Monday, April 4, 2022

566. தடுப்புச் சுவர்

"சார்! கிராமத்துக்காரங்க உங்களைப் பாக்க வந்திருக்காங்க!" என்றார் தொழிலதிபர் செல்லையாவின் உதவியளர் ஜீவா.

"என்னை எதுக்கு அவங்க பாக்கணும்? அதான் ஜி எம்மைப் பாத்துப் பேசிட்டாங்களே!" என்றார் செல்லையா கடுகடுப்புடன்.

"அவர்கிட்ட பேசினதில அவங்களுக்குத் திருப்தி இல்லையாம். உங்களைப் பாக்காம போக மாட்டோம்னு தொழிற்சாலை கேட் வாசல்ல உக்காந்துக்கிட்டுப் போராட்டம் பண்றாங்க.

"பிச்சைக்காரப் பசங்க! தலைவர் சொன்ன மாதிரி நாட்டில போராட்டம் பண்ணியே பிழைப்பு நடத்தறவங்களோட எண்ணிக்கை அதிகம் ஆகிக்கிட்டே இருக்கு. சரி. அவங்க தலைவனை வரச்சொல்லு. எங்கிட்ட வாங்கிக் கட்டிக்கிட்டாத்தான் அவனுக்கு சோறு இறங்கும்னா அப்படியே நடக்கட்டும்!"  என்றார் செல்லையா.

ந்து கிராமவாசிகள் செல்லையாவின் அறைக்குள் நுழைய அவர்களுடன் கலவரமடைந்த முகத்துடன் ஜீவாவும் உள்ளே நுழைந்தார். உள்ளே வந்த ஐந்து பேரில் ஒரு பெண்ணும் இருந்தாள்.

"ஒத்தரைத்தானே வரச் சொன்னேன்! எதுக்கு அஞ்சாறு பேர் உள்ள வரீங்க?" என்றார் செல்லையா சீற்றத்துடன்.

"ஒரு ஆளா வந்து பேச முடியாது ஐயா. கிராமம் முழுக்க பாதிக்கப்பட்டிருக்கு. எல்லோரும் உள்ளே வந்து உங்ககிட்ட பேசணும்னு துடிக்கிறாங்க. நாங்கதான் அவங்களைக் கட்டுப்படுத்திட்டு ஒரு அஞ்சு பேர் வந்திருக்கோம்" என்றார் உள்ளே வந்த ஐந்து பேரில் ஒருவர்.

"என்ன வேணும் உங்களுக்கு?" என்றார் செல்லையா கோபம் குறையாத தொனியில்.

"ஏற்கெனவே உங்க தொழிற்சாலைக்காக ஆத்திலேந்து தண்ணி எடுத்துக்கறதுக்காகக் கால்வாய் வெட்டி இருக்கீங்க. நாங்க அதை எதிர்த்தே போராடிக்கிட்டிருக்கோம். இப்ப என்னன்னா எங்க கிராமத்திலேந்து ஆத்துக்குப் போற பாதையை அடைச்சு ஒரு தடுப்புச் சுவர் எழுப்பி இருக்கீங்க.நாங்க எப்படி ஆத்துக்குப் போறது?"

"ஆத்துக்கு ஏன் போறீங்க? ஊருக்குள்ள குளம் இருக்குல்ல?"

"நாங்க குளிக்கிறது, குடிக்கிறது, பாசனத்துக்குத் தண்ணி எடுக்கறது எல்லாமே இந்த ஆத்துத் தண்ணியைத்தான். இப்ப ஆத்துக்குப் போக நாங்க அஞ்சு மைல் நடக்கணும். எங்க ஊருல வந்து நாங்க ஆத்துக்குப் போற பாதையை அடைக்கிற மாதிரி சுவர் கட்டி இருக்கீங்களே இது அக்கிரமம் இல்லையா?"

