Monday, November 22, 2021

531. அம்மாவின் கடிதம்!

முரளி படிப்பை முடித்து வேலையில் சேர்ந்த ஒரு வாரத்தில். அவன் தந்தை இறந்து விட்டார்.

முரளிக்கும், அவன் தாய் சகுந்தலாவுக்கும், அது பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

"உன்னை நல்லா படிக்க வச்சுப் பெரிய ஆளாக்கணுங்கறதுக்காக, உன் அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டாரு! இப்ப நீ முதல் மாசச் சம்பளம் வாங்கறதைக் கூடப் பாக்காம, போய்ச் சேர்ந்துட்டாரே!" என்று புலம்பினாள் சகுந்தலை.

ஒரு மாதப் பயிற்சிக்குப் பிறகு, முரளிக்கு நாக்பூரில் வேலை வழங்கப்பட்டது.

சகுந்தலா கிராமத்தை விட்டு வர விரும்பாததால், முரளி மட்டும் நாக்பூருக்குச் சென்றான். 

முரளி நாக்பூருக்குக் கிளம்புவதற்கு முன், "முரளி! உன் படிப்புக்காக, உன் அப்பா அவரோட நண்பர் காசிகிட்ட பத்தாயிரம் ரூபா கடன் வாங்கி இருக்காரு. வட்டி கிடையாது. நீ வேலைக்குப் போனதும், உன் சம்பளத்திலேந்து கொஞ்சம் கொஞ்சமா கடனை அடைக்கறதா பேச்சு. இது மாதிரி எல்லாம் யாரும் கடன் கொடுக்க மாட்டாங்க. காசி ரொம்ப நல்லவர். உன் அப்பா மேல அவருக்கு ரொம்ப மதிப்பு உண்டு. அதனாலதான், கடன் கொடுத்தாரு. அப்பாவும் யார்கிட்டேயும் போய்க் கடன் கேக்கறவர் இல்ல. காசிகிட்ட கூட வட்டிக்குத்தான் கடன் கேட்டாரு. அவர்தான் வட்டி வேண்டாம்னுட்டாரு. காசி நல்லவர்னாலும், கோபக்காரர். அதனால, நீ மாசம் ஆயிரம் ரூபாய் அவருக்கு பாங்க்ல டி.டி எடுத்து அனுப்பிடு" என்றாள் சகுந்தலா.

"நிச்சயமா!" என்றான் முரளி.

முதல் மாதச் சம்பளம் வாங்கியதும், முரளி சகுந்தலாவுக்கு இருநூறு ரூபாய் மணி ஆர்டர் அனுப்பினான்.

"உன் முதல் மாதச் சம்பளத்தில், எனக்கு இருநூறு ரூபாய் அனுப்பியது மகிழ்ச்சியாக இருக்கிறது. காசிக்குப் பணம் அனுப்பி இருப்பாய் என்று நினைக்கிறேன்" என்று பதில் எழுதி இருந்தாள் சகுந்தலா.

கடிதத்தைப் படித்ததும், முரளிக்குக் கோபம் வந்தது.

'இப்பதான் சம்பாதிக்க ஆரம்பிச்சிருக்கேன். மகன் கொஞ்ச நாளைக்கு இஷ்டப்படி செலவழிச்சு சந்தோஷமா இருக்கட்டுமே என்கிற எண்ணம் இல்லாம, இப்படி தொந்தரவு பண்றாங்களே! வட்டி இல்லாக் கடன்தானே! கொஞ்சம் முன்னே பின்னே கொடுத்தால் என்ன?' என்று நினைத்துக் கொண்ட முரளி, 'காசிக்கு அடுத்த மாதத்திலிருந்து பணம் அனுப்பி விடுகிறேன். நீ மறுபடி இது பற்றி எழுத வேண்டாம்!" என்று சற்றுக் கோபமாகவே பதில் எழுதினான்.

அடுத்த மாதமும், முரளி காசிக்குப் பணம் அனுப்பவில்லை. நண்பர்களுடன் உல்லாசமாகச் சுற்றியது, விலை உயர்ந்த உடைகள் வாங்கியது போன்ற செலவுகளால் சம்பளப் பணம் காலியாகி விட்டது.. அடுத்த மாதம் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டான்.

உல்லாச வாழ்க்கையும், அதிகச் செலவுகளும் தொடர்ந்ததால், அதற்கு அடுத்த மாதத்தில், காசிக்குப் பணம் அனுப்ப வேண்டும் என்ற சிந்தனையே அவனுக்கு எழவில்லை. அடுத்து வந்த சில மாதங்களில், அவன் அது பற்றி மறந்தே போனான். அவனுடைய சற்றே கடுமையான கடிதத்துக்குப் பிறகு, சகுந்தலாவும் அவனுக்கு எழுதிய கடிதங்களில், இது பற்றி எழுதவில்லை.

ழெட்டு மாதங்களுக்குப் பிறகு, முரளிக்கு அவன் தாயிடமிருந்து வந்த கடிதத்தில், இவ்வாறு இருந்தது.

"...காசிக்குப் பணம் அனுப்புவது பற்றி நான் உனக்கு எழுத வேண்டாம் என்று நீ எழுதியதால், அப்புறம், உனக்கு நான் இது பற்றி எழுதவில்லை. நீ அவருக்குப் பணம் அனுப்பிக் கொண்டிருப்பாய் என்று நினைத்தேன். ஆனால், நேற்று காசி நம் வீட்டுக்கு வந்து கோபமாகப் பேசிய பிறகுதான், நீ அவருக்குப் பணம் அனுப்பவில்லை என்று தெரிந்தது. நீ எனக்கு அனுப்பியிருந்த பணத்தில் நான் சேர்த்து வைத்திருந்த ஐநூறு ரூபாயை அவரிடம் கொடுத்து, மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.

"அவர் நம் வீட்டுக்கு வந்து கோபமாகப் பேசியது எனக்கு அவமானமாகத்தான் இருந்தது. அவர் இரைந்து பேசியது அக்கம்பக்கத்தாருக்குக் கூடக் கேட்டிருக்கும். ஆனால், நீ அவர் கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய கடமையையே மறந்து அலட்சியமாக இருந்தது எனக்கு அவமானமாக இருக்கும் அளவுக்கு, அவர் கோபத்தில் பேசிய வார்த்தைகள் அவமானமாக இல்லை."

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 54
 பொச்சாவாமை (அலட்சியத்தால் ஏற்படும் மறதி)

குறள் 531:
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.

பொருள்:
பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும்போது, மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.

Read 'The Letter From Mother' the English version of this story by the same author. 

 அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...