Friday, April 22, 2022

571. கருணை மனுக்கள்

அதிபர் ராம்தயாளை உள்துறைச் செயலர் கிருஷ்ண பிரசாத் சந்திக்கச் சென்றபோது அதிபர் ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்.

கிருஷ்ண பிரசாத் உள்ளே நுழைந்ததும் தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்த ராம் தயாள், கிருஷ்ண பிரசாதை அமரச் சொல்லி விட்டு அவர் கூறப் போவதைக் கேட்கத் தயாரானார்.

மாதம் ஒருமுறை நாட்டின் சட்ட ஒழுங்கு நிலை பற்றி உள்துறைச் செயலர் அதிபருக்குத் தெரிவிக்கும் வழிமுறை இருந்தது.

தன் கையிலிருந்த அறிக்கையைப் பார்த்து அதன் முக்கியமான அம்சங்களை அதிபரிடம் விளக்கி விட்டு அறிக்கையை அவரிடம் கொடுத்தார் கிருஷ்ண பிரசாத்.

கிருஷ்ண பிரசாத் தன்னிடம் ஏதோ சொல்ல விரும்பி ஆனால் அதைச் சொல்லத் தயக்கத்துடன் இருப்பதை கவனித்த ராம்தயாள் "சொல்லுங்க கிருஷ்ண பிரசாத்!" என்றார்.

"சார்! தண்டனை பெற்ற குற்றவாளிகள் தங்களோட தண்டனையைக் குறைக்கச் சொல்லி, அல்லது தங்களை விடுதலை செய்யச் சொல்லி கேட்கிற கருணை மனுக்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கிட்டே இருக்கு!" என்றார் கிருஷ்ண பிரசாத்.

"ஆமாம். நானும் கவனிச்சேன்."

"இந்தக் கருணை மனுக்கள் விஷயத்தில நாம ரொம்ப தாராள மனப்பான்மையோட இருக்கோம்னு எனக்குத் தோணுது!"

"புரியுது. பெரும்பாலான மனுக்களை நிராகரிக்கணும்னு குறிப்பு எழுதித்தான் நீங்க எங்கிட்ட அனுப்பறீங்க. ஆனா நான் உங்க சிபாரிசை மீறி நிறைய மனுக்களை ஏத்துக்கறேன். அதுதானே?" என்றார் அதிபர் சிரித்துக்கொண்டே.

"சார்! என்னோட, அதாவது என் துறை அதிகாரிகளோட சிபாரிசை நீங்க ஏத்துக்கணும்னு நான் சொல்ல வரல. முடிவு எடுக்கற அதிகாரம் உங்களோடதுதான். ஆனா குற்றம் செஞ்சு தண்டனை கொடுக்கப்பட்டவங்கள்ள நிறைய பேருக்குக் கருணை காட்டினா அது குற்றம் செய்ய நினைக்கறவங்களுக்கு தைரியத்தைக் கொடுக்காதா? தண்டனை கொடுக்கறதோட ஒரு நோக்கம் குற்றம் செஞ்சவங்களை தண்டிக்கறதா இருந்தாலும், குற்றம் செய்ய நினைக்கிறவங்களுக்கு எச்சரிக்கையாகவும், பயமாகவும் இருக்கணுங்கற நோக்கமும் இருக்கே! அந்த நோக்கம் பலவீனப்படக் கூடாது இல்ல?" என்றார் கிருஷ்ண பிரசாத்.

"உண்மைதான்! அதனாலதான் மனுக்களைப் பரிசீலனை செஞ்சு முடிவெடுக்கறோம். நீங்க பாக்கறதை விட நான் கொஞ்சம் இன்னும் அதிகக் கருணையோட பாக்கறேன். அவ்வளவுதான் வித்தியாசம்! ஒத்தருக்கு பத்து வருஷம் சிறை தண்டனை கொடுக்கறோம். அஞ்சு வருஷம் ஆனதும் அவரு கருணை அடிப்படையில விடுதலை செய்யச் சொல்லி மனுக் கொடுக்கறாரு. குற்றம் கடுமையானது, அதானால அவருக்கு அஞ்சு வருஷம் தண்டனை போதாதுன்னு நீங்க நினைக்கலாம். அஞ்சு வருஷம் தண்டனை அனுபவிச்சுட்டாரே, அது போதாதான்னு நான் நினைக்கறேன். அவரை விடுதலை செய்யறதால அவரு மறுபடியும் குற்றம் செய்யணும்னு அவசியம் இல்லையே! அப்படி செஞ்சு மாட்டிக்கிட்டா தண்டனை இன்னும் கடுமையா இருக்கும்னு அவருக்குத் தெரியாதா? இதையெல்லாம் பார்த்து, தண்டனை பெற்றவரோட குடும்ப சூழ்நிலையையும் பார்த்து சில பேருக்கு நான் கருணை காட்டறேன்."

