Tuesday, August 3, 2021

499. பீட்டரின் தோல்வி

"தலைவர் கூப்பிட்டிருந்தாரே, என்ன விஷயம்?" என்றான் பீட்டர்.

"வழக்கமான வேலைதான். அவருக்குத் தொந்தரவு கொடுக்கற ஒரு ஆளோட கதையை முடிக்கணும். அவ்வளவுதான்!" என்றான் மாசிலாமணி.

"ஆளு யாரு?"

விவரங்களை மாசிலாமணி கூறியதும், "யாரோ ஊர் பேர் தெரியாத ஆளா இருப்பான் போலருக்கு. அவனைப் போட்டுத் தள்ள நம்மளை மாதிரி ஆளுங்க வேணுமா என்ன?" என்றான் பீட்டர்.

"ஆளு யாரா இருந்தா நமக்கு என்ன? நம்ம தொழிலை நாம செய்யப் போறோம்!"

"சொல்லுங்க. என்ன செய்யணும், எப்படிச் செய்யணும்?"

திட்டத்தை விளக்கினான் மாசிலாமணி.

"எவ்வளவோ பெரிய ஆளையெல்லாம் போட்டிருக்கோம்? இவன் ஒரு சாதரணமான ஆளு. இவனை ஒண்ணும் செய்ய முடியலேன்னு வந்து நிக்கறியே?" என்றான் மாசிலாமணி, கோபத்துடன்.

"நானும் அப்படித்தான் நினைச்சேன். எதுக்கு இவ்வளவு பேரை அழைச்சுக்கிட்டு போகச் சொல்றீங்கன்னு கூட நினைச்சேன். ஆனா என்ன செய்யறது? அவனை நெருங்கக் கூட முடியலையே!"

"என்ன பேச்சுடா இது? அதிரடியாப் போய்த் தாக்கிட்டு, அவன் கதையை முடிச்சுட்டு வர வேண்டியதுதானே? அவன் என்ன கோட்டையில இருக்கானா, இல்லை, அவனைப் பாதுகாக்க அடியாளுங்க இருக்காங்களா?" என்றான் மாசிலாமணி.

அதெல்லாம் இருந்தா, அடிச்சுத் தள்ளிக்கிட்டுப் போயிருப்பமே! தனக்குன்னு தனி பாதுகாப்புப் படையே வச்சிருந்தானே பால்ராஜ், அவன் படையை அடிச்சு விரட்டிட்டு அவனைப் போடலியா? 

"இவன் அப்படி இல்லீங்க. ஒரு சின்ன வீட்டிலதான் இருக்கான். நாங்க அந்தத் தெருவுக்குள்ள நுழைஞ்சதுமே, எதையோ மோப்பம் பிடிச்ச மாதிரி ஊர்க்காரங்க பல பேரு அவன் வீட்டு முன்னால வந்து நின்னுட்டாங்க. 

"அவங்க கையில ஆயுதம் எதுவும் இல்லைதான். அவங்க சண்டை போடற ஆளுங்களும் இல்ல. ஒரு தட்டு தட்டினா கீழே விழுந்துடக் கூடியவங்கதான். ஆனா அவங்க நின்ன உறுதியைப் பாத்தா, ஒவ்வொத்தரும் 'என் பொணத்தை மிதிச்சிக்கிட்டுத்தான் இந்த வீட்டுக்குள்ள போக முடியும்'னு சவால் விட்டுட்டு நிக்கற மாதிரி இருந்தது. 

"அத்தனை பேரையும் கொன்னு போட்டுட்டா, வீட்டுக்குள்ள போய் அவனைப் போட முடியும்? 'நிலம் வாங்கற விஷயமா ஒத்தரைப் பாக்க வந்தோம், தப்பான ஊருக்கு வந்துட்டோம் போலருக்கு'ன்னு சொல்லிச் சமாளிச்சுட்டுத் திரும்பி வந்துட்டோம்" என்றான் பீட்டர்.

"எனக்கு அவமானமா இருக்கு பீட்டர். சரி விடு. நானே போய் முடிச்சுட்டு வரேன்" என்றான் மாசிலாமணி, கோபம் குறையாமல்.

'நீங்க போனாலும் இதேதான் நடக்கப் போகுது! போயிட்டு வாங்க. அப்பதான் நான் சொன்னதோட உண்மை உங்களுக்குப் புரியும்!' என்று பீட்டர் முணுமுணுத்தது மாசிலாமணியின் காதில் விழவில்லை.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 50 
 இடனறிதல்
குறள் 499 
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.

பொருள்:
ஒருவருக்குப் பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும், அவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல.

Read 'A Routine Job' the English version of this story by the same author.
                                                                    குறள் 500
                                                                    குறள் 498                                                                             
   அறத்துப்பால்                                                                                       காமத்துப்பால்
                                                                             

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...