Tuesday, April 12, 2022

568. தயாளனின் கோபம்!

தன் நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் மூவரையும் தன் அறைக்கு அழைத்தார் நிர்வாக இயக்குனர் தயாளன். .

"ரெண்டு வருஷமா நம்ம லாபம் குறைஞ்சுக்கிட்டே வருது. இதைப் பத்தி சண்முகசுந்தரம் நேத்திக்குத்தான் எங்கிட்ட சொன்னாரு. ரெண்டு வருஷமா என்ன பண்ணிக்கிட்டிருந்தார்னு தெரியல..." என்று தயாளன் ஆரம்பித்தபோது, "சார்! நான் ஏற்கெனவே உங்ககிட்ட..." என்று ஆரம்பித்த அக்கவுண்ட்ஸ் மானேஜர் சண்முகசுந்தரத்தை இடைமறித்தார் தயாளன்.

"குறுக்கே பேசாதீங்க. ஏற்கெனவே எங்கிட்ட சொல்லி இருக்கிறதா சொல்லி நீங்க பொறுப்பிலேந்து தப்பிக்க முடியாது. செல்வம்! நீங்கதான் சேல்ஸ் மானேஜர். இதுக்கு என்ன பதில் சொல்லப்போறீங்க?"

"சார்! லாபம் வராத ஆர்டர்களை எடுக்க வேண்டாம்னு நான் சொன்னேன். ஆனா நீங்க உங்க நண்பரோட நிறுவனத்துக்குக் குறைஞ்ச விலைக்கு சப்ளை பண்ணச் சொன்னீங்க. அவங்ககிட்டேந்து பணம் கூட முழுசா வரலை!" என்றார் சேல்ஸ் மானேஜர் செல்வம் சற்றுத் தயக்கத்துடன்.

"செல்வம்! இது என்னோட கம்பெனி. நான் யாருக்கு வேணும்னா கொடுப்பேன், என்ன விலைக்கு வேணும்னா கொடுப்பேன், அதைக் கேக்க நீங்க யாரு?" என்றார் தயாளன் கோபத்துடன்.

"அதில்ல சார்! லாபம் குறைஞ்சுடுச்சுன்னு நீங்க கேட்டதால சொன்னேன்" என்றார் செல்வம் மன்னிப்புக் கேட்கும் குரலில்.

"உங்க எல்லோருக்கும் சொல்றேன். இது என் கம்பெனி. நான் எனக்குத் தோணினதைச் செய்வேன். உங்ககிட்ட கலந்தாலோசிக்கணுங்கற அவசியம் எனக்கு இல்ல. ஆனா உங்களை நிச்சயமா கேள்வி கேட்பேன். நீங்க பொறுப்பிலேந்து தப்பிக்க முடியாது. இப்ப எல்லாரும் எழுந்து வெளியில போங்க!" என்றார் தயாளன் கோபம் குறையாமல்.

மூவரும் தயாளன் அறையிலிருந்து வெளியில் வந்ததும், மற்ற இருவரையும் ஒரு ஓரமாக அழைத்துச் சென்ற சண்முகசுந்தரம், "ஒரு விஷயம் சொல்றேன்.ரெண்டு வருஷமா லாபம் குறைஞ்சுக்கிட்டே வந்தது. இந்த வருஷம் நிச்சயமா நஷ்டம்தான் வரும். வரவு செலவுகளைப் பாக்கறப்ப எனக்கு அப்படித்தான் தெரியுது. அவரு நம்மகிட்ட எதையும் கேக்க மாட்டாரு, நாம ஏதாவது சொன்னாலும், கோபமாக் கத்துவாரே தவிர, நாம சொல்ற விஷயத்தைக் கேட்டுக்க மாட்டாரு. அவரா ஏதாவது செய்வாரு, ஆனா நாமதான் பொறுப்புன்னு சொல்லுவாரு! இப்படியே போனா கம்பெனியால தாக்குப் பிடிக்க முடியாது. அடுத்த வருஷம் கம்பெனி இருக்குமாங்கறதே சந்தேகம்தான். நாம வேற வேலை பாத்துக்கிட்டுப் போறதுதான் நல்லது" என்றார் ரகசியமாக.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 57
வெருவந்த செய்யாமை (மக்கள் அஞ்சம் செயல்களைச் செய்யாமை)

குறள் 568:
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு..

பொருள்: 
அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து பேசி சிந்தித்துச் செயல்படாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்.
அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...