Sunday, July 24, 2022

613. சீட் கிடைக்குமா?

"என் பையன் வாங்கின மார்க்குக்கு அவனுக்கு ஏ கே காலேஜில மானேஜ்மென்ட் கோட்டால சீட் கிடைக்கும். ஆனா அங்கே டொனேஷன் நிறையக் கேப்பாங்க. என்னால அவ்வளவு கொடுக்க முடியாது. அதனால வேற காலேஜிலதான் முயற்சி பண்ணணும் " என்றான் சாந்தமூர்த்தி.

"வேற நல்ல காலேஜில கிடைக்கும் இ ல்ல?" என்றான் புஷ்பவனம்.

"கிடைக்கும். ஆனா ஏ கே காலேஜ் எல்லாருக்கும் ஒரு கனவுக் கல்லூரி. ரொம்ப நல்லா சொல்லிக் கொடுப்பாங்க. நிறைய மார்க் வாங்கினா அங்கே ஸ்காலர்ஷிப் கிடைக்கும். அதோட படிப்பு முடிஞ்சதும் வேலை உத்தரவாதம். காம்பஸ் இன்டர்வியூவுக்கு பெரிய பெரிய கம்பெனியிலேந்தெல்லாம் வந்து அள்ளிக்கிட்டுப் போயிடுவாங்க. இன்னும் ஒண்ணு ரெண்டு பர்சன்ட் அதிகம் வாங்கி இருந்தாஅரசாங்க கோட்டாவிலேயே அந்தக் கல்லூரியில கிடைச்சிருக்கும். என்ன செய்யறது, நாம கொடுத்து வச்சது அவ்வளவுதான்!" என்றார் சாந்தமூர்த்தி பெருமூச்சுடன்.

"வேற காலேஜில சேக்கறதுன்னா எப்ப சேக்கணும்?" என்றான் சாந்தமூர்த்தி.

"எந்த காலேஜில சேக்கறதா இருந்தாலும் கவுன்ஸலிங்குக்கு அப்புறம்தான். அதுக்கு இன்னும் தேதியே வரலியே! நான் கட் ஆஃப் மார்க்கை வச்சு சொல்றேன். எதுக்குக் கேக்கற? உனக்கு ஏதாவது யோசனை இருக்கா என்ன?"

"எனக்கு இதைப் பத்தி எல்லாம் எதுவுமே தெரியாதே! என் பொண்ணு இப்பதான் எட்டம் வகுப்புக்கு வந்திருக்கா. இதையெல்லாம் பத்தி நான் கவலைப்பட இன்னும் நாலு வருஷம் இருக்கு!" என்றான் புஷ்பவனம் சிரித்தபடி.

ரு வாரம் கழித்து சாந்தமூர்த்திக்கு புஷ்பவனத்திடமிருந்து தொலேபேசி அழைப்பு வந்தது.

"டேய் சாந்தமூர்த்தி! உன் பையனுக்கு ஏ கே காலேஜில சீட் கிடைச்சுடுச்சு. நீ ஒரு பைசா டொனேஷன் கொடுக்க வேண்டாம்!" என்றான் புஷ்பவனம்.

"என்ன சொல்றே? ஒண்ணுமே புரியலியே!" என்றான் சாந்தமூர்த்தி.

"விவரமா சொல்றேன். ஏ கே கல்லூரியில உன் பையனை சேக்கணுங்கற உன்னோட ஆசையை நீ சொன்னப்பறம்  அந்தக் கல்லுரியைப் பத்தி விசாரிச்சேன்.  அந்தக் கல்லூரியோட தலைவருக்கு ஒரு எம் பி நெருக்கமானவர்னும், ஒவ்வொரு வருஷமும் அந்த எம் பி அவரோட சிபாரிசில நாலஞ்சு பேருக்கு அந்தக் கல்லூரியில சீட் வாங்கிக் கொடுக்கிறார்னும் கேள்விப்பட்டேன். 

"அந்த எம் பியைப் பத்தி விசாரிச்சப்ப அவரோட சொந்த ஊர் எதுன்னு தெரிஞ்சது. அந்து ஊரைச் சேர்ந்த ஒத்தன் என்னோட கல்லூரியில படிச்சது நினைவு வந்தது. கல்லூரிப் படிப்பு முடிஞ்சப்பறம் அவனோட எனக்குத் தொடர்பு இல்ல. கல்லூரியில நாங்க நெருங்கின நண்பர்கள் இல்ல. சேர்ந்து படிச்சோம், அவ்வளவுதான். 

