Tuesday, August 24, 2021

503. இலக்கியச் சொற்பொழிவு

அந்த ஊர் இலக்கிய மன்ற ஆண்டுவிழாவில் 'இலக்கியக் கடல்' சுந்தரலிங்கம் கலந்து கொண்டு சிறப்புச் சொற்புழிவு ஆற்றப் போகிறார் என்ற செய்தி இலக்கிய மன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி, அந்த ஊர்ப் பொதுமக்களுக்கும் பெரும் உற்சாகத்தை அளித்தது.

சுந்தரலிங்கம் என்ற பெயர் தமிழ் இலக்கிய உலகில் அதிகம் மதிக்கப்பட்ட பெயர்களில் ஒன்று. அவர் அளவுக்குத் தமிழ் இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தவர்கள் சமகாலத்தில் வேறு யாரும் இல்லை என்று சொல்வார்கள். 

அதிகம் அறியப்படாத நூல்கள் உட்படப் பல தமிழ் இலக்கியப் படைப்புகளைக் கற்று அவற்றின் நுணுக்கமான பொருட்களை அறிந்திருந்தது மட்டுமின்றி, அவற்றிலிருந்து ஆயிரக் கணக்கான செய்யுட்களை மனப்பாடமாகவும் சொல்லக் கூடியவர் அவர். 

எதிர்பார்க்கப்படியே அந்தக் கூட்டத்துக்கு இலக்கிய மன்றத்தில் உறுப்பினர் அல்லாதவர்களும் அதிக அளவில் வந்திருந்தனர். பலர் உட்கார இடமின்றி பின்னால் நின்று கொண்டிருந்தனர்.

சுந்தரலிங்கத்தின் பேச்சு ஆறிவுபூர்வமாகவும், சுவாரசியமாகவும் இருந்தது.

" 'கடன் பெற்றார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்ற வரி எந்தக் காப்பியத்தில் இடம் பெற்றிருக்கிறது என்று கேட்டால் உங்களில் பலரும் சொல்லி விடுவீர்கள்" என்று சொல்லி விட்டு அரங்கத்தைப் பார்த்தார் சுந்தரலிங்கம்.

"கம்பராமாயணம்" என்ற பதில் பலரிடமிருந்தும் வந்தது.

சுந்தலிங்கம் பெரிதாகச் சிரித்து விட்டு, "இது கம்பராமாயணத்தில் உள்ள வரி இல்லை. நன்கு படித்தவர்கள் பலர் கூட இவ்வாறு தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பலரும் இது கம்பன் எழுதியது என்று காலம் காலமாக்க் கூறி வருவதால், இந்தத் தவறான கருத்து ஆழமாக வேறூன்றி விட்டது. சிலர் இதை அருணாசலக் கவிராயர் எழுதியதாகச் சொல்கிறார்கள். அதுவும் தவறு. தனிப்படல் திரட்டு என்ற நூலில் இடம் பெற்றுள்ள ஒரு கவிதை வரி இது. இதை எழுதியவரின் பெயர் தெரியவில்லை. 'கடன் கொண்ட நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்பதுதான் சரியான வரி. இப்படித்தான் பல விஷயங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு நிலைபெற்று விட்டன!" என்றார்.

தொடர்ந்து,"இங்கே கடவுளை வணங்குபவர்கள் பலர் இருப்பீர்கள். அவர்களுக்காக, கம்பராமாயணத்திலிருந்து அனுமனைப் பற்றிய ஒரு துதியைக் கூறி என் உரையை நிறைவு செய்கிறேன்.

" ' அஞ்சிலே ஒன்று பெற்றான்
    அஞ்சிலே ஒன்றைத் தாவி, 
    அஞ்சிலே ஒன்று ஆறாக, ஆரியர்க்காக ஏகி
    அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
    அஞ்சிலே ஒன்றை வைத்தான்
    அவன் எம்மை அளித்துக் காப்பான்.

