Wednesday, August 25, 2021

504. தேர்வுக் குழு

"இன்டர்வியூ முடிஞ்சு போச்சு. யாரைத் தேர்ந்தெடுக்கப் போறோம்?" என்றார் பர்சனல் மானேஜர் சுந்தரம்.

"இது டிபார்ட்மென்ட் மானேஜருக்கான புரொமோஷன் இன்டர்வியூ. அந்த மானேஜர் உங்க கீழதான் வேலை செய்யப் போறாரு. அதனால உங்க கருத்துதான் முக்கியம்" என்றார் ஜெனரல் மானேஜர் ராஜு, டிவிஷனல் மானேஜர் செல்வத்தைப் பார்த்து.

செல்வம் பதில் சொல்வதற்குள், "நாமதான் ரெண்டு பேரை ஷார்ட்லிஸ்ட் பண்ணிட்டோமே, அந்த ரெண்டு பேருக்குள்ள ஒத்தரைதானே தேர்ந்தெடுக்கணும்? உங்க சாய்ஸ் என்ன?" என்றார் சுந்தரம்.

'இதைத்தானே ஜி எம் எங்கிட்ட கேட்டாரு? நீ பர்சனல் மானேஜர்னு உன் கெத்தைக் காட்டிக்கறதுக்காக இதே கேள்வியைத் திருப்பிக் கேக்கணுமாக்கும்?' என்று மனதுக்குள் நினைத்து எரிச்சலடைந்த செல்வம், ராஜுவைப் பார்த்து, "சார்! ராம், நீலகண்டன் ரெண்டு பேர்ல, என்னோட சாய்ஸ் நீலகண்டன்தான்!" என்றார்.

"நீலகண்டனா? அவரோட புரொஃபைல் ஒண்ணும் அவ்வளவு இம்ப்ப்ரஸிவா இல்லையே?" என்றார் சுந்தரம்.

'அப்புறம் எப்படி அவரை ஷார்ட்லிஸ்ட் பண்ணினீங்க?' என்று மீண்டும் மனதுக்குள் கேட்டுக் கொண்ட சுந்தரம், "நீங்க புரொஃபைலைப் பாக்கறீங்க. நான் ஆளைப் பாக்கறேன்!" என்றார்.

"கரெக்ட். ரெண்டு பேர்கிட்டேயும் நீங்கதனே நேரடியாப் பழகறீங்க? அதனாலதான் உங்க கருத்து முக்கியம்னு நான் சொன்னேன்" என்ற ராஜு, "இதை ஃபைனலைஸ் பண்றதுக்கு முன்னால ரெண்டு பேரோட சிறப்புகள் என்ன, குறைகள் என்னங்கறதைப் பட்டியல் போட்டுடலாம்" என்றார்.

அடுத்த சில நிமிஷங்களுக்கு, மூன்று பேருமாகச் சேர்ந்து ராம், நீலகண்டன் இருவரின் சிறப்புகளையும், குறைகளையும் பட்டியலிட்டனர்.

"இரண்டு பேரோட சிறப்புகளையும் குறைகளையும் பட்டியல் போட்டுட்டோம். சிறப்புகளுக்கு பாசிடிவ் மார்க்கும், குறைகளுக்கு நெகடிவ் மார்க்கும் போட்டுப் பாத்தா, நிகர பாசிடிவ் மார்க் யாருக்கு அதிகமா இருக்கும்னு நினைக்கிறீங்க?" என்றார் ராஜு செல்வத்தைப் பார்த்து.

"நிச்சயமா ராம்தான் பெட்டர். ரெண்டு பேரோடயும் பழகின என் பொதுவான அனுபவத்தை வச்சு, முதல்ல நீலகண்டன்தான் பெட்டர் சாய்ஸ்னு நினைச்சேன். நீங்க சொன்ன இந்த அணுகுமுறைப்படி பாத்தா ராம்தான் பெட்டர்னு நிச்சயமாத் தெரியுது" என்றார் செல்வம்.

"வெரி குட்! ராமைத் தேர்ந்தெடுக்கறதுன்னு நாம மூணு பேரும் ஒருமனதா முடிவு செஞ்சுடலாமா?" என்றார் ராஜு.

மற்ற இருவரும் மௌனமாகத் தலையசைத்தனர்.

செல்வம் எழுந்து சென்ற பிறகு, சுந்தரம் ராஜுவிடம், "செல்வத்துக்கு பயஸ் இருக்கு சார்! நீலகண்டனைத்தான் தேர்ந்தெடுக்கணும்னு இன்டர்வியூவுக்கு முன்னாலேயே முடிவு செஞ்சுட்டாருன்னு நினைக்கிறேன். உங்க யோசனைப்படி, ரெண்டு பேரோட நிறை குறைகளைப் பட்டியல் போட்டப்பறம்தான் அவர் தன் மனசை மாத்திக்கிட்டாரு" என்றார்.

"பயஸ் இருக்கறது அவருடையு குறையா இருக்கலாம். ஆனா அவர்கிட்ட நிறைய நிறைகள் இருக்கு. நியாய உணர்வு இருக்கு. தான் ஒரு முடிவுக்கு வந்தப்பறம் கூட, மத்தவங்க சொல்றதைக் கேட்டு அதில இருக்கிற நியாயத்தை எடை போட்டுப் பாக்கற திறந்த மனப்பான்மை இருக்கு. அதனால, ஆன் பாலன்ஸ் அவர்கிட்ட பாசிடிவ் குணங்கள்தான் மேலோங்கி இருக்கு! கான்ட் யூ ஸீ திஸ்?" என்றார் ராஜு.

அவர் சொல்வதை ஏற்றுக் கொள்வது போல் தலையசைத்தார் சுந்தரம். 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 51
 தெரிந்து தெளிதல்

குறள் 504:
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

பொருள்:
ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வர வேண்டும்.
 அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...