Thursday, June 30, 2022

606. முருகனின் நண்பர்

"ஏண்டா, ஒரு வேலை வெட்டிக்குப் போகாம எப்ப பாத்தாலும் வீட்டில வெட்டியா உக்காந்துக்கிட்டிருக்க. ராத்திரி முழுக்கத் தூங்கிட்டு, அப்புறம் பகல் தூக்கம் வேற!

"அப்பப்ப  வாசல் திண்ணையில உக்காந்துக்கிட்டு தெருவில போறவங்களையெல்லாம் கூப்பிட்டு வெட்டிப் பேச்சு பேசிக்கிட்டிருக்கே. இப்படியே இருந்தா எப்படி உருப்படறது?" என்று முத்துலட்சுமி தன் மகனிடம் பலமுறை சொல்லிப் பார்த்து விட்டாள்.

"அதான் அப்பா நமக்கு நிறைய சொத்து விட்டுட்டுப் போயிருக்காரே! நான் எதுக்கு வேலைக்குப் போகணும்!" என்பான் முருகன்.

"குந்தித் தின்றால் குன்றும் கரையும்னு சொல்லுவாங்க."

"குன்று கரையக் கொஞ்ச நாள் ஆகும் இல்ல? அது கரைஞ்சப்பறம் பாத்துக்கலாம்!"

திருமணம் ஆனதும், அவன் மனைவி உமாவும் இதையேதான் சொல்லி வந்தாள். ஆயினும், முருகன் தன் இயல்பை மாற்றிக் கொள்ள முயலவில்லை.

ஒருநாள் முருகன் வீட்டு வாசலில் நான்கைந்து கார்கள் வந்து நின்றன.

கார் சத்தத்தைக் கேட்டு முருகன் புருவத்தை உயர்த்தினான். ஆனால் எழுந்து வாசலுக்குச் சென்று பார்க்க முயலவில்லை. 

உமா பரபரப்புடன் வாசலுக்குச் சென்று பார்த்தாள். 

முன்னால் இருந்த கார்களிலிருந்து இரண்டு போலீஸ் அதிகாரிகள் இறங்க, மத்தியில் இருந்த காரிலிருந்து இறங்கியவரைப் பார்த்ததும் உமாவுக்கு அதிர்ச்சி.

முதலமைச்சர்!

உமாவுக்கு வணக்கம் தெரிவித்த முதல்வர், "முருகன் வீடு இதானே? இருக்காரா?" என்றார்.

"இருக்காரு...வாங்க!" என்றாள் உமா தடுமாற்றத்துடன். அவளுக்கு எதுவும் புரியவில்லை.

உமா வீட்டுக்குள் நுழைய, அவள் பின்னே இரண்டு போலீஸ் அதிகாரிகளும், முதல்வரும் சென்றனர்.

வீட்டுக்குள் அவர்கள் நுழைந்ததும், அவர்களைப் பார்த்த முருகன் வியப்புடன் சட்டென்று எழுந்து நின்று, "செல்வம், நீயா?" என்றான்.

"நான்தான் முருகா! எப்படி இருக்கே?" என்றார் முதல்வர் செல்வம்.

பிறகு உமாவைப் பார்த்துச் சிரித்தபடி, "நானும் முருகனும் பள்ளியில் ரெண்டு வருஷம் சேர்ந்து படித்தோம். அப்புறம் அவன் குடும்பம் இந்த ஊருக்கு வந்துடுச்சு. சொல்லி இருப்பானே! அப்போது நாங்க நெருக்கமான நண்பர்கள். இப்பவும்தான்!" என்ற செல்வம், முருகனைப் பார்த்துச் சிரித்து விட்டு, "இல்லையாடா?" என்றார்.

"ஆமாம்" என்றான் முருகனும் சிரித்தபடியே.

சிறிது நேரம் முருகனிடம் பேசி விட்டுக் கிளம்பிய செல்வம், முருகனிடம், "உனக்கு எந்த உதவி வேணும்னாலும் எங்கிட்ட கேளு. நீ எப்ப ஃபோன் பண்ணினாலும் உடனே எங்கிட்ட ஃபோனைக் கொடுக்கணும்னு என் உதவியாளர்கிட்ட சொல்லிடறேன்" என்றார்.

உமாவைப் பார்த்து, "கும்பகோணத்துக்குக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்தபோது, பக்கத்தில இருக்கற இந்த ஊர்ல முருகன் இருக்கான்னு நினைவு வந்தது. அதனால அவனைப் பாத்துட்டுப் போகலாம்னு உடனே வந்துட்டேன். முன்னறிவிப்பு இல்லாம வந்தது உங்களுக்குத் தொந்தரவா இருந்திருக்கும். நீங்க கொடுத்த காப்பி ரொம்ப நல்லா இருந்தது, வரேன், வணக்கம்!" என்று சொல்லி விட்டுச் சென்றார்.

முதல்வர் சென்ற பிறகு, உமா முருகனிடம், "முதல்வர் செல்வம் உங்களோட படிச்சவர்னு நீங்க சொல்லவே இல்லையே!" என்றாள்.

"அதை ஒரு முக்கியமான விஷயமா நான் நினைக்கல!" என்றான் முருகன்.

'எந்த உதவி வேண்டுமானாலும் கேள், எப்போது வேண்டுமானாலும் என்னைத் தொடர்பு கொள்!' என்று முதல்வர் சொல்லி விட்டுப் போனதை நினைத்துப் பார்த்தாள் உமா.

ஒரு தொழிலோ, வியபாரமோ தொடங்கினால், அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்கக் கூடும். அப்படி இல்லாவிட்டால் கூட, முருகன் முதல்வரின் நண்பன் என்று இப்போது பலருக்கும் தெரிந்து விட்டதால், அதுவே அவர்களுக்கு ஒரு மதிப்பையும் அங்கீகாரத்தையும் கொடுக்கும். அவர்கள் செய்யும் எந்த முயற்சிக்கும் அது உதவும்.

ஆனால் இதைப் பயன்படுத்திக் கொண்டு தன்னை உயர்த்திக் கொள்வதற்கான, அல்லது குடும்பத்தை முன்னேற்றுவதற்கான செயல் எதிலும் முருகன் ஈடுபடுவான் என்ற நம்பிக்கை உமாவுக்கு இல்லை.

பொருட்பால்
அரசியல் இயல்

அதிகாரம் 61
மடியின்மை (சோம்பலின்மை)

குறள் 606:
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.

பொருள்:
நாட்டை ஆளும் தலைவருடைய உறவு தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.

      அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...