"இதன் பொருள் பஞ்சபூதங்களில் ஒன்றான வாயுவுக்குப் பிறந்தவனான அனுமன், பஞ்சபூதங்களில் ஒன்றான கடலைத் தாண்டுமுகமாக பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாயத்தில் பறந்து, பஞ்சபூதங்களில் ஒன்றான பூமியின் புதல்வி சீதையைக் கண்டு, பஞ்சபூதங்களில் ஒன்றான தீயை இலங்கையில் வைத்தான். அவன் நம்மைக் காப்பான என்பது. பஞ்சபூதங்களையும் வைத்து எழுதப்பட்ட கவிதை இது" என்று கூறி உரையை முடித்தார்.

கரவோலி அரங்கை அதிர வைத்தது.

நிகழ்ச்சிக்குப் பிறகு, அந்த இலக்கிய மன்ற உறுப்பினர்கள் ஒரு ஓட்டலில் சுந்தரலிங்கத்துக்கு விருந்தளித்தனர்.

பல உறுப்பினர்கள் சுந்தரலிங்கத்தின் அருகே வந்து அவர் பேச்சைப் பாராட்டி விட்டுச் சென்றார்கள். 

விருந்து முடிந்து எல்லோரும் கிளம்பத் தொடங்கியபோது, ஒரு இளைஞன் சற்றுத் தயங்கியபடி சுந்தரலிங்கத்திடம் வந்தான். அப்போது அவர் அருகில் ஒன்றிரண்டு பேர்தான் இருந்தனர்.

"சார் உங்க பேச்சு ரொம்ப அருமை. ஆனா எனக்கு ஒரு சந்தேகம்..." என்றான் மெல்லிய குரலில்.

"சொல்லுங்க தம்பி!" என்றார் சந்தரலிங்கம், அவனை ஊக்குவிக்கும் விதமாக.

"அனுமனைப் பற்றி ஒரு செய்யுள் சொன்னீர்களே, அது கம்பரால் எழுதப்பட்டதாக அறிஞர்கள் ஏத்துக்கலேன்னு கேள்விப்பட்டிருக்கிறேன்..."

"உனக்கு எப்படித் தெரியும்?" என்றார் சுந்தரலிங்கம் சற்றே அதிர்ச்சியுடன்.

"நான் பள்ளிக்கூடத்தில படிக்கறப்ப என் பள்ளி ஆசிரியர் சொல்லி இருக்காரு. இது பக்தர்களுக்குக் கேட்க நல்லா இருக்கும், ஆனா இது கம்பன் கவிதை இல்லை, நல்ல கவிதை அமைப்பு கொண்டது கூட இல்லேன்னு சொல்லி இருக்காரு. மத்தபடி எனக்கு இலக்கிய அறிவு எதுவும் கிடையாது" என்றான் இளைஞன், தவறாக ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கிறோமோ என்ற அச்சம் நீங்காதவனாக.

சுந்தரலிங்கம் பதில் சொல்லவில்லை. அதற்குள் மன்றச் செயலாளர் அங்கே வந்து, "கிளம்பலாமா?" என்றதும் இளைஞனை மௌனமாக ஒருமுறை பார்த்து விட்டு அவருடன் சென்று விட்டார்.

வீட்டுக்குப் போனதும், முதல் வேலையாகத் தன்னிடம் இருந்த கம்பராமாயணப் பதிப்பை எடுத்துப் பார்த்தார்.

இளைஞன் கூறியது உண்மை என்று உறுதியாயிற்று.

'இவ்வளவு ஆழமாகப் படித்தும் எப்படி இதை கவனிக்காமல் விட்டோம் என்று தன்னை நொந்து கொண்டார் சுந்தரலிங்கம்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 51
 தெரிந்து தெளிதல்
குறள் 503
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.

பொருள்:
அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்து பார்க்குமிடத்தில் அறியாமை இருக்கும். அவ்வாறு இல்லாமல் இருப்பது அரியது.                
                                                                குறள் 504 
                                                                குறள் 502                                                                                                                                                                                                 
     அறத்துப்பால்                                                                                காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...