Friday, May 28, 2021

487. கிடைக்காமல் போன பதவி உயர்வு

நாடு முழுவதும் கிளைகள் கொண்டிருந்த அந்தப் பெரிய பொதுத்துறை நிறுவனத்தில் ஒரு இளநிலை அதிகாரியாக நான் பணிக்குச் சேர்ந்தபோது, அங்கு அந்த அளவுக்குத் தொழிற்சங்க ஆதிக்கம் தாண்டவமாடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

வலுவான தொழிற்சங்கத்தைச் சமாளிக்க முடியாமல் திணறிய வலுவற்ற உயர்நிலை நிர்வாகத்தின் செயலற்ற தன்மையைப் பயன்படுத்தி, அலுவலக உதவியாளர்கள் என்று அழைக்கப்பட்ட வெள்ளைக் காலர் ஊழியர்கள், கிளை நிர்வாகிகளுக்கும், மற்ற அதிகாரிகளுக்கும் பெருமளவில் தொல்லை கொடுத்து வந்தனர்.

நான் வேலைக்குச் சேர்ந்த கிளையின் நிர்வாகியாக இருந்த சண்முகம் மிகவும் மென்மையானவர். அந்தக் கிளையில் பணி புரிந்த சந்துரு ஊழியர் சங்கத்தில் ஒரு சிறிய பொறுப்பில் இருந்தான். அதனால், எல்லா ஊழியர்களையும் கட்டுப்படுத்திக் கொண்டும், அதிகாரிகளிடம் அலட்சியமாகவும், எடுத்தெறியும் விதத்திலும் பேசியும் வந்தான்.

தினம் ஒருமுறையாவது கிளை நிர்வாகி சண்முகத்தின் அறைக்குள் சென்று அவரிடம் ஏதாவது ஒரு பிரச்னையை எழுப்பிச் சண்டை போட்டு விட்டு வருவான் சந்துரு. அவன் உள்ளே நுழைவதைப் பார்த்ததுமே அவர் முகம் மாறி விடும்!

சண்முகம் எதுவும் பேசாமல் அவன் பேசுவதைப் பொறுமையாகக் கேட்டு விட்டுக் கடைசியில் சரி என்று தலை அசைப்பார், அல்லது "ஹெட் ஆஃபீஸ்ல கேட்டுச் சொல்றேன்" என்பார்.

ஒருமுறை அவரிடம், "ஏன் சார் இந்த சந்துருவிடம் இப்படிப் பணிஞ்சு போறீங்க? முடியாதுன்னு உறுதியா இருந்தா அவனால என்ன செய்ய முடியும்?" என்றேன் நான்.

"உங்களுக்கு எதுவும் தெரியாது. நீங்க புதுசு. உங்க வேலையை மட்டும் பாருங்க!" என்றார் சண்முகம் என்னிடம் கோபத்துடன்.

'சந்துருவிடம் காட்ட முடியாத கோபத்தை என்னிடம் காட்டுகிறார், பாவம்!' என்று நினைத்துப் பேசாமல் வந்து விட்டேன்.

நான் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவன் என்பதாலோ என்னவோ, சந்துரு என்னிடம்  நட்பாகவே பழகினான். அலுவலக வேலைகளைச் சீர் குலைக்கும் விதத்தில் அவன் நடந்து கொள்வது பற்றி அவன் மீது எனக்குக் கோபம் இருந்தாலும், நான் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் நட்பாகவே நடந்து கொண்டேன்.  

அலுவலக வேலை நேரம் ஐந்து மணி வரை என்பதால், அலுவலக உதவியாளர்கள் அனைவரும் சரியாக ஐந்து மணிக்கு அலுவலகத்தை விட்டுக் கிளம்பி விடுவார்கள். 

அதிகாரிகளான நாங்கள் மட்டும் எங்கள் வேலைகளை முடித்து விட்டுத்தான் கிளம்புவோம். பெரும்பாலும் நாங்கள் கிளம்ப எட்டு மணிக்கு மேல் ஆகி விடும்.

