
"வெளிநாட்டு கரன்சியெல்லாம் இல்ல. பிட்காயின் தெரியுமா?"
"பேர்தான் தெரியும். ஆனா பாத்ததில்ல. கோல்ட் காயின்தான் பாத்திருக்கேன்!" என்றாள் மஞ்சுளா.
"அதைப் பாக்க முடியாது. அதையெல்லாம் வர்ச்சுவல் கரன்சிம்பாங்க. அதாவது இல்லாத ஒண்ணை இருக்கற மாதிரி வச்சுக்கறது!"
"இல்லாததை இருக்கற மாதிரி வச்சுக்கிட்டு என்ன பண்றது?" என்றாள் மஞ்சுளா, அப்பாவித்தனமாக.
"பிட்காயின், லூனா, இன்னும் சில கிரிப்டோகரன்சி எல்லாம் இருக்கு. எல்லாமே வர்ச்சுவல் கரன்சிதான். ரிலையன்ஸ், மாருதி மாதிரி கம்பெனி ஷேர்களையெல்லாம் பங்குச் சந்தையில வாங்கி விக்கற மாதிரி, கிர்ப்டோகரன்சிக்கும் ஒரு எக்ஸ்சேஞ்ச் இருக்கு. அதுல இதையெல்லாம் வாங்கி வித்தா, நல்ல லாபம் வரும்."
"'யாருக்கு?"
செண்பகராமன் மஞ்சுளாவை முறைத்துப் பார்த்தான். மனைவிக்குத் தெரியாத ஒரு விஷயத்தை அவளுக்கு விளக்கும் உற்சாகத்தில் சற்றே மறக்கப்பட்டிருந்த கோபமும், வருத்தமும் மீண்டும் மேலெழுந்தன.
'இவள் தெரியாமல் கேட்கிறாளா, அல்லது என்னைக் கிண்டல் செய்கிறாளா?'
"எல்லாருக்கும்தான். ஆனா, சில சமயம் லாபம் வரும், சில சமயம் நஷ்டம் வரும். ஸ்டாக் மார்க்கெட்ல வர மாதிரிதான்."
"ஏங்க, ஸ்டாக் மார்க்கெட்ல ஒரு கம்பெனிக்கு நல்ல லாபம் வந்தா, அதோட விலை ஏறும். நஷ்டம் வந்தாலோ, அல்லது லாபம் குறைஞ்சாலோ, விலை இறங்கும். இந்த வர்ச்சுவல் கரன்சி விலையெல்லாம் எப்படி ஏறி இறங்கும்?"
"அமுதன் கேட்ட மாதிரியே நீயும் கேக்கறியே! நீ நினைக்கிற மாதிரி, ஸ்டாக் மார்க்கெட்ல விலை ஏறுவது, இறங்குவதெல்லாம் ஒரு கம்பெனியோட லாப நஷ்டத்தை மட்டும் வச்சு இல்ல. டிமாண்ட், சப்ளைன்னெல்லாம் இருக்கு. பொருளாதாரம் படிச்சிருந்தாதான் அதெல்லாம் புரியும்!"
"அது சரிதான். நான் படிக்கல. ஆனா, நீங்க கூட ஃபிசிக்ஸ்தானே படிச்சிருக்கீங்க? பொருளாதாரம் படிக்கலியே! அது இருக்கட்டும். நான் கேட்ட மாதிரிதான் அமுதனும் கேட்டார்னு சொன்னீங்க. அவர் எதுக்கு இப்படிக் கேட்டாரு? உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன நடந்ததுன்னு நீங்க சொல்லவே இல்லையே!" என்றாள் மஞ்சுளா.
"கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்ல முதலீடு பண்ணினா நல்ல லாபம் கிடைக்கும்னு தோணிச்சு. முதலீடு செய்ய எங்கிட்ட பணம் இல்ல. அவன்கிட்ட இருபத்தையாயிரம் ரூபாய் கடன் கேட்டேன். அதுக்குத்தான் இப்படியெல்லாம் கேட்டு, எனக்கு உபதேசம் பண்ணி, ஏதாவது மியூசுவல் ஃபண்ட்ல எஸ் ஐ பி மாதிரி மாசம் ஆயிரம் ரூபா போட்டாக் கூட, அதிக ரிஸ்க் இல்லாம, ஓரளவு லாபம் வர வாய்ப்பு இருக்குன்னு எனக்கு உபதேசம் பண்றான்.
