Sunday, August 8, 2021

500. பராந்தகனின் முடிவு

அண்டை நாட்டுடனான போருக்குத் தலைமை தாங்கி நடத்தி வெற்றி கண்ட இளவரசன் பராந்தகனை நாடு முழுவதும் கொண்டாடியது.

"மன்னருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், இளவரசரே படைகளுக்குத் தலைமையேற்றுச் சென்று போரை நடத்தி இருக்கிறார். போரில் அவருடைய வீரச் செயல்கள் பற்றிப் படைவீரர்கள் பலரும் அலுக்காமல் திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்."

"அவருடைய குதிரை மீது அம்பு பாய்ந்து, அது கீழே விழ்ந்ததும், இளவரசர் இன்னொரு குதிரைக்குக் கடக் காத்திருக்காமல், தரையில் நின்றபடியே,  குதிரை மீது அமர்ந்திருந்த எதிரி நாட்டு மன்னனுடன் போரிட்டு, அவனை வெட்டி வீழ்த்தினாராம். எதிரி நாட்டு மன்னன் வீழ்ந்ததும், எதிரிப்படைகள் சரணடைந்து விட்டனராம். எத்தனையோ போர்களைக் கண்ட நம் மன்னரின் சாதனையையே நம் இளவரசர் மிஞ்சி விட்டதாகப் படைத் தளபதிகள் வெளிப்படையாகவே கூறுகிறார்களாம்!"

"மன்னர் கோபித்துக் கொள்ளப் போகிறார்!"

"தன் மகன் தன்னை மிஞ்சும் வகையில் பெருமை அடைவது, ஒரு தந்தைக்குப் பெருமை அளிக்கக் கூடிய விஷயம் என்று வள்ளுவப் பெருந்தகை கூறி இருக்கிறரே!"

"அது சரிதான். மன்னர் நோய்வாய்ப்பட்டிருக்கிற நிலையில், அவருக்குப் பிறகு நம் நாட்டைக் காப்பாற்ற பொருத்தமும், தகுதியும் உள்ளவராக நம் இளவரசர் இருப்பது பற்றி மக்களாகிய நாமும் பெருமை கொள்ளலாமே!"

"நம் நாட்டின் கிழக்கு எல்லைப் பகுதியில், புரட்சிக்காரர்களின் அட்டூழியங்கள் எல்லை மீறி விட்டன. அவர்களுக்கு மக்கள் ஆதரவு இல்லாவிட்டாலும், வன்முறை மூலம் மக்களை மிரட்டி, அந்தப் பகுதியைத் தனி நாடு போல் அவர்கள் ஆட்சி செய்கிறார்கள். படைகளை அனுப்பி, ஓரிரு நாட்களில் அவர்களை அழித்து விடலாம்தான். ஆனால், அப்பாவி மக்கள் பலரும் கொல்லப்படுவார்களே என்பதால், மன்னர் பொறுமையாக இருக்கிறார்" என்றார் அமைச்சர்.

"இதை எப்படிச் சகித்துக் கொண்டிருக்கிறீர்கள் அமைச்சரே? புரட்சிக்காரர்களை உடனே அடக்காவிட்டால், அவர்கள் அதிக வலுப்பெற்று விடுவார்கள். அங்கிருக்கும் மக்களுக்கும் நம் மீது நம்பிக்கை போய் விடும்" என்றான் இளவரசன் பராந்தகன்.

"நீங்கள் கூறுவது சரிதான். புரட்சிக்காரர்களை அடக்க ஒரு சரியான உத்தியைத்தான் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். ஐம்பது பேர் கொண்ட ஒரு  ரகசியப் படையை உருவாக்கி இருக்கிறோம். அவர்களுக்குப் பயிற்சியளித்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் சாதாரண மனிதர்கள் போல் அந்தப் பகுதிக்குள் ஊடுருவி புரட்சிப்படையின் தலைவர்களைத் தந்திரமாகக் கொன்று விடுவார்கள். தலைவர்கள் கொல்லப்பட்டதும், மற்றவர்கள் பயந்து அடங்கி விடுவார்கள்" என்றார் அமைச்சர்.

"நல்ல யோசனைதான். அந்த ரகசியப்படைக்கு நானே தலைமை தாங்கிச் செல்கிறேன்" என்றான் இளவரசன்.