"இந்த அசிஸ்டன்ட்ஸ் எல்லாம் கொஞ்சமாவது வேலை செஞ்சா, நாம இவ்வளவு கஷ்டப்பட வேண்டாம். எல்லாருமே நல்லா வேலை செய்யக் கூடியவங்கதான். இந்தச் சந்துருதான் அவங்களைக் கெடுக்கறான்" என்று சண்முகம் அவ்வப்போது அலுத்துக் கொள்வார்.

ருநாள்  மாலை ஐந்து மணி. உதவியாளர்கள் அனைவரும் கிளம்பி விட்டனர். தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டிய ஒரு முக்கியமான கடிதத்தை டைப்பிஸ்ட் மீனாட்சி டைப் அடித்துக் கொண்டிருந்தாள்.

அப்போது அங்கே வந்த சந்துரு, "அஞ்சு மணிக்கு மேல ஏன் வேலை செய்யறே?" என்று மீனாட்சியிடம் கோபமாகக் கூறியபடி, டைப்ரைட்டரிலிருந்த கடிதத்தை உருவினான்.

அப்போது தன் அறையிலிருந்து விரைந்து வெளியே வந்த சண்முகம், "மிஸ்டர் சந்துரு. அது முக்கியமான கடிதம். இன்னிக்கு ராத்திரியே ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய் ஆர் எம் எஸ்ல போஸ்ட் பண்ணணும். அதை டைப் அடிச்சு முடிக்க அஞ்சு நிமிஷம்தான் ஆகும். தயவு செஞ்சு, கொஞ்சம் அவங்க அதை டைப் பண்ண அனுமதியுங்க" என்றார் கெஞ்சும் குரலில்.

"நீ ஏன் இன்னும் உக்காந்திருக்க? வீட்டுக்குக் கிளம்பு!" என்று மீனாட்சியிடம் அதிகாரமாகக் கூறிய சந்துரு, சண்முகத்தைப் பார்த்து, "மிஸ்டர் சண்முகம், மானேஜ்மென்ட்ல ஓவர்டைம் கொடுக்கறதை நிறுத்திட்டாங்க. அதனால அஞ்சு மணிக்கு மேல ஒரு நிமிஷம் கூட  யாரும் வேலை செய்ய மாட்டோம்" என்று உரத்த குரலில் கூறி விட்டுக் கிளம்பி விட்டான்.

அலுவலகத்தில் இருந்த அனைவரும் சண்முகத்தைப் பரிதாபமாகப் பார்க்க, அவர் மிகவும் அவமானப்பட்டவராகத் தன் அறைக்குத் திரும்பினார். 

தட்டச்சு தெரிந்த ஒரு அதிகாரி அந்தக் கடிதத்தை டைப் செய்து கொடுக்க, அது அனுப்பப்பட்டது.

ருடங்கள் ஓடி விட்டன. சண்முகம் ஓய்வு பெற்று விட்டார். நான் ஒரு கிளையின் நிர்வாகி ஆகி விட்டேன். 

தொழிற்சங்கத்தின் ஆதிக்கத்தைக் குறைக்கும் வகையில், நிர்வாகம் பல உதவியாளர்களுக்குப் பதவி உயர்வு கொடுத்து அதிகாரிகளாக்கி, உதவியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டே வந்தது. 

தொழிற்சங்கத்தில் பொறுப்புகளில் இருந்த பலர் தங்கள் ஆதிக்கமும், அதிகாரமும் குறைந்து கொண்டே வருவதை உணர்ந்து, பதவி உயர்வை ஏற்றுக் கொண்டு அதிகாரிகள் ஆகி விட்டனர். அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றவர்களுள் சந்துருவும் ஒருவன்.

அதிகாரியாக ஆனதும், தொழிற்சங்கத்தின் பாதுகாப்பு இனி இருக்காது என்பதை உணர்ந்த பின் சந்துருவின் போக்கே மாறி விட்டது. கடுமையாக உழைத்துத் தன் வேலையைச் சிறப்பாகச் செய்வதில் கவனம் செலுத்த ஆரம்பித்தான் அவன்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, நான் நிர்வாகியாக இருந்த கிளையிலேயே அவன் ஒரு முதல் நிலை அதிகாரியாகப் பணி புரிந்து வந்தான். 

இரண்டாம் நிலை அதிகாரியாகப் பதவி உயர்வு அளிப்பதற்கான தேர்வு அப்போது நடைபெற்றது. சந்துரு நேர்முகத் தேர்வுக்குச் சென்று வந்தான். தனக்குப் பதவி உயர்வு நிச்சயம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையுடன் இருந்தான் அவன். 

