Friday, June 10, 2022

599. முருகன் என்று ஒருவன்!

அந்தச் சிறிய கிராமத்தில்தான் முருகன் தன் பிரசாரத்தைத் தொடங்கினான்.

அருகில் இருந்த நகரத்துக்கு வந்து, அங்கிருந்த ஒரு சிறிய ஹோட்டலில் தங்கினான். அங்கிருந்து பஸ் பிடித்து அந்த ஊரில் வந்து இறங்கிய முருகன் அருகிலிருந்த டீக்கடைக்குச் சென்றான். 

அங்கே டீ வாங்கி அருந்தியபடியே அங்கே இருந்தவர்களிடம் இயல்பாகப் பேச ஆரம்பித்தான். அவர்கள் அவன் சொன்னதை வியப்புடன் கேட்டனர். 

டீக்கடை உரிமையாளரும் ஆர்வத்துடன் கேட்டார். டீக்குக் காசு கொடுக்கும்போது, டீக்கடை உரிமையாளரிடமும் பேசினான். அவர் தயக்கத்துடன் தலையாட்டினார்.

பிறகு, அங்கு வந்த பஸ்ஸைப் பிடித்து உடனே நகரத்தில் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்று விட்டான் முருகன்.

மாலை ஆறு மணிக்கு முருகன் மீண்டும் அந்த கிராமத்துக்கு பஸ்ஸில் வந்து இறங்கியபோது பஸ் நிறுத்தத்துக்கு அருகே அவனுக்காகக் காத்திருப்பது போல் பதினைந்து இருபது பேர் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களிடம் ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு அவர்களுடன் சென்றான் முருகன்.

ஒரு பெரிய தெருவுக்கு அவனை அவர்கள் அழைத்துச் சென்றனர். அங்கே ஐம்பது அறுபது பேர் கூடி இருந்தனர்.

முருகன் அவர்களுக்கு முன்னால் நின்று பேச ஆரம்பத்தான். அப்போது அருகிலிருந்த ஒரு பெரிய வீட்டில் அமர்ந்திருந்தவர், "இந்தத் திண்ணையில உக்காந்துக்கிட்டுப் பேசுங்க. அப்பதான் உங்களை எல்லாராலயும் பாக்க முடியும்" என்றார்.

முருகன் அந்தத் திண்ணையில் அமர்ந்து பேச ஆரம்பித்தான்.

"வணக்கம். என் பெயர் முருகன். நான் இந்த ஊர்க்காரன் இல்ல. ஆனா இந்த நாட்டுக் குடிமகன். அந்த உரிமையிலதான் இந்த ஊருக்கு வந்திருக்கேன். இந்த்த் தொகுதியிலேந்து ஜெயிச்ச தலைவர் நாலரை வருஷமா பதவியில இருக்காரு. 

"அவர் மக்களுக்கு எந்த நன்மையும் செஞ்சதில்ல. ஆனா எல்லாரையும் நல்லா ஏமாத்திக்கிட்டிருக்காரு. யாராவது அவரை எதிர்த்துப் பேசினா அவங்களைப் பத்தி அவதூறுப் பிரசாரம் பண்ணுவாரு, தன்னோட அதிகாரத்தை வச்சு அவங்களை  சிறையில தள்ளுவாரு, அவங்க நாட்டுக்கே எதிரின்னு சித்தரிப்பாரு. 

"கொஞ்சம் பெரிய அளவில எதிர்ப்பு வந்தா மக்களுக்குள்ள பிரிவினைகளை ஏற்படுத்தி  சில பேர் மேல வெறுப்பை விதைச்சு அந்த வெறுப்பு வெள்ளத்தில கரையேந்தி வந்துடுவாரு.

"அரசியல்ல அவரை எதிர்க்க வேண்டியவங்க ஏனோதானோன்னு செயல்படறதால அவர் வலுவாகிக்கிட்டே போறாரு. அடுத்த தேர்தல்லேயும் அவர்தான் ஜெயிக்கப் போறாருன்னு பேசிக்கறாங்க. 

"அவர் விலை கொடுத்து வாங்கின ஊடகங்களும், அவரால் மிரட்டப்பட்ட ஊடகங்களும் அவர் செஞ்ச தப்புகளை மறைச்சு அவர் செய்யாத நல்லதையெல்லாம் செஞ்சதா சொல்லி அவருக்கு லாலி பாடிக்கிட்டிருக்காங்க.