"வேண்டாம் இளவரசே! இது மிகவும் ஆபத்தான செயல். அந்த ஐம்பது பேரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்துத்தான் இந்தப் பணியில் இறங்குகிறார்கள். நீங்கள் இந்த நாட்டின் இளவரசர். அடுத்த மன்னராகப் போகிறவர். போர்க்களத்தில் நீங்கள் காட்டிய வீரத்தால். உங்கள் புகழ் அண்டை நாடுகளில் கூடப் பரவி இருக்கிறது. ஆனால், இது வழக்கமான போர் அல்ல. ஆபத்து நிறைந்த இந்தச் செயலில் தாங்கள் ஈடுபடக் கூடாது. மன்னர் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டார். நானும் இதில் ஈடுபட வேண்டாமென்று உங்களை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார் அமைச்சர், கெஞ்சும் குரலில்.

ஆனால், பராந்தகன் அமைச்சரின் பேச்சைக் கேட்கவில்லை. அவன் தந்தை முதலில் ஆட்சேபித்தபோதும், அவரிடம் வற்புறுத்தி அனுமதி வாங்கி, ஐம்பது பேருடன் ரகசியமாகக் கிளம்பி விட்டான்.

ராந்தகன் தலைமையிலான சிறிய படை புரட்சிக்காரர்களின் ஆதிக்கம் மிகுந்திருந்த பகுதிக்குள் ஊடுருவிப் பத்து நாட்கள் ஆகி விட்டன. இந்தப் பத்து நாட்களில், புரட்சிப்படையின் முக்கியத் தலைவர்கள் இருவரை அவர்கள் கொன்று விட்டனர். 

தங்கள் தலைவர்கள் இருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டது புரட்சிப் படையினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருந்தாலும், எல்லோருக்கும் தலைவராக இருந்த தண்டபாணி, இரண்டாம் நிலைத் தலைவர்களை ஊக்கப்படுத்தி வைத்திருந்தார்.

"இது நிச்சயமா நம் மன்னரோட சதி வேலைதான். நம்மைக் கொல்ல ரகசியமா யாரையோ அனுப்பி இருக்காங்க. நாம ஜாக்கிரதையா இருக்கணும். நம்ம பகுதிக்குப் புதுசா வந்திருக்கறவங்க யாருன்னு பாத்து, அவங்களைக் கண்காணிக்கணும். உங்களுக்கு யார் மேலேயாவது சந்தேகம் வந்தா,, எங்கிட்ட சொல்லுங்க. அவங்களை எப்படி விசாரிக்கணுமோ, அப்படி விசாரிப்போம்" என்று இரண்டாம் நிலைத் தலைவர்களிடம் ரகசியமாகக் கூறினார் தண்டபாணி.

ரவு நேரத்தில், மரங்கள் அடர்ந்திருந்த அந்தச் சாலை வழியே நடந்து சென்று கொண்டிருந்தான் பராந்தகன். அவனுக்குப் பாதுகாப்பாக, சற்றுப் பின்னால் இரண்டு வீரர்கள் வந்து கொண்டிருந்தனர்.

ஒரு மரத்துக்குக் கீழே பராந்தகன் நடந்து கொண்டிருந்தபோது, இருட்டில் மறைந்தபடி மரத்தின் மேல் அமர்ந்திருந்த ஒரு சிறுவன் பராந்தகனின் கழுத்தில் குதித்தான். இருவரும் கீழே விழுந்தனர்.

என்ன நடந்தது என்று உணர்ந்து இளவரசன் சமாளித்துக் கொள்வதற்குள், "நீதானேடா எங்கப்பாவைக் கொன்றது?" என்றபடியே, இளவரசனின் கழுத்தில் தன் கையிலிருந்த கத்தியை ஆழமாகப் பாய்ச்சினான் அந்தச் சிறுவன்.

இளவரசனுக்குப் பாதுகாவலாக வந்து கொண்டிருந்த இரண்டு வீரர்களும் அருகே வந்து பார்ப்பதற்குள், இளவரசனின் உயிர் பிரிந்திருந்தது. சிறுவன் விரைந்து ஓடி மறைந்து விட்டான்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 50 
 இடனறிதல்  
குறள் 500
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.

பொருள்:
பாகனுக்கு அடங்காததும், தன்னை எதிர்த்துப் பிடித்த வீரனைத் தன் தந்தத்தால் தாக்கித் தூக்கியதுமான ஆண்யானை, கால் புதையும் சேற்றில் சிக்கிக் கொண்டால், நரிகூட அதைக் கொன்று விடும்.

Read 'Parantaka's Valour' the English version of this story by the same author.
 அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...