Sunday, May 1, 2022

579. போதுமா இந்த தண்டனை?

தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்ட பொது மேலாளர் மாசிலாமணியின் மீதான உயர்மட்டக் குழு விசாரணை நடந்து விசாரணை அறிக்கை நிர்வாக இயக்குனர் ராகவனிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 

மாசிலாமணியின் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ராகவன் தன் பரிந்துரையை நிறுவனத் தலைவருக்கு அனுப்ப வேண்டும், அவர் இறுதி முடிவு எடுப்பார்.

"பதவியில இருக்கச்சே என்ன ஆட்டம் போட்டாரு! இப்ப அவரே மாட்டிக்கிட்டிருக்காரு. அவரைத் தூக்கி ஜெயில்ல போடணும்!" என்றான் முகுந்தன். அவன் அந்த நிறுவனத்தில் ஒரு மூத்த அதிகாரி.

"அவர் நேரடியா எந்தத் தப்பும் செய்யல! அவருக்குக் கீழே இருந்தவங்க செஞ்ச மோசடியை அவர் கவனிக்காம விட்டிருக்காரு. அது கவனக் குறைவுதானே?" என்றான் அவன் நண்பன் துரை. அவனும் ஒரு மூத்த அதிகாரிதான்.

"மத்தவங்க இது மாதிரி கவனக் குறைவால ஏதாவது தப்பு செஞ்சா அவரு என்ன சொல்லுவாரு? 'கவனக் குறைவோ, இல்ல வேணும்னே செஞ்சியோ யாருக்குத் தெரியும்? செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவிச்சுத்தானே ஆகணும்?' அப்படின்னு சொல்லி தண்டனை கொடுப்பாரு இல்ல? ஏன், உனக்கும், எனக்கும் கூட இது நடந்திருக்கே! டைப் பண்ணின கடிதத்தில இருக்கிற எழுத்துப் பிழையைத் திருத்தாம விட்டாக் கூட நாம ஏதோ பெரிய குற்றம் செஞ்சுட்ட மாதிரி கண்டபடி பேசி அவமானப்படுத்துவாரே!"

"உண்மைதான! சின்ன தப்புன்னா கூட வேற டிபார்ட்மென்ட்டுக்கு மாத்தறது, நம்ம பர்சனல் ஃபைல்ல நம்மைப் பற்றி திறமைக் குறைவானவர்னு எழுதறதுன்னு ஆரம்பிச்சு, இன்கிரிமென்ட்டோ, பதவி உயர்வோ கிடைக்காம போற அளவுக்கு எவ்வளவோ செஞ்சிருக்காரு. கொஞ்சம் பெரிய தப்பா இருந்தா, அவங்க தெரியாம செஞ்சிருந்தா கூட, அவங்க மேல கொஞ்சம் கூட இரக்கம் காட்டாம அவங்களை வேற ஊருக்கு மாத்தறது, சஸ்பெண்ட் பண்றது, பதவி இறக்கம் செய்யறதுன்னு கடுமையான தண்டனையெல்லாம் கொடுத்திருக்காரு. இப்ப அவருக்கு என்ன தண்டனை கிடைக்குதுன்னு பாக்கலாம்!"

"என்ன மிஸ்டர் ராகவன்! இவ்வளவு பெரிய தப்பு நடந்திருக்கு. மாசிலாமணியை மறுபடியும் வேலையில எடுத்துக்கலாம்னு ரெகமண்ட் பண்ணி இருக்கீங்க?" என்றார் நிறுவனத்தின் தலைவர் கனகலிங்கம்.

"அவர் கவனக் குறைவா மட்டும்தான் இருந்திருக்காரு. இன்ஸ்பெக்‌ஷன்போதுதான் மோசடியைக் கண்டுபிடிச்சிருக்காங்க. மோசடியில ஈடுபட்டவங்களை போலீஸ்ல ஒப்படைச்சாச்சு. பதவி நீக்கம் செஞ்சு அவங்ககிட்டேந்து பணத்தையும் ரெகவர் பண்ணிட்டோம். மாசிலாமணி தெரிஞ்சே எந்தத் தப்பும் செய்யல. அவர் இன்னும் ரெண்டு வருஷத்தில ஓய்வு பெறப் போறாரு. அவரோட அதிகாரங்களைக் குறைச்சு அவருக்கு மறுபடி அந்தப் பதவியைக் கொடுத்துடலாம். இன்னொரு ஜெனரால் மானேஜரைப் போட்டு அவருக்கு எல்லா அதிகாரங்களையும் கொடுத்துடலாம். அதிகாரம் எல்லாம் போய் ஒரு டம்மியா இருக்கறதே மாசிலாமணிக்குப் போதுமான தண்டனைதான்!" என்றார் ராகவன்.

"மாசிலாமணி மத்தவங்க விஷயத்தில ஈவு இரக்கம் இல்லாம நடந்துக்கிட்டிருக்காரு. சின்ன தப்புக்கெல்லாம் பெரிய தண்டனை கொடுத்திருக்காரு. சில பேர் விஷயத்தில நீங்களே தலையிட்டு அவர் கொடுத்த தண்டனையை ரத்து செஞ்சிருக்கீங்க, இல்லேன்னா குறைச்சிருக்கீங்க. அப்படிப்பட்டவருக்கு இவ்வளவு இரக்கம் காட்டறீங்களே!" என்றார் கனகலிங்கம்.

"சார்! என்னைப் பொருத்தவரை மத்தவங்க விஷயத்தில எப்படி நடந்துக்கிட்டிருக்கேனோ, அதே மாதிரிதான். மாசிலாமணி விஷயத்தில நடந்துக்கறேன். ஒத்தர் தெரியாம தப்பு செஞ்சிருந்தா அவங்களுக்கு இரக்கம் காட்டணுங்கறதுதான் என்னோட அணுகுமுறை. மாசிலாமணி மத்தவங்களுக்கு இரக்கம் காட்டலைங்கறதுக்காக நான் அவருக்கு இரக்கம் காட்டலேன்னா நான் எப்படி நடந்துக்கணுங்கறதை அவர்  தீர்மானிக்கறார்னு அர்த்தம்! அதை நான் எப்படி அனுமதிக்க முடியும்?" என்றார் ராகவன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 58
கண்ணோட்டம் (இரக்கம், தயை, தாட்சண்யம்)

குறள் 579:
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.

பொருள்: 
பிறரை தண்டிக்கும் இயல்பு உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து (அவர் செய்த குற்றத்தைப்) பொறுத்துக் காக்கும் பண்பே சிறந்தது.
               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...