Wednesday, May 25, 2022

588. நரேஷின் மனக்குறை

தலைமை அதிகாரி அழைத்ததும் அவர் அறைக்குச் சென்றார் நரேஷ்.

"மிஸ்டர் நரேஷ்! நீங்க ஒரு மூத்த அதிகாரி. நம்ம துறைக்கு உங்க பங்களிப்பு நிறைய இருக்கு. நீங்க சேகரிச்சுக் கொடுத்த தகவல்களால எனக்கு அரசாங்கத்தில நல்ல பேர் கிடைச்சிருக்கு. உங்க பங்களிப்பைப் பத்தி நானும் மேலிடத்தில அப்பப்ப சொல்லிக்கிட்டிருக்கேன்" என்றார் தலைமை அதிகாரி குப்தா.

"இதெல்லாம் எனக்குத் தெரியுமே சார்!" என்றார் நரேஷ்.

"ஆனா கொஞ்ச நாளா நீங்க ஏதோ வருத்தத்தில இருக்கற மாதிரி இருக்கு. உங்க சொந்த வாழ்க்கையில பிரச்னை எதுவுமே இல்லையே?"

"இல்ல சார்!"

"சொல்லுங்க! இங்கே என்ன பிரச்னை உங்களுக்கு?"

"பிரச்னை எதுவும் இல்ல..." என்றார் நரேஷ் தயக்கத்துடன்.

"பிரச்னை இல்லைன்னா மனக்குறை. ஷூட்!" என்றார் குப்தா சிரித்தபடி.

"இல்ல சார்... போன மாசம் நம் எதிரி நாட்டைப் பத்தி ஒரு முக்கியமான தகவலை ரொம்ப கஷ்டப்பட்டு சேகரிச்சுக் கொடுத்தேன். எதிரி நாட்டில இருந்த என் கான்டாக்ட் பெரிய ரிஸ்க் எடுத்து இந்தத் தகவலை எனக்கு அனுப்பி இருந்தாரு..."

"ஆமாம். அதைத்தான் நான் மேல அனுப்பி அதோட அடிப்படையில ஒரு முக்கியமான ஆபரேஷன் கூட நடந்ததே! இதை நான் உங்ககிட்ட சொல்லக் கூடாது, ஆனாலும் சொல்றேன். இதைப் பத்தி நான் உங்க பர்சனல் ஃபைல்ல கூட ரிகார்ட் பண்ணி இருக்கேன்!"

"அப்படியா? ரொம்ப நன்றி சார்!" என்றார் நரேஷ் மலர்ச்சியுடன். தொடர்ந்து, "ஆனால்..." என்றார் சற்றுத் தயக்கத்துடன்.

"ஆனால் என்ன?"

"இல்லை. என் ரிப்போர்ட்டை நீங்க உடனே ஏத்துக்கல. இன்னொரு நாட்டைச் சேர்ந்த இன்டலிஜன்ஸ் ஏஜன்சியிலிருந்த உங்க நண்பர் மூலமா இது சரியான்னு பாக்கச் சொன்னீங்க. அவரு சரின்னு உறுதிப்படுத்தினப்பறம்தான் அரசாங்கத்துக்கு அதைத் தெரிவிச்சீங்க. அதில எனக்குக் கொஞ்சம் வருத்தம் இருந்தது உண்மைதான்!" என்றார் நரேஷ்.

"நரேஷ்! உங்ககிட்ட ஒரு ஃபைலைக் காட்டப் போறேன். இது என்னோட தனிப்பட்ட ஃபைல்." என்று கூறிய குப்தா தன் இருக்கைக்கு அருகிலிருந்த ஒரு சிறிய பீரோவைத் திறந்து அதிலிருந்து ஒரு ஃபைலை எடுத்து அதில் ஒரு பக்கத்தைப் பிரித்து அதை நரேஷிடம் காட்டினார்.

அதைப் படித்துப் பார்த்த நரேஷ் மௌனமாக ஃபைலை குப்தாவிடம் திருப்பிக் கொடுத்தார்.

"ரெண்டு வருஷம் முன்னால நடந்த விஷயம் இது. நானே சேகரிச்ச விஷயம் இது. ஆனா அது ரொம்ப சென்சிடிவ் விஷயம்கறதால, அதை உறுதிப்படுத்திக்கணும்னு நினைச்சு உங்க விஷயத்தில செஞ்ச மாதிரியே இன்னொரு நாட்டு ஏஜன்சியில இருந்த என் நண்பர் மூலமா இதை உறுதிப்படுத்தச் சொன்னேன். அவர் கொடுத்த தகவல் எனக்குப் பெரிய அதிர்ச்சியா இருந்தது. எனக்குக் கிடைச்ச தகவல் கொஞ்சம் பழசு. ஆனா அதுக்கப்பறம் நிலைமை மாறிடுச்சு. இந்த உண்மை தெரியாம என் கான்டாக்ட் அதை எனக்கு அனுப்பி இருக்காரு. அவரும் பெரிய ரிஸ்க் எடுத்துத்தான் அந்தத் தகவலை அனுப்பினாரு. ஆனா அது சரியான தகவல் இல்லேன்னு அவருக்குத் தெரியாது. அதை நான் அப்படியே அரசாங்கத்துக்குத் தெரிவிச்சிருந்தா சில தவறான முடிவுகளுக்கு அது காரணமா ஆகியிருக்கும். அதனால ரொம்ப சென்சிடிவ் ஆன தகவல்களை எப்பவுமே உறுதிப்படுத்திகறது என்னோட கொள்கை. இதனால உங்க திறமையைக் குறைச்சு மதிப்பிட்டதா நீங்க நினைக்காதீங்க!" என்றார் குப்தா.

"இல்லை சார்.இப்ப புரிஞ்சுக்கிட்டேன். முதலிலேயே இதைப் புரிஞ்சுக்காதது என் தவறுதான்!" என்றார் நரேஷ் உண்மையான வருத்தத்துடன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 59
ஒற்றாடல்

குறள் 588:
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்..

பொருள்: 
ஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்த செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டு வரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்று கொள்ள வேண்டும்.
               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...