உள்துறைச் செயலர் மௌனமாக இருந்தார்.

"கிருஷ்ண பிரசாத்! உலகத்தில எவ்வளவு தப்புகள் நடந்தாலும் உலகம் ஏதோ ஒரு ஒழுங்குக்குக் கட்டுப்பட்டு நடந்துக்கிட்டிருக்குன்னா அதுக்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க?" என்றார் ராம்தயாள்.

"என்னைக் கேட்டா, சட்டதிட்டங்கள் இருக்கறதாலதான் ஒழுங்கு இருக்குன்னு சொல்லுவேன், சட்டதிட்டங்கள் இல்லேன்னா குழப்பம்தான் இருக்கும்!" என்றார் கிருஷ்ண பிரசாத்.

"நீங்க சொல்றது சரிதான். ஆனா இது நாணயத்தோட ஒரு பக்கம்தான். இன்னொரு பக்கம் கருணை அல்லது அன்பு. நெருக்கமானவங்க கிட்ட காட்டறதை அன்புன்னு சொல்லலாம். ஆனா உலகத்தில பல பேருக்கு மத்தவங்க மேல ஒரு கருணை இருக்கு. அதனாலதான் மத்தவங்களோட துன்பம் நமக்கு வருத்தத்தைக் கொடுக்குது. அதனாலதான் முகம் தெரியாத அனாதைக் குழந்தைகளுக்கும், இன்னும் கஷ்டப்படற பலருக்கும் பல பேர் உதவி செய்யறாங்க. ஒரு நாட்டில தலைமைப் பொறுப்புல இருக்கறவங்களுக்கு கருணை கொஞ்சம் அதிகமாவே இருக்கணும்னு நான் நினைக்கிறேன்."

"சரி சார்!" என்றார் கிருஷ்ண பிரசாத்.

"நான் சொல்றதை நீங்க முழுசா ஏத்துக்கலேன்னு நினைக்கறேன். நீங்க கடவுள் நம்பிக்கை உள்ளவர்தானே?" 

"ஆமாம். கடவுள் கருணையானவர்தான். ஆனா..."

"கடவுள் கருணையானவர் இல்ல, கிருஷ்ண பிரசாத்!" என்றார் ராம்தயாள்.

"என்ன சார் சொல்றீங்க?" 

அதிபர் தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை எடுத்து கிருஷ்ண பிரசாதிடம் காட்டினார்.

"இது தயா சதகம் என்கிற புத்தகம், வேதாந்த தேசிகர்ங்கற வைஷ்ணவ குரு எழுதினது. இது திருப்பதி வெங்கடாசலபதியைப் பத்தி 108 சுலோகங்கள் கொண்டது. இதில வெங்கடாசலபதிக்கு தயைன்னு ஒரு மனைவி இருக்கறதா அவர் சொல்றாரு. மனிதர்கள் தப்பு செய்யும்போது வெங்கடாசலபதி அவங்களை தண்டிக்கறப்ப, இந்த தயாதேவி தன்னோட கருணையினால அவங்களைக் காப்பாத்தறாங்களாம். தயான்னா கருணைதானே!"

"நீங்க சொல்றது சுவாரசியமா இருக்கு சார்!"

"நல்ல வேளை எனக்கு இயல்பாகவே கருணை இருக்கு, இல்லேன்னா நான் கூட தயை உள்ள ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்க வேண்டி இருக்கும். நான் இப்படிச் சொன்னேன்னு என் மனைவி கிட்ட சொல்லிடாதீங்க. அப்புறம் அவங்க என் மேல கொஞ்சம் கூடக் கருணை காட்ட மாட்டாங்க!" என்றார் ராம்தயாள் சிரித்தபடியே.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 58
கண்ணோட்டம் (இரக்கம், தயை, தாட்சண்யம்)

குறள் 571:
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.

பொருள்: 
கண்ணோட்டம் (கருணை) என்று சொல்லப்படும் மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது..
               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...