"அதைச் சொல்ல இவன் எதுக்கு? அதுதான் டிவியில தோனி கூட சொல்றாரே! பணம் கொடுக்காட்டாக் கூடப் பரவாயில்ல, என்னை பொறுப்பில்லாதவன், ஒரு விஷயத்தில ஈடுபடறதுக்கு முன்னால கொஞ்சம் கூட யோசனை பண்ணாம கண்ணை மூடிக்கிட்டு பள்ளத்தில விழற அவசரக் குடுக்கைன்னெல்லாம் சொல்லி, கண்டபடி திட்டிட்டான்.
"நம்மகிட்ட சிரிச்சுப் பேசிக்கிட்டிருந்த ஒரு நண்பன் இப்படியெல்லாம் பேசினது எனக்கு எவ்வளவு அதிர்ச்சியா இருந்தது தெரியுமா? இன்னும் அஞ்சு நிமிஷம் அங்கே இருந்திருந்தேன்னா, அழுதே இருப்பேன். 'போடா, உனக்கும், எனக்கும் நடுவில இனிமே எந்தப் பேச்சும் இல்லே'ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்."
நடந்ததை மனைவியிடம் பகிர்ந்து கொண்ட பிறகு, மனச்சுமை சற்றே குறைந்தது போல் இருந்தது செண்பகராமனுக்கு.
"என்னங்க! கிரிப்டோகரன்சி சந்தையில பெரிய வீழ்ச்சியாமே! எல்லா கரன்சியும் ரொம்ப விலை குறைஞ்சுடுச்சாமே! நீங்க சொன்னீங்களே லூனாவோ, ஏதோ ஒண்ணு, அதோட விலை பூஜ்யத்துக்கிட்ட வந்துடுச்சாமே! டிவியில சொன்னாங்க!" என்றாள் மஞ்சுளா.
செண்பகராமன் மௌனமாக இருந்தேன்.
"அன்னிக்கு நீங்க சொன்னபோதே நினைச்சேன், உங்க நண்பர் உங்களோட நன்மைக்காகத்தான் உங்ககிட்ட அப்படிப் பேசி இருப்பாருன்னு. கடுமையாப் பேசினாதான், நீங்க இதில இறங்காம இருப்பீங்கன்னு நினைச்சுக் கூட அவர் அப்படிப் பேசி இருக்கலாம். ஆனா, அன்னிக்கு நீங்க அவர் மேல கோபமா இருந்தப்ப, நான் எதுவும் சொல்ல விரும்பல. அவர் சொன்ன மாதிரியே நடந்திருக்கு. நீங்க முதலீடு பண்ணி இருந்தா, உங்களுக்குப் பெரிய நஷ்டம் வந்திருக்கும். மறுபடி அதோட விலைகள்ளாம் ஏறுமான்னு தெரியாது.
"வேணுங்கறவங்கதான் அழ அழச் சொல்லுவாங்கன்னு ஒரு பழமொழி இருக்கு. நமக்கு நல்லது நினைக்கிறவங்கதான் நாம மனசு வருத்தப்பட்டாலும் பரவாயில்லேன்னு நினைச்சு, நம்ம நன்மைக்காக நம்மகிட்ட கடுமையாப் பேசுவாங்க. அமுதன் மாதிரி ஒரு நண்பர் உங்களுக்கு மட்டும் இல்ல, எல்லாருக்குமே வேணும். இந்த ரெண்டு மாசத்தில உங்க நண்பர் உங்களுக்கு நிறைய தடவை ஃபோன் பண்ணினாரு. நீங்க ஃபோனை எடுக்கல. இப்ப நீங்களே ஃபோன் பண்ணி அவர்கிட்ட பேசி, பழையபடி நட்போட இருங்க."
மஞ்சுளா கணவனின் முகத்தைப் பார்த்தாள். செண்பகராமன் மௌனமாக இருந்தான்.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 80
நட்பாராய்தல்
குறள் 795:
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.
No comments:
Post a Comment