Tuesday, May 3, 2022

580. பறி போன வாய்ப்பு!

தன் காலில் விழ முயன்ற முகிலனைத் தடுத்து நிறுத்தினார் முத்துசாமி.

"இதெல்லாம் அந்தக் கட்சியிலதான்ப்பா! இங்கே கிடையாது" என்று அவர் சிரித்துக் கொண்டே கூறியபோது, தான் 'அந்தக்' கட்சியிலிருந்து வந்தவன் என்பதை முத்துசாமி சொல்லிக் காட்டுகிறாரோ என்று ஒரு கணம் முகிலனுக்குத் தோன்றியது. 

ஆனால், அவர் அப்படிப்பட்ட மனிதர் அல்ல என்ற எண்ணம் உடனே மனதில் எழுந்து, அவர் யதேச்சையாகத்தான் அப்படிச் சொல்லி இருப்பார் என்று நினைத்து சமாதானமடைந்தான்.

"தலைவர் கட்டளைப்படி நான் இந்தத் தொகுதியில நிக்கறேன். முதல்ல உங்ககிட்ட வாழ்த்துப் பெறணும்னுதான் வந்தேன்" என்றான் முகிலன், கைகூப்பியபடியே.

"என் வாழ்த்து உனக்கு எப்பவுமே உண்டு. நான் உனக்காக பிரசாரம் செஞ்சு உன் வெற்றிக்கு உதவுவேன். தேர்தல் வேலைகளை ஆரம்பி!" என்றார் முத்துசாமி.

மீண்டும் ஒருமுறை அவரைப் பணிவுடன் வணங்கி விட்டு விடைபெற்றான் முகிலன்.

அருகிலிருந்து இதையெல்லாம் மௌனமாக கவனித்துக் கொண்டிருந்த முத்துசாமியின் நீண்டகால ஆதரவாளனான நாதன், முகிலன் சென்றதும், "என்னங்க இது? அக்கிரமமா இருக்கு! நீங்கதான் இந்தத் தொகுதியில நிக்கப் போறீங்க, தேர்தல்ல வெற்றி பெற்றப்பறம் அமைச்சர் ஆகப் போறீங்கன்னு எல்லாரும் நினைச்சுக்கிட்டிருக்கோம். பத்திரிகைகள்ள கூட இப்படித்தான் எழுதிக்கிட்டிருக்காங்க. தலைவர் திடீர்னு கட்சிக்குப் புதுசா வந்த இந்தப் பச்சோந்திக்கு சீட் கொடுத்திருக்காரே!" என்றான், கோபத்துடன்.

"கட்சிக்கு எது நல்லதுன்னு தலைவருக்குத் தெரியும். நான் எந்தப் பதவிக்கும் ஆசைப்பட மாட்டேன்னும் தலைவருக்கும் தெரியும்" என்றார் முத்துசாமி.

"அந்த முகிலனுக்கு ஆதரவா நீங்க பிரசாரத்துக்குப் போகாதீங்க!" என்றான் நாதன்.

"ஏன்?" என்றார் முத்துசாமி.

"இப்பதான் ஒரு விஷயம் தெரிஞ்சது. தலைவர் உங்களுக்குத்தான் சீட் கொடுக்கறதா இருந்தாராம். முகிலன்தான், நீங்க நின்னா, சில ஜாதி ஓட்டுக்கள் உங்களுக்குக் கிடைக்காதுன்னு சொல்லி, தலைவர் மனசைக் கலைச்சு, தனக்கு சீட் கொடுக்க வச்சிருக்கான்!"

"ஆமாம்!"

"அப்படின்னா, உங்களுக்கு இது முன்னாலேயே தெரியுமா?" என்றான் நாதன், அதிர்ச்சியுடன்.

"பத்திரிகைகள்ள இருக்கற சில நண்பர்கள் எனக்கு இந்தத் தகவலை முன்னாலேயே சொல்லிட்டாங்க. தலைவர் அவனுக்கு சீட் கொடுக்கறதுக்கு முன்னாலேயே, இப்படித்தான் நடக்கும்னு எனக்குத் தெரியும்!"

"பின்னே ஏன் நீங்க தலைவர்கிட்ட பேசி அவர் மனசை மாத்த முயற்சி செய்யல?"

"நான் எனக்குன்னு எதையும் கேக்கறதில்லேன்னு உனக்குத் தெரியுமே! கட்சியோ, தலைவரோ எனக்கு ஏதாவது பொறுப்போ, பதவியோ கொடுத்தா ஏத்துப்பேன். அவ்வளவுதான்!"

"இது ரொம்ப அக்கிரமம் ஐயா! அவன் உங்களோட வாய்ப்பைத் தட்டிப் பறிச்சுட்டு, உங்ககிட்டயே வந்து வாழ்த்துக் கேக்கறான். நீங்களும் அவனுக்காக பிரசாரம் பண்ணப் போறதா சொல்றீங்க! நான் சொல்றதைக் கேளுங்க. உங்களுக்கு இந்தத் தொகுதியில எல்லா ஜாதிக்காங்ககிட்டேயும் செல்வாக்கு இருக்கு. ஆனா, உங்களுக்கு சில ஜாதிக்காரங்களோட ஆதரவு இல்லேன்னு அவன் தலைவர்கிட்ட பொய்யான தகவலைச் சொல்லி, உங்க வாய்ப்பை அவன் வாங்கிக்கிட்டிருக்கான்! நீங்க அவனுக்கு பிரசாரம் பண்ணப் போகாதீங்க. நீங்க ஒதுங்கி இருந்தீங்கன்னா, உங்க ஆதரவு அவனுக்கு இல்லேன்னு புரிஞ்சுக்கிட்டு, தொகுதி மக்கள் நிறைய பேரு அவனுக்கு ஓட்டுப் போட மாட்டாங்க. அவன் தோத்தாதான், அவனுக்கு புத்தி வரும். தலைவருக்கும் அப்பதான், தான் செஞ்சது தப்புன்னு புரியும்!" என்றான் நாதன்.

"வேண்டாம், நாதன். அவன் எனக்கு எதிரா செயல்பட்டிருக்கான்னு தெரிஞ்சுதானே அவனுக்கு ஆதரவா பிரசாரம் பண்றேன்னு நான் சொன்னேன்? அவன் இயல்புப்படி அவன் நடந்துக்கிட்டிருக்கான். என் இயல்புப்படி நான் நடந்துக்கறேன். அவ்வளவுதான்!" என்றார் முத்துசாமி, அமைதியாக.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 58
கண்ணோட்டம் (இரக்கம், தயை, தாட்சண்யம்)

குறள் 580:
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.

பொருள்: 
எவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர்.

Read 'The Saboteur' the English version of this story by the same author.

               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...