Thursday, June 16, 2022

603. அரசர் ஏன் அப்படிச் சொன்னார்?

"அரசே! உங்கள் முன்னோர்கள் யாரும் செய்யாத அளவுக்கு உங்கள் சாம்ராஜ்யத்தை விஸ்தரித்திருக்கிறீர்கள். சரித்திரத்தில் உங்கள் பெயர் நிச்சயம் இடம் பெறும்!" என்றார் அமைச்சர் மழவராயர்.

"சரித்திரம் என்பது ஒரு தொடர் நிகழ்வு. கடந்த காலம் மட்டும் சரித்திரம் இல்லை. எதிர்காலமும் சரித்திரத்தில் இடம் பெறுமே!" என்றார் அரசர் சூரிய கீர்த்தி.

"ஆம் அரசே! ஆனால் அதைப் பற்றி என்ன?"

"ஒன்றுமில்லை!" என்றார் சூரியகீர்த்தி விட்டத்தைப் பார்த்தபடி.

அமைச்சர் அரசரைச் சற்றுக் குழப்பத்துனும், மிகுந்த கவலையுடனும் பார்த்தார்.

பல நாடுகளை வென்று தன்னை ஒரு பேரரரசராக நிலை நாட்டிக் கொண்ட பிறகும், அரசர் சூரியகீர்த்தி சிறிது காலமாக ஏதோ கவலையுடன் இருப்பதையும், தன் கவலையைப் புதிரான பேச்சுக்களால் வெளிப்படுத்துவதையும் அமைச்சர் கவனித்தார். 

ஆனால் அதற்கான காரணம் அமைச்சருக்குப் புரியவில்லை. அரசரிடம் நேரே கேட்பதற்கும் தயக்கமாக இருந்தது. 

அரசரே ஒருநாள் தன்னிடம் தன் மனக்கவலையைப் பற்றி விரிவாகக் கூறுவார் என்று அமைச்சர் எதிர்பார்த்தார்.ஆனால் அந்த சந்தர்ப்பம் வரவில்லை. விரைவிலேயே சூரியகீர்த்தி காலமாகி விட்டார்.

"அரசே! உங்கள் தந்தை சில நாடுகளை வென்று நம் நாட்டுடன் இணைத்து விட்டார். வேறு சில நாடுகளை நாம் வென்ற பின், அந்த மன்னர்கள் நமக்கு சிற்றரசர்களாக மாறி நம் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். அந்த நாடுகளுக்கெல்லாம் உங்கள் தந்தை அவ்வப்போது சென்று மக்களைச் சந்தித்து வருவார். அதனால் அந்த மக்களும் மன்னர் மீது அன்பு கொண்டிருந்தனர். இப்போது நீங்கள் அந்த நாடுகளுக்குச் சென்று சிற்றரசர்களையும், மக்களையும் சந்திக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு நம் மீது தொடர்ந்து அன்பும் விஸ்வாசமும் இருக்கும்" என்றார் அமைச்சர் புதிய மன்னர் வீரமானிடம்.

"அவையெல்லாம் தேவையற்றவை அமைச்சரே! எல்லா ஊர்களிலும் அரசு அதிகாரிகள் நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்கிறார்கள் அல்லவா, அது போதும்" என்றான் வீரமான்.

சற்று விட்டுப் பிடிக்கலாம் என்று நினைத்து அமைச்சர் சிறிது காலம் கழித்து மீண்டும் இது பற்றி வீரமானிடம் பேசினார். ஆனால் அப்போதும் வீரமான் அதற்கு இணங்கவில்லை.

வீரமான் அரண்மனைக்குள்ளேயே அடைந்திருந்து அறுசுவை உணவு, மது, மாது என்று உல்லாச வாழ்க்கையிலேயே ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தான்.

"அரசே! சில சிற்றரசர்கள் சிறிய அளவில் தொந்தரவு கொடுக்க ஆரம்பத்திருக்ககிறார்கள். நாட்டின் சில பகுதிகளில் கலகங்களும் ஏற்படத் துவங்கி இருக்கின்றன. நீங்கள் ஒருமுறை அந்த இடங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்துப் பேசி விட்டு வந்தால் கலகங்கள் அடங்கி விடும். குழப்பம் விளைவிக்கும் சிற்றரசர்களையும் நீங்கள் ஒருமுறை நேரில் சந்தித்தால் அவர்கள் அடங்கி விடுவார்கள்" என்றார் அமைச்சர்.

"எல்லாவற்றையும் மன்னர்தான் செய்ய வேண்டுமென்றால்  அதிகாரிகள், அமைச்சரான நீங்கள் எல்லாம் எதற்கு" என்று கேட்டு விட்டு வீரமான் அந்தப்புரத்துக்குள் சென்று விட்டான்.

வீரமான் நாட்டைப் பாதுகாப்பான் என்று நம்புவது முட்டாள்தனம் என்று அமைச்சருக்குப் புரிந்தது. தானே தன்னால் முடிந்த அளவுக்கு ஏதாவது செய்தால்தான் உண்டு. இல்லாவிட்டால் பேரரசர் சூரியகீர்த்தி உருவாக்கிய இந்த சாம்ராஜ்யம் அவர் புதல்வர் காலத்திலேயே அழிந்து விடக் கூடும்.

சூரியகீர்த்தி "சரித்திரம் என்பது கடந்த காலம் மட்டுமல்ல, எதிர்காலமும் சேர்ந்ததுதான்" என்று ஒருமுறை கூறியது அமைச்சருக்கு நினைவு வந்தது.

அதன் பொருள் அவருக்கு இப்போது புரிந்தாற்போல் இருந்தது. தன் மகனைப் பற்றி அறிந்திருந்ததால்தான் சூரியகீர்த்தி அப்படிச் சொல்லி இருக்கிறார். அவர் கவலைக்கும் காரணம் அதுதான். 

தான் உருவாக்கிய சாம்ராஜ்யம் தன் மகனின் காலத்திலேயே அழிந்து விடுமோ என்ற அச்சத்தினால்தான் அவர் எதிர்காலமும் சரித்திரத்தில் இடம் பெறுமே என்று கவலையுடன் கூறி இருக்கிறார்.

சூரியகீர்த்தியின் அச்சம் உண்மையாகி விடக் கூடாதே என்று கவலைப்படத் தொடங்கினார் அமைச்சர். 

பொருட்பால்
அரசியல் இயல்

அதிகாரம் 61
மடியின்மை (சோம்பலின்மை)

குறள் 603:
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.

பொருள்:
அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவில்லாதவன் பிறந்த குடி அவனுக்கு முன் அழிந்துவிடும்.

குறள் 604 (விரைவில்)
               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...