"ஒரு சமூகத்தில ஒரு தப்பான விஷயம் நடக்கும்போது, அதைத் தொடர்ந்து நடக்க விட்டா அது அந்த சமூகத்துக்குக் கேடு, அவமானம். அந்த அவமானம் நடக்கக் கூடாதுன்னு நான் நினைக்கிறேன். என்னை மாதிரி நினைக்கிறவங்க உங்கள்ளேயும் பல பேர் இருப்பீங்க. அப்படி நினைக்காதவங்களுக்கு உண்மையைச் சொல்லிப் புரிய வைக்கிறது என்னோட கடமைன்னு நினைக்கிறேன்.

"ஒரு பூனை மாதிரி அமைதியா உள்ளே வந்தவரு இன்னிக்கு ஒரு யானை மாதிரி வளர்ந்து, மதம் பிடிச்சுப் போய் எல்லாத்தையும் மிதிச்சு நாசமாக்கிக்கிட்டிருக்காரு. 

"பூனைக்கு யார் மணி கட்டறதுன்னு ஒரு பழமொழி இருக்கு. பூனைக்கு மணி கட்ட எலிகள் பயப்படறது நியாயம்தான். ஆனா யானையைக் கண்டு சிங்கம், புலி எல்லாம் பயப்படக் கூடாது இல்ல? ஆனா நம்மைச் சுத்தி இருக்கறவங்க எலி மாதிரி ஒடுங்கிக்கிட்டுத்தானே இருக்காங்க. நாம் எல்லாம் எலிகள் இல்லை, புலிகள், நம்மால மதம் பிடிச்ச யானையை அடக்க முடியும்!

"உங்களை ஏமாத்திக்கிட்டிருக்கிற தலைவரை எதிர்த்து அடுத்த தேர்தல்ல நான் நிக்கப்போறேன். நான் தனி ஆள்தான். சக்தி உள்ள கட்சிகள் ஒண்ணும் செய்யாம கையைப் பிசைஞ்சுக்கிட்டு உக்காந்திருக்கறதால மதம் பிடிச்ச யானையை மக்கள் சக்தியைத் திரட்டி அடக்கற முயற்சியை நான் துவங்கி இருக்கேன். 

"இன்னிக்கு நான் யாரோ ஒரு ஆள்தான். தேர்தலுக்கு இன்னும் ஆறு மாசம் இருக்கு. அதுக்குள்ள மக்கள்கிட்ட உண்மையை எடுத்துச் சொல்லி நிலைமையை மாத்த முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.

"அவரோட தொகுதியில இந்தத ஊர்ல நான் என் பிரசாரத்தைத் தொடங்கினதுக்குக் காரணம் இந்த ஊரோட பேரு சத்தியபுரின்னு இருக்கறதுதான். இது சத்தியத்துக்கான போராட்டம். அதை சத்தியபுரில தொடங்கறதுதானே பொருத்தமா இருக்கும்?

"இப்ப நான் ஒரு ஆளாத்தான் இருக்கேன். 'நூறு இளைஞர்களைக் கொடுங்க, இந்த நாட்டையே நான் மாத்திக் காட்டறேன்' னு விவேகானந்தர் சொன்ன மாதிரி நூறு பேர் என்னோட இருந்தா போதும், என்னால என் முயற்சியில வெற்றி அடைய முடியும்னு நம்பறேன். இன்னிக்கு இந்த ஊர்லேந்து ஒத்தர் கிடைச்சாக் கூடப் போதும். அதையே ஒரு வெற்றிகரமான ஆரம்பம்னு நான் நினைப்பேன்!"

முருகன் தன் பேச்சை நிறுத்தியதும் ஐந்து பேர் கையைத் தூக்கினார்கள்.

"நீங்க கண்டிப்பா ஜெயிப்பீங்க தம்பி!" என்று கூட்டத்தில் பின்னால் நின்றிருந்த ஒருவர் உரத்துக் கூவினார்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 60
ஊக்கமுடைமை

குறள் 599:
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.

பொருள்:
யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையான கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகிய புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்..

               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...