Tuesday, November 23, 2021

532. யார் அவர்?

பரத் எஞ்ஜினியரிங் படிப்பு முடித்துப் பல மாதங்கள் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை.

அப்போது ஒருநாள் அவன் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பத்மநாபன் அவனைப் பார்க்க வந்தான்.

பத்மநாபன் ஒரு தொழிற்சாலையில் மெஷின் ஆபரேட்டராக வேலை செய்கிறான் என்பது மட்டும்தான் பரத்துக்குத் தெரியும். அவன் பரத்தை விட ஐந்தாறு வருடங்கள் பெரியவனாக இருப்பான்.

"என்ன பரத் உனக்கு ஏதாவது வேலை கிடைச்சிருக்கா?" என்றான் பத்மநாபன்.

"இல்லை" என்றான் பரத் எரிச்சலுடன், இவன் எதற்கு தன்னிடம் இதைப் பற்றிப் பேசுகிறான் என்று நினைத்தபடியே.

"நான் வேலை செய்யறது ஒரு சின்ன கம்பெனிதான். ஆனா, எங்க முதலாளி புதுசா ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்கப் போறாரு. அதுக்கு எஞ்ஜினியர் எல்லாம் எடுக்கப் போறதாச் சொன்னாரு. அவர்கிட்ட உன்னைப் பத்தி சொன்னேன். வரச் சொல்லு பாக்கலாம்னாரு. நாளைக்கு நான் வேலைக்குப் போகறப்ப என்னோட வந்தேன்னா உன்னை அவர்கிட்ட அறிமுகப்படுத்தி வைக்கறேன்" என்றான்.

பரத் ஒரு நிமிடம் பேச்சு வராதவனாக பத்மநாபனைப் பார்த்தான். பிறகு, "ஓ, ரொம்ப நன்றி அண்ணே!" என்றான்.

அடுத்த நாள் பத்மநாபன் தன் முதலாளிக்கு பரத்தை அறிமுகப்படுத்திய சில நிமிடங்களிலேயே பரத்துக்கு வேலை கிடைத்து விட்டது.

"மிஸ்டர் பரத்! இன்னிக்கு நீங்க ஒரு சிறந்த தொழிலதிபரா இருக்கீங்க. நிறைய அவார்ட் எல்லாம் வாங்கி இருக்கீங்க. உங்களைப் பத்தி ஊடகங்கள்ள நிறைய செய்தி வருது. அடுத்தாப்பல நீங்க என்ன செய்யப் போறீங்கன்னு தொழில் உலகமே உங்களைப் பாத்துக்கிட்டிருக்கு. நீங்க எப்படி ஃபீல் பண்றீங்க?" என்றார் தொலைக்காட்சியில் அவருடன் உரையாடிய நெறியாளர்.

"ரொம்ப சந்தோஷமா இருக்கு!" என்ற பரத், இது போதுமான பதிலாக இருக்காதோ என்று நினைத்து, "நான் போக வேண்டிய பாதை இன்னும் ரொம்ப தூரம் இருக்கு!" என்றான், இது கொஞ்சம் அடக்கமான பதிலாக இருக்கும் என்று நினைத்து!

"மிஸ்டர் ராமநாதனை உங்களுக்கு நினைவு இருக்கா?" என்றார் நெறியாளர்.

"அவரை எப்படி மறக்க முடியும்? அவர்தான் எனக்கு முதல்ல வேலை கொடுத்தவர். அவர் போட்ட விதைதான் இன்னிக்கு இவ்வளவு பெரிய மரமா வளர்ந்திருக்கு." 

"பத்மநாபனை நீங்க அடிக்கடி சந்திக்கறதுண்டா?"

"யார் பத்மநாபன்?"

"அதுக்கு பதில் சொல்றதுக்கு முன்னால, ஒரு விஷயம் சொல்றேன். உங்களை பேட்டி காண்றதுக்கு முன்னால உங்களுக்கு முதல்ல வேலை கொடுத்த ராமநாதன் சார் கிட்ட உங்களைப் பத்திக் கேட்டோம். அவர் சொன்னதில ஒரு விஷயத்தை இப்ப நாங்க போட்டு காட்டப் போறோம்" என்றார் நெறியாளர்.

அங்கிருந்த திரையில் ஒரு காணொளி காட்டப்பட்டது. அதில் தோன்றிய ஒரு முதியவர், "பரத்தோட வளர்ச்சியைப் பார்க்க எனக்குப் பெருமையா இருக்கு. முப்பது வருஷம் முன்னால, என் தொழிற்சாலையில வேலை பார்த்த பத்மநாபன்கற தொழிலாளி எங்கிட்ட வந்து, 'சார்! என் பக்கத்து வீட்டில ஒரு பையன் எஞ்ஜினியரிங் படிச்சுட்டு வேலை தேடிக்கிட்டிருக்கான். நீங்க புதுசா ஆரம்பிக்கப் போற தொழிற்சாலையில அவனுக்கு வேலை கொடுக்க முடியமா'ன்னு கேட்டப்ப வரச் சொல்லுன்னு சொன்னேன். ஒரு சிறந்த வருங்காலத் தொழிலதிபருக்கு முதல் வேலை கொடுக்கப் போறேன்னு அப்ப எனக்குத் தெரியாது..."

காணொளி நிறுத்தப்பட்டு திரை கருப்பாகியது.

பரத் உறைந்து போனவனாக உட்கார்ந்திருந்தான். 'எப்படி பத்மநாபன் யாரென்று சட்டென்று நினைவு வராமல் போயிற்று?'

"இப்ப ஞாபகம் வருதா?" என்றார் நெறியாளர். இலேசாகச் சிரித்தபடி.

 'வெற்றிச் சிரிப்பு சிரிக்கிறார் போலும்!'

பரத் மௌனமாகத் தலையாட்டினான். உடனே, "சாரி! நீங்க திடீர்னு அவர் பெயரைச் சொன்னதும் சட்னு ஞாபகம் வரல" என்றான் சமாளிக்கும் விதமாக.

"அவரை கடைசியா எப்ப பாத்தீங்க?"

"வேலை கிடைச்சதும் வேற வீட்டுக்குப் போயிட்டேன். அப்புறம் அவரோட தொடர்பு விட்டுப் போச்சு."

"அவரையும் தேடிப் பிடிச்சு நாங்க பேட்டி கண்டோம். அவர் ரொம்ப வரறுமையிலதான் இருக்காரு. ஆனா உங்களை நினைச்சுப் பெருமைப்படறாரு" என்றார் நெறியாளர் தொடர்ந்து.

இந்தப் பேட்டியைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று நினைத்தபோது பரத்தின் உடல் முழுவதிலும் ஒரு அவமான உணர்ச்சி பரவியது.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 54
 பொச்சாவாமை (அலட்சியத்தால் ஏற்படும் மறதி)

குறள் 532:
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.

பொருள்:
நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதி கொன்று விடும்.
 அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...