 எந்த ஒரு ஊழியரைப் பற்றிய மதிப்பீடும் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு, அது அவரிடம் காட்டப்பட வேண்டும் என்ற வெளிப்படைத் தன்மை உள்ள நடைமுறையை எங்கள் நிறுவனம் பின்பற்றி வந்ததால், அவன் செயல்பாடு சிறப்பதாக இருப்பதாக நான் அவனைப் பற்றி மதிப்பீடு அளித்திருந்ததும் அவனுக்குத் தெரியும்.

ஆயினும் அவனுக்குப் பதவி உயர்வு கிடைக்கவில்லை. அவனுக்கு அதில் பெரும் ஏமாற்றம்தான்.

"கவலைப்படாதீங்க, சந்துரு. அடுத்த வருஷம் உங்களுக்குக் கண்டிப்பா ப்ரமோஷன் கிடைக்கும்" என்று நான் அவனுக்கு ஆறுதல் கூறினேன்.

சில வாரங்களுக்குப் பிறகு ஒரு திருமணத்தில் சண்முகத்தைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பல விஷயங்களைப் பற்றிப் பேசிய பின் சந்துருவைப் பற்றிப் பேச்சு வந்தது.

"அவன் உங்க பிராஞ்சிலதான் இருக்கானாமே!" என்றார் சண்முகம்.

"ஆமாம்,சார். ஆனா இப்ப ரொம்ப மாறிட்டாரு. நல்லா வேலை செய்யறாரு. இந்த ப்ரமோஷன் லிஸ்ட்ல அவர் பேரு இருக்கும்னு எல்லாருமே எதிர்பார்த்தோம். கிடைக்காததில அவருக்கு ரொம்ப ஏமாற்றம்தான்" என்றேன் நான்.

"இருக்காதா பின்னே?" என்றார் அவர், ஒரு மாதிரி சிரித்தபடி.

"என்ன சார்?" என்றேன் நான், ஒருவித சந்தேகத்துடன்.

"இப்ப இருக்கிற ஜி.எம். எனக்குக் கீழே வேலை செஞ்சவர்தான். அவர்தானே லிஸ்டை ஃபைனலைஸ் செஞ்சாரு?" என்றார் சண்முகம், ஒருவித விஷமச் சிரிப்புடன்.

அவர் பங்களிப்புதான் இது என்று புரிந்தவனாக, "என்ன இருந்தாலும் சந்துருவுக்கு ஒரு வாய்ப்பு போயிடுச்சே சார்!" என்றேன் நான், உண்மையான வருத்தத்துடன்.

"அடுத்த வருஷம் கிடைச்சுட்டுப் போகுது. ஒரு வருஷம் தள்ளிப்  போகப் போகுது. அவ்வளவுதானே?" என்றார் அவர் சிரித்துக் கொண்டே.

சட்டென்று சிரிப்பு மறைந்து அவர் முகம் இறுகியது. "அன்னிக்கு டைப்பிஸ்டை அந்த முக்கியமான லெட்டரை டைப் பண்ண விடாம பண்ணி, நான் கெஞ்சியும் கேக்காம அலட்சியமாப் போனானே, அப்ப நான் உணர்ந்த அவமானத்தை இப்ப நினைச்சாலும் என் நெஞ்சு கொதிக்குது. ஏன், நீங்களும்தான் பாத்தீங்களே அதை?" என்றார் அவர்.

சில விநாடிகளுக்கு முன் அவர் முகத்தில் இருந்த மலர்ச்சி இப்போது அடியோடு மறைந்திருந்தது.

அரசியல் இயல்
அதிகாரம் 49 
 காலமறிதல் 
குறள் 487
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

பொருள்:
ஒருவர் தனக்குத் தீங்கு செய்தால், அப்போதே அவர் மீது தன் கோபத்தை வெளிக்காட்டாமல், கோபத்தை மனதுக்குள் வைத்திருந்து சரியான நேரம் பார்த்துக் காத்திருப்பார் அறிவுடையவர்.
குறள் 488               
              குறள் 486                            
                                              
அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

2 comments:

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...