"என்னோட நெருங்கின நண்பன் ஒத்தன் கிட்ட சொல்லி அவனோட நண்பர்கள் சில பேர் மூலமா அந்த நண்பனோட ஃபோன் நம்பரை வாங்கி அவன்கிட்ட பேசினேன். 

"இவ்வளவு வருஷம் கழிச்சு நான் அவனைத் தொடர்பு கொண்டதில அவனுக்கு ஆச்சரியம். ஆனா ஒரு உதவிக்காகத்தான் அவனைத் தொடர்பு கொள்றதா வெளிப்படையாச் சொல்லி அவன்கிட்ட உதவி கேட்டேன். தனக்கு அந்த எம் பியை நல்லாத் தெரியும்னு அவன் சொன்னான். 

"ஆனா அவரு இப்ப டெல்லியில இருக்காரு, இது விஷயமா ஃபோன்ல பேச முடியாது, டெல்லிக்குப் போய் நேரில பாத்துத்தான் பேசணும்னு சொன்னான். பிளேன்ல போனா செலவு அதிகம் ஆகும்னு தத்கல்ல டிக்கட் வாங்கி ரெண்டு பேரும் ரயில்ல டெல்லிக்கு வந்து எம் பியைப் பாத்தோம். 

"அவரு உன் பையனுக்கு சீட் வாங்கிக் கொடுக்கறேன்னு சொல்லிட்டாரு. பொதுவா பணம் வாங்கிக்கிட்டுத்தான் செய்வாருன்னு நினைக்கிறேன். ஆனா தன்னோட நண்பனுக்கு வேண்டியவங்க என்பதால அவரு பணம் எதுவும் வாங்கல. நான் சொன்னதுக்காகத் தன் வேலையை விட்டுட்டு என்னோட டெல்லிக்கு வந்த என் நண்பனுக்குத்தான் நன்றி சொல்லணும். நான் இப்ப டெல்லிலேந்துதான் பேசறேன்."

சாந்தமூர்த்தி பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தான்.

"என்னடா பதிலையே காணோம்?" என்றான் புஷ்பவனம்.

"என்ன சொல்றதுன்னு தெரியல. எங்கிட்ட கூட சொல்லாமே, ஏதோ உன் பையனுக்கு சீன் வாங்கற மாதிரி முயற்சி செஞ்சு கல்லூரியில கூடப் படிச்சவரைத் தேடிப் பிடிச்சு அவரோட டெல்லிக்குப் போய் எம் பி யைப் பாத்து சீட் வாங்கி இருக்கே. ஆனா இதில ஒண்ணும் ஆச்சரியம் இல்ல.  ஏன்னா எவ்வளவு கஷ்மான வேலையா இருந்தாலும், அதைச் செய்ய முடியும்னு நினைச்சு முயற்சி செய்யறவன் நீ. நமக்காக முயற்சி செய்யறமா, மத்தவங்களுக்காகச் செய்யறமாங்கற வேறுபாடு கூடப் பாக்காம செயல்படற உனக்கு மத்தவங்களுக்கு உதவி செய்யறதுங்கறது ரொம்ப இயல்பான விஷயமாத்தானே இருக்கும்?" என்றான் சாந்தமூர்த்தி நெகிழ்ச்சியான குரலில்.

"இங்கே பாரு, மத்தவங்களுக்கு உதவி செய்யறது என்னோட இயல்புன்னெல்லாம் சொல்லி  நீ தப்பிக்க முடியாது. நாங்க ரெண்டு பேரு டெல்லிக்குப் போய்த் தங்கிட்டு வந்த செலவு, ரெண்டு பேருக்கும் டெய்லி பேட்டா எல்லாம் நீதான் கொடுக்கணும்!" என்றான் புஷ்பவனம் விளையாட்டாக.

பொருட்பால்
அரசியல் இயல்

அதிகாரம் 62
ஆள்வினையுடைமை (விடாமுயற்சி)

குறள் 613:
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு..

பொருள்:
முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை நிலைபெற்றிருக்கிறது.

      அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...