"இந்த ஆத்துத் தண்ணியை நம்பிதான் இங்கே தொழிற்சாலை அமைச்சிருக்கோம். எங்களுக்கு அரசாங்கத்தோட ஆதரவு இருக்கு. தொழிற்சாலை ஆரம்பிச்சப்பறம் கழிவுத் தண்ணியை ஆத்திலதான் விடுவோம். அதனால உங்களால ஆத்துத் தண்ணியை எப்படியும் பயன்படுத்த முடியாது. ஊருக்குள்ள குளம் இருக்கு. அந்தத் தண்ணி பத்தாதுன்னா, கிணறுகள் வெட்டிக்கங்க. மறுபடி இங்கே வராதீங்க. ஊரில ஏதாவது திருவிழா மாதிரி விசேஷம்னா தொழிற்சாலை மானேஜர் கிட்ட கேட்டீங்கன்னா ஆயிரம் ரெண்டாயிரம் கொடுப்பாரு. இன்னொரு தடவை என்னைப் பாக்க வந்து என் நேரத்தை வீணாக்காதீங்க!" என்றார் செல்லையா கடுமையாக.

"கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாம பேசறீங்க. உங்க்கிட்ட பணம் இருக்குங்கற திமிர்தானே! அதெல்லாம் அழிஞ்சு போயிடும். நாங்க பாக்கத்தானே போறோம்!" என்றாள் ஐந்து பேரில் ஒருவரான அந்தப் பெண் அடக்க முடியாத கோபத்துடன்.

"ஜீவா! எங்க போயிட்ட? செக்யூரிட்டியைக் கூப்பிட்டு இவங்களை வெளியில தள்ளச் சொல்லு!" என்று கத்தினார் செல்லையா.

டுப்புச் சுவர் இடிக்கப்பட வேண்டுமென்று கிராமவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தில் வழக்குப் போட்டனர். கீழ்நீதி மன்றமும் உயர்நீதி மன்றமும்  தொழிற்சாலைக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தன.  

அரசாங்கமும் தொழிற்சாலைக்கு ஆதரவாக இருந்தது. "இப்படி எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் நாட்டில் எந்த வளர்ச்சியும் ஏற்படாது" என்று ஒரு அமைச்சர் கூறினார்.

ரண்டு வருடங்களுக்குப் பிறகு வந்த தேர்தலில் வேறொரு கட்சி ஆட்சிக்கு வந்ததும், கிராம மக்களுக்கு இடையூறாகக் கட்டப்பட்ட சுற்றுச் சுவர் இடிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. நீதிமன்றம் அந்த உத்தரவுக்குத் தடை பிறப்பிக்க மறுத்து விட்டதால் சுவர் இடிக்கப்பட்டது.

செல்லையா தன் வேறு தொழில்களுக்காக வாங்கிய கடன் தொகை கட்டப்படாததால் சில வங்கிகள் அவருடைய சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கையைத் தொடங்கின. 

செல்லையா வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முயற்சி செய்வார் என்ற சந்தேகத்தால் அரசாங்கம் விரைவாகச் செயல்பட்டு செல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்கியது.

சீட்டுக்கட்டு அடுக்கிலிருந்து ஒரு சீட்டு விழுந்தால் அதைத் தொடர்ந்து எல்லா சீட்டுக்களும் சரிவது போல் செல்லையாவின் எல்லா நிறுவனங்களும் சரியத் தொடங்கின. அவருடைய வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. 

செல்லையா விரைவிலேயே கைது செய்யப்படுவார் என்றும் பல மாதங்களுக்கு அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் ஊடகங்கள் கருத்துத் தெரிவித்தன.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 57
வெருவந்த செய்யாமை (மக்கள் அஞ்சம் செயல்களைச் செய்யாமை)

குறள் 566:
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.

பொருள்: 
கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் (முக தாட்சண்யம்) இல்லாதவனாய் உள்ளவனுடைய பெருஞ்செல்வம் நிலைத்து நிற்காமல் விரைவிலேயே கெடும்.
அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...