Monday, May 9, 2022

582. நண்பரே ஆனாலும்...

"என்ன மன்னரே! எப்படி இருக்கிறீர்கள்?" என்றார் நற்கீரன்.

"இத்தனை நேரம் நன்றாகத்தான் இருந்தேன்!" என்றார் அரசர் மகுடபதி.

"ஓ! மன்னிக்க வேண்டும். நான் தவறான நேரத்தில் வந்து விட்டேன் போலிருக்கிறது!" என்றார் நற்கீரன், சற்றே புண்பட்டவராக.

"அறிவற்றவனே! என் இளவயது நண்பன் என்னை மன்னரே என்று அழைத்தால் என் மனம் வருந்தாதா?" என்றார் மகுடபதி சிரித்துக் கொண்டே. நற்கீரனின் தோளில் தன் கையை அழுத்தமாகப் பதித்துத் தன் நட்பையும் வெளிப்படுத்தினார்.

"நல்லவேளை! பயந்து விட்டேன். என்னதான் நாம் இளவயது நண்பர்கள் என்றாலும், நீ அரசன், நான் ஒரு சாதாரணக் குடிமகன்தானே!"

"நட்புதான் முதலில். பணம், பதவி, சமூக நிலை எல்லாம் அதற்குக் கீழ்தான் என்று குருகுலத்தில் நம் ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததை நீ மறந்து விட்டாயா?"

"குருகுலத்தில் நான் எங்கே ஒழுங்காகக் கல்வி கற்றேன்? இந்த நாட்டு இளவரசனே எனக்கு நண்பனாகக் கிடைத்த பெருமிதத்தில் எனக்குப் படிப்பு முக்கியமாகத் தெரியவில்லை! அது இருக்கட்டும். நான் வந்த விஷயத்தைச் சொல்லி விடுகிறேன். அரசர் என் ஆருயிர் நண்பர் என்றாலும், அரசரின் நேரத்தை நான் வீணாக்கக் கூடாது அல்லவா? என் மகளுக்குத் திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. திருமண ஓலை கொடுத்து உன்னையும் அரசியாரையும் திருமணத்துக்கு அழைக்கத்தான் வந்தேன்!" என்ற நற்கீரன் சற்றுத் தள்ளியிருந்த தன் மனைவியைப் பார்க்க, அவள் தன் கையிலிருந்த திருமண ஓலை, பூக்கள், பழங்கள், சந்தனம், குங்குமம் ஆகியவை இருந்த தட்டுடன் நற்கீரன் அருகில் வந்து நிற்க, இருவரும் சேர்ந்து தட்டை மன்னரிடமும் அரசியிடமும் கொடுத்தனர்.

"மிக்க மகிழ்ச்சி நற்கீரா! நீ உன் பெண்ணுக்கு ஒரு சிறந்த கணவனைத்தான் தேர்ந்தெடுத்திருப்பாய் என்று நினைக்கிறேன்!" என்றார் அரசர் மகுடபதி.

"பெற்றோர் பார்த்துத் தங்கள் பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் நம் காலத்தோடு போய் விட்டது மகுடபதி. இப்போதெல்லாம் காதல் திருமணம்தான்!" என்றார் நற்கீரன் பெருமூச்சுடன்.

"உன் பெண் தனக்கு ஏற்ற சிறந்த கணவனைத்தான் தேர்ந்தெடுத்திருப்பாள். அப்படி இல்லாவிட்டால் நீங்கள் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்திருக்க மாட்டீர்களே!" என்றபடியே நற்கீரனின் மனைவியைப் பார்த்துச் சிரித்தார் மகுடபதி.

ற்கீரனும் அவர் மனைவியும் விடைபெற்றுச் சென்றதும், "அவர் மகள் ஒரு வணிகனைக் காதலிப்பதாகச் சில நாட்கள் முன்பே நீங்கள் என்னிடம் கூறினீர்களே! அப்புறம் ஏன் இது தெரியாதது போல் உங்கள் நண்பரிடம் பேசினீர்கள்?" என்றாள் அரசி திலகவதி.

"ஒற்றர் மூலம் கிடைத்த தகவல் இது. உன் மகளை வேவு பார்த்தேன் என்று என் நண்பனிடம் சொல்ல முடியுமா என்ன?" என்றார் அரசர் சிரித்தபடி.

"என்ன? உங்கள் நண்பர் குடும்பத்தையே ஒற்றர்கள் வேவு பார்த்தார்களா? ஏன்?" என்றாள் திலகவதி வியப்புடனும் அதிர்ச்சியுடனும்.

"திலகவதி! நம் எதிரிகள் நமக்கு நெருக்கமானவர்களிடத்தில் கூட ஊடுருவார்கள். அவ்வாறு ஊடுருவிய பின், அந்தத் தொடர்புகளைப் பயன்படுத்தி நம் ரகசியங்களை அறியவோ, நம் நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கவோ கூட முயல்வார்கள். நற்கீரனின் பெண்ணைக் காதலித்தவன் கூட அவள் மூலம் அவள் தந்தையை நெருங்கி அவர் என் நண்பர் என்பதால், அவர் மூலம் அரண்மனை ரகசியங்களைத் தெரிந்து கொள்ள முயல்பவனாக இருக்கலாம். அவன் அப்படி இல்லைதான். ஆனால் வேவு பார்த்தால்தானே எங்கே ஊடுருவல் இருக்கிறது, யார் நல்லவர், கெட்டவர் என்று தெரியும்? எனவே எல்லோரையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதுதான் ஒற்றரின் வேலை!" என்றான் அரசன்.

"கழுகுக்கு மூக்கில் வியர்ப்பது போல் நீங்கள் ஒற்றர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போதே ஒற்றர்படைத் தலைவர் உங்களைப் பார்க்க வந்து விட்டார். நான் உள்ளே போகிறேன். என்னை வேவு பார்க்கச் சொல்லி அவரிடம் சொல்ல மாட்டீர்களே!" என்று சிரித்துக் கொண்டே கூறியபடி உள்ளே சென்றாள் திலகவதி.

"வாருங்கள், ஒற்றர்படைத் தலைவரே! சொல்லுங்கள்" என்று வரவேற்றார் அரசர்.

"தாங்கள் கூறியபடி அரசியாரின் அண்ணனைக் கண்காணித்தோம். அவரைச் சந்தித்த வெளிநாட்டவர்கள் வியாபாரிகள்தான். அந்நிய நாட்டு உளவாளிகள் அல்ல என்று உறுதிப்படுத்திக் கொண்டு விட்டோம்" என்றார் ஒற்றர்படைத் தலைவர்.

"நல்லவேளை!" என்றார் அரசர் நிம்மதிப் பெருமூச்சுடன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 59
ஒற்றாடல்

குறள் 582:
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்..

பொருள்: 
